சிரவணபெலகொலாவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த பண்டாரி பசாதி கோயிலை பார்ப்பது நல்லது. இந்த கோயில் 266 அடி நீளம் மற்றும் 78 அடி அகலம் கொண்டு இந்த சிரவணபெலகொலா ஸ்தலத்திலேயே பெரிய கோயிலாக அறியப்படுகிறது.
இது 1126ம் ஆண்டு ஹொய்சள மன்னரின் நிதியமைச்சராக இருந்த ஹுல்லா என்பவரால் கட்டப்பட்டுள்ளது. பண்டாரி பசாதி கோயில் அல்லது சதுர்விம்ஷாதி ஜைனாலயா என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் விஜயநகர காலத்தை சேர்ந்த புக்காராயா கல்வெட்டு ஒன்று உள்ளது.
மேலும் இந்த கோயிலில் உள்ள குறிப்புகளிலிருந்து ஜைனர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே நடைபெற்ற போர்களைப்பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. உள்ளூர் நம்பிக்கைகளின்படி இந்த பண்டாரிபசாதி கோயில் பல்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு பகுதியாக கட்டப்பட்டிருக்கலாம் என்பதாக நம்பப்படுகிறது.
இந்த கோயிலில் சபா மண்டபம், அந்தரலா, கர்ப்ப கிருகம், முக மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. கடவுளர்கள் மற்றும் தேவியர்களான யக்ஷி, பிரம்மா மற்றும் பத்மாவதி சிலைகள் அந்தரலா பகுதியில் காணப்படுகின்றன.இவை தவிர 24 தீர்த்தங்கரர்களின் மூன்றடி உயர சிலைகளும் ஒரு அலங்கார பீட அமைப்பின்மீது வைக்கப்பட்டுள்ளன.
பண்டாரி பசாதி கோயில் மூன்று அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய வாயில்களைக் கொண்டுள்ளது. இவற்றில் மிருகங்கள் மற்றும் மனிதர்களின் சிற்ப வடிப்புகள் காணப்படுகின்றன.பண்டாரி பசாதி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்கு வாயிலுக்கருகில் 12 கரங்களுடன் காட்சியளிக்கும் இந்திரன் சிற்பத்தைப்பார்க்கலாம். பிரதான வாசலில் மனஸ்தம்பமும் காணப்படுகிறது.