பக்மாரா நகரம் சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் தலைநகரமாகும். மேலும் இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இந்நகரம் தனது தெற்கு எல்லையை பங்களாதேஷ் நாட்டுடன் பகிர்ந்து கொள்கிறது.
மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிப்பகுதிகள் என்று கதம்பமான இயற்கை அமைப்புடன் மிளிர்வதால் இந்த நகரம் சுற்றுலா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சொர்க்கமாக அறியப்படுகிறது.
பல அரியவகை தாவர இனங்களை இங்கு பார்க்கலாம். பூச்சிகளை பிடித்து தின்னும் ‘மேமாங் கொக்சி’ எனும் அதிசய செடி இப்பகுதியில் வளர்கிறது. பக்மாரா காட்டுயிர் சரணாலயமும் இப்பகுதியின் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக பெயர் பெற்று விளங்குகிறது.
கண்கவரும் தில்ஸா மலை எழுச்சிகள் மற்றும் புரண்டோடும் சிம்சங் ஆறு போன்றவை இப்பகுதிக்கு முதன் முதலாக வருகை தரும் பயணிகளை சொக்க வைக்கும் இயல்புடையவையாகும்.
கரடு முரடான சாலைகளை கொண்டுள்ளதால் இந்த நகரத்தின் பிரதான போக்குவரத்து வசதிகளாக ஜீப்புகள் மற்றும் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒன்றிரண்டு நாட்கள் தங்கி இயற்கையை ரசிக்க விரும்பும் பயணிகளுக்காக ‘பக்மாரா வைல்ட்லைஃப் ரிசார்ட்’ எனும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு இயற்கையை ரசித்தபடி உண்டு மகிழ வசதியாக திறந்த வெளி உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோடைக்காலத்தின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நீந்தி மகிழ ஒரு அழகிய நீச்சல் குளம் ஒன்றும் இந்த விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. டுரா நகரத்திலிருந்து சுற்றுலாப்பேருந்துகள் மூலம் பயணிகள் இந்த பக்மாராவை வந்தடையலாம்.