இந்த பல்பக்ராம் எனும் இடம் கரோ மக்களின் புனித பூமியாக கருதப்பட்டு வருகிறது. பல அதிசயங்களை நிகழ்த்தும் ஆவி ரூபங்கள் இப்பகுதியில் வசிப்பதாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. மனித அறிவுக்கு அப்பாற்பட்ட பல அதிசயங்களை இந்த ஆவிகள் நிகழ்த்துவதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். பல்பக்ராம் தேசிய பூங்கா இங்கு ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது.
நீர் எருமை எனப்படும் ஒரு அருகி வரும் இனம் இந்த தேசிய பூங்காவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர சிவப்பு பாண்டா கரடிகளையும் இங்கு பார்க்கலாம். ஆசிய யானைகள் மற்றும் பைசன் எருமைகள் போன்றவையும் இந்த பூங்காவில் வசிக்கின்றன.
பல்பக்ராம் பகுதியில் இன்னும் பார்க்க வேண்டிய சுவாரசிய அம்சமாக இங்கு ‘போல்டாக் மட்சு கரம்’ எனும் பெரிய மரம் ஒன்று வீற்றிருக்கிறது. இந்த மரத்தின் அடிப்பாகத்தில் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு பள்ளம் காணப்படுகிறது.
இது தவிர கரி போன்ற கருப்பு நிறத்துடன் காட்சியளிக்கும் சிடிமக் எனும் குளத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். மற்றொரு விசேஷ அம்சமாக ‘மட்சுரு’ எனும் பரந்த பாறைப்பகுதி அமைந்திருக்கிறது.
இதில் விலங்குகளின் கால் தடங்கள் பதிந்திருக்கும் அதிசயத்தை காணலாம். சுற்றியுள்ள பாறை அமைப்புகள் யாவும் வழவழப்பாக காட்சி அளிக்கும் நிலையில் இந்த பாறை மீது மட்டும் விலங்குகளின் கால் தடங்கள் பதிந்திருப்பது ஒரு புவியியல் அதிசயம் என்றே சொல்லலாம்.
இவை தவிர ‘அரேங் பாதாள்’ எனும் ஒரு பிரம்மாண்ட பாறை அமைப்பு ஒன்று அதன் அருகில் செல்லும் எந்த உயிரினத்தையும் தனது குழிக்குள் உறிஞ்சி இழுத்து விடுவதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அந்த உயிரினம் மீண்டு வர முடியாது என்றும் கூறப்படுகிறது.
கோஞ்சோ டரே பாறை முகடு பள்ளத்தாக்கு பகுதியும் மற்றொரு சுவராசியமான இயற்கை எழில் அமைப்பாகும். இங்கு துர்தேவதைகள் வசிப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
டுரா மற்றும் வில்லியம்நகர் போன்ற இடங்களிலிருந்து இந்த பல்பக்ராம் ஸ்தலத்துக்கு வருவதற்கு சுற்றுலா வாகனங்கள் கிடைக்கின்றன.