உத்தரப்பிரதேச மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம் எனும் அந்தஸ்தை இந்த சோன்பத்ரா மாவட்டம் பெற்றிருக்கிறது. விந்திய மலையின் தென்கிழக்கு மலைத்தொடர்களில் இந்த மாவட்டம் அமைந்திருக்கிறது. இங்கு சோனே ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாய்கிறது. சோன்பத்ரா மாவட்டத்தின் சுற்றுலா அம்சங்களில் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த புராதன சின்னங்கள், கோட்டைகள் மற்றும் மாளிகைகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
சோன்பத்ரா மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
சோன்பத்ராவில் பல சுவாரசியமான சின்னங்களும் மாளிகைகளும் நிரம்பியுள்ளன. இங்கு 5ம் நூற்றாண்டைச்சேர்ந்த விஜய்கர் எனும் கோட்டை ஒரு முக்கிய வரலாற்று சின்னமாக அமைந்திருக்கிறது. இது கோல் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த கோட்டையில் நுணுக்கமான பாறைச்சிற்ப வடிப்புகள், கல்வெட்டுக்குறிப்புகள் மற்றும் குகை ஓவியங்கள் ஆகியவை காணப்படுகின்றன. இது தவிர காஷி மன்னர்களால் கட்டப்பட்ட நௌகர் கோட்டையும் ஒரு முக்கியமான கோட்டையாகும்.
தற்போது அரசு விருந்தினர் இல்லமாக இது இயங்கி வந்தாலும் இந்த சிறிய கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் எனும் அடையாளத்தை கொண்டுள்ளது. அகோரி கோட்டை மற்றொரு முக்கியமான கோட்டை இங்கு மூன்று புறங்களிலும் மூன்று ஆறுகளால் சூழப்பட்டு அமைந்துள்ளது.
சோன்பத்ராவில் சல்கான் ஃபோசில் பார்க் எனும் பூங்காவும் அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் புவியியல் ரீதீயான முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த பூங்கா கருதப்படுகிறது.
இங்குள்ள மரப்படிமங்கள் புரோடிரோஜோயிக் எனும் பரிணாம காலத்தை (புவி யுகம்) சேர்ந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இவை 1400 மில்லியன் வருடங்கள் (14 கோடி வருடங்கள்) பழமை வாய்ந்தவையாகும். மேலும், இங்கு முக்கா எனும் நீர்வீழ்ச்சி ஸ்தலம் ஒன்றும் உள்ளது. இப்பகுதியில் உள்ள முக்கியமான இயற்கை நீர்விழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
விந்திய மலைப்பகுதிகளில் காணப்படும் குகை ஓவியங்களுக்கும் இந்த சோன்பத்ரா மாவட்டம் பிரசித்தி பெற்றிருக்கிறது. இவற்றில் குறிப்பாக கைமுர் மலைகளில் உள்ள லக்கானியா குகைகள் பிரசித்தமாக அறியப்படுகின்றன.
வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த குகை ஓவியங்கள் 4000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. கொத்வா பஹார் அல்லது கொரமாங்கர் என்பது மற்றொரு முக்கியமான குகை ஓவிய ஸ்தலமாகும்.
இம்மாவட்டத்தில் இரண்டு முக்கியமான அணைகளும் அமைந்திருக்கின்றன. ரிஹாந்த் அணை மற்றும் பர்க்கன்தாரா என்பவையே அவை. லோரிகா ராக் எனும் பிரம்மாண்ட பாறை அமைப்பையும் இங்கு பயணிகள் பார்க்கலாம்.
ஆன்மீக வழிபாட்டு தலங்கள் என்று பார்த்தால் சோன்பத்ரா மாவட்டத்தில் ஷிவ் த்வார் எனும் சிவன் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த கோயிலில் 11ம் நூற்றாண்டைச்சேர்ந்த சிவன் பார்வதி கருங்கல் சிலைகளை காணலாம்.
ஷீஜன் கோலத்தில் இந்த சிலைகள் காட்சியளிக்கின்றன. சோன்பத்ரா மாவட்டத்தின் சுற்றுலா அம்சங்கள் கலாரசிகர்களுக்கும் சுற்றுலா விரும்பிகளுக்கும் பிடித்தமானதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சோன்பத்ராவுக்கு விஜயம் செய்ய ஏற்ற காலம்
நவம்பர் முதல் மார்ச் வரை உள்ள காலம் சோன்பத்ராவுக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது.
எப்படி செல்வது?
சோன்பத்ராவுக்கு விமானம், ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து போன்ற பயண மார்க்கங்களின் வழியே எளிதில் செல்லலாம்.