ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்களும் ஆன்மீகத் தலங்களும் உள்ளன. அவற்றில் ஒன்று மலை நகரமான சோனமார்க் ஆகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த சோனமார்க் நகரம் கடல் மட்டத்திலிருந்து 2740 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. சோனமார்க் என்றால் தங்கச் சமவெளி என்று பொருள்படும்.
வசந்த காலத்தில் இந்த நகரத்தில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கி நகரமே மஞ்சள் மயமாக காட்சி அளிக்கும். அதை வைத்தே இந்த நகருக்கு சோனமார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுபோல் இங்கிருக்கும் மலைச் சிகரங்களிலும் சூரியனின் கதிர்கள் படும்போதும் அவை மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும்.
சோனமார்க் நகரம், பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும் மலையேற்றம் போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு சொர்க்கபுரியாகத் திகழ்கிறது. குறிப்பாக பனிச்சறுக்கிற்கான எல்லா பாதைகளும் சோனமார்க் நகரத்திலிருந்தே தொடங்குகின்றன.
அதனால் சோனமார்க் பனிச்சறுக்கிற்கு மிகவும் பரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது. மேலும் இயற்கை அழகையும், ஏரிகளையும் மற்றும் ஓங்கி உயர்ந்த மலைகளையும் ஒருங்கே கொண்டிருக்கும் இந்த சோனமார்க் ஒரு முழுமையான சுற்றுலாத் தலம் என்றால் அது மிகையல்ல.
இதுபோக அமர்நாத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த சோனமார்க் நகரத்தில் கூடாரம் இட்டு தங்குவதும் உண்டு.
சோனமார்க் நகரத்தை சூழந்திருக்கும் கத்சார், கிருஷ்ணாசர் மற்றும் கங்காபால் போன்ற ஏரிகள் பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கும். இங்கு இருக்கும் இயற்கைக் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரும் என்பதில் ஐயமில்லை.
கத்சார் என்ற ஏரி சோனமார்க்கிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் பனி படர்ந்த மரங்களும் ஆல்பின் மலர்களும் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக குளிர்காலத்தில் பனியால் உறைந்திருக்கும் சத்சார் ஏரி மற்றும் பால்டன் போன்ற ஏரிகளின் அழகை இந்த ஏரியிலிருந்து ரசிக்கலாம்.
சோனமார்க் நகரை சுற்றியுள்ள இன்னுமொரு முக்கிய ஏரி கிருஷ்ணாசர் ஏரியாகும். இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3801 மீ உயரத்தில் உள்ளது. நிச்சினி கணவாய் வழியாக பனிச்சறுக்கு மூலம் இந்த ஏரிக்குச் செல்லலாம்.
மேலும் இந்த ஏரியில் தூண்டில் இட்டு மீன் பிடித்து மகிழலாம். சோனமார்க்கில் சத்சர் என்ற ஒரு ஏரியும் உள்ளது. இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 3600 மீ உயரத்தில் அமையப்பெற்றிருக்கிறது.
சுற்றுலா பயணிகள் பனிச்சறுக்கு மூலம் இந்த சத்சார் ஏரிக்கு செல்லலாம். இந்த ஏரியைச் சுற்றி இருக்கும் வானுயர்ந்த மரங்களும் மற்றும் ஆல்பின் மலர்களும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
மேற்சொன்ன ஏரிகளை தவிர்த்து சோனமார்க் பகுதியில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாஜ்வாஸ் பனி ஆறு ஓடுகிறது. இந்த பனியாறு சோனமார்க்கில் முடிவடைகிறது.
இந்த ஆற்றை சுற்றி அடர்த்தியான காடுகளும், பைன் மரங்களும் உள்ளன. இந்த பகுதியில் கூடாரம் இட்டு தங்கினால் அது புதுமையான அனுபவமாக இருக்கும். இந்த ஆறு ஆண்டு முழுவதும் பனியால் உறைந்திருக்கும்.
சோனமார்க் பகுதியில் அமைந்திருக்கும் இன்னொமொரு முக்கிய பகுதி நிலாக்ரேட் ஆறு ஆகும். இந்த ஆறு சோனமார்க் பள்ளத்தாக்கில் பாய்ந்து ஓடுகிறது. இறுதியில் பால்டிக் காலணி என்ற பகுதியில் சந்தி நதியில் இந்த ஆறு கலக்கிறது. இந்த ஆற்றின் தண்ணீர் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதோடு இந்த தண்ணீர் பல மருத்துவக் குணங்களை கொண்டிருக்கிறது.
சோனமார்க்கில் ஏராளமான கணவாய்கள் உள்ளன. குறிப்பாக சத்சரன் களி கணவாய் என்று அழைக்கப்படும் சத்சரன் கணவாய் கடல் மட்டத்திலிருந்து 3680 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த கணவாய் பனிச்சறுக்கு செய்ய ஒரு அருமையான பகுதியாகும். ஜூன் முதல் அக்டோபர் வரையுள்ள மாதங்களில் இந்த பகுதிக்குச் செல்லலாம். மேலும் சோஜி-லா கணவாய், நிச்சினை கணவாய், கிருஷ்ணாசர் கணவாய், பல்டல் மற்றும் விஷன்சர் ஏரி போன்றவைக் கண்டிப்பாக சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் உள்ளன.
சோனமார்க் பகுதிகளுக்கு விமானம் மூலம் மிக எளிதாக செல்லலாம். சோனமார்க்கிலிருந்து 70 கிமீ தொலைவில் ஸ்ரீநகர் அமைந்திருக்கிறது. ஸ்ரீநகரில் ஷேக் உல் அலாம் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு, புதுடில்லி, மும்பை மற்றும் சன்டிகார் போன்ற நகரங்களிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சோனமார்க்கின் அருகில் உள்ள ரயில் நிலையம் என்றால் அது 70 கிமீ தொலைவில் இருக்கும் ஸ்ரீநகர் ரயில் நிலையம் ஆகும். ஆனால் இந்த ரயில் நிலையத்தில் இன்னும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே ஜம்மு தாவி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி சோனமார்க் பகுதிகளுக்கு செல்லலாம்.
ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு போன்ற பகுதிகளிலிருந்து சோனமார்க் பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் மற்றும் சொகுசு டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் சோனமார்க்கை மிக எளிதாக அடையலாம்.
ஆண்டு முழுவதும் சோனமார்க் பகுதிகள் மிக குளிராக இருக்கும். குறிப்பாக குளிர் காலத்தில் இப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்பநிலை இருக்கும். எனவே மே முதல் அக்டோபர் போன்ற மாதங்களிலும் மற்றும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதங்களிலும் இந்த பகுதிகளுக்கு சென்று வரலாம்.
மே முதல் அக்டோபர் மாதங்களில் இந்த பகுதிகளுக்கு சென்றால் இயற்கை காட்சிகளை அள்ளிப் பருக முடியும். நவம்பர் முதல் ஏப்ரல் மாதங்களில் சென்றால் இங்கு பெய்யும் பனிப் பொழிவை ரசித்து மகிழலாம்.