சிரவணபெலகொலா நகரத்துக்குள் நுழைவதற்கு முன்பே பயணிகள் 17.5 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் கோமதேஸ்வரர் சிலையை பார்க்க முடியும். 978ம் ஆண்டில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது ஒரு காலத்தில் சிரவணபெலகொலா நகரம் பிரசித்தமான ஜைன திருத்தலமாக விளங்கியிருப்பதற்கான ஆதாரமாக திகழ்கிறது.
சிலைகளும் கல்வெட்டுக்குறிப்புகளும்
சிரவணபெலகொலா எனும் சொல்லுக்கு ‘வெள்ளைத்தடாக முனிவர்’ என்று பொருள் சொல்லலாம். இந்த சிலை உலகத்திலேயே மிகப்பெரிய ஒற்றைக்கல் சிற்பமாக புகழ்பெற்றுள்ளது. இந்த சிலை தவிர சிரவணபெலகொலா நகரம் பல வரலாற்று காட்சிகளுக்குள் பயணிகளை அழைத்துச்செல்லும்படியான சின்னங்களையும் கொண்டுள்ளது.
சந்திரகுப்த மௌரிய மன்னர் பல ஆண்டுகள் போரில் ஈடுபட்டும் ராஜ்ய பரிபாலனம் செய்தும் மனம் வெறுத்து இறுதியில் மனச்சாந்தியையும் அமைதியையும் நாடி இந்த சிரவணபெலகொலா ஸ்தலத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் ஜைனம் தழைத்தோங்குவதற்கு அவரின் பங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது.
சிரவணபெலகொலா பல வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களையும் அதிக அளவில் ஈர்க்கிறது. இங்கு 600 – 1830 ம் ஆண்டுகள் வரையிலான கல்வெட்டுக்குறிப்புகள் ஏராளம் காணப்படுகின்றன.
கங்க, ஹொய்சள மற்றும் உடையார் ராஜ வம்சங்களை பற்றிய சுமார் 800 கல்வெட்டு குறிப்புகள் இங்கு காணக்கிடைக்கின்றன. இந்த புராதன வரலாற்று ஆவணங்கள் நமக்கு அக்கால இந்திய நாகரிகம் ஆட்சி மற்றும் இதர தகவல்களை அளிக்கின்றன.
சிரவணபெலகொலாவுக்கு அருகில் சன்னராயப்பட்டணா பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சன்னராயப்பட்டணாவுக்கு செல்வதற்கு பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. அங்கிருந்து உள்ளூர் போக்குவரத்து மூலம் இந்த வரலாற்று சுற்றுலாஸ்தலத்தை சுற்றிப்பார்க்கலாம்.