சிரவணபெலகொலாவின் பிரதான அம்சமான இந்த கோமதேஸ்வரர் சிலையை பயணிகள் அவசியம் காணவேண்டும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. பிரம்மாண்டமாக 17 மீட்டர்(58 அடி) உயரத்தில் நிற்கும் இந்த ஒற்றைக்கல் மஹாசிற்பம் உலகிலேயே மிக உயரமான ஒற்றைக்கல் சிற்பம் என்ற புகழைப்பெற்றுள்ளது.
பார்க்கும் யாவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் அபாரமான சிற்பக்கலை அம்சத்தையும் வரலாற்று கம்பீரத்தையும் இந்த சிலை பெற்றுள்ளது. முதல் முறை இந்த சிலையை பார்க்கும் யாரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இதன் கம்பீரமும் காட்சியும் உள்ளது.இந்த சிலை கங்க ராஜவம்ச மன்னரான ராஜமல்லா மற்றும் அவரது தளபதி சாமுண்டராயாவால் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சிலை ஸ்தலத்தில் கன்னடம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்குறிப்புகளை பயணிகள் காணலாம்.
இந்த குறிப்புகளில் கோமதேஸ்வரர் சிலையை உருவாக்கிய மன்னர் மற்றும் அவரது தளபதி ஆகியோரின் முயற்சிகளைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. இது ஒரு அற்புதமான வரலாற்று ஆவணமாகும்.12 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் மஹாமஷ்டாபிஷேக திருநாளின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக ஜைன சமூகத்தினர் இந்த சிரவணபெலகொலா நகரத்துக்கு வருகை தருகின்றனர். இந்த மஹாமஷ்டாபிஷேகம் என்பது கோமதேஸ்வரர் சிலையின் மீது அபிஷேகம் செய்விக்கப்படும் சடங்கு ஆகும். அந்நாளில் இந்த அற்புதச்சிலையின்மீது குங்குமம், நெய், பால், தயிர், தங்க நாணயங்கள் போன்றவை இன்ன பிற புனிதப்பொருட்களுடன் சேர்த்து அபிஷேகிக்கப்படுகின்றன.