ஸ்ரீ நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஷாலிமார் தோட்டங்கள், ஸ்ரீ நகரின் புகழ் பெற்ற முகலாய தோட்டங்களில் ஒன்றாகும். ஷாலிமார் என்ற வார்த்தைக்கு 'காதலின் / அன்பின் இருப்பிடம்' என்று பொருளாகும்.
இந்த தோட்டம் ஷாலிமார் பூங்கா, பைய்ஸ் பக்ஷ், சார் மினாரின் தோட்டம் மற்றும் ஃபாரா பக்ஷ் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது. முகலாய மன்னர் ஜஹாங்கீர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக 1619-ம் ஆண்டு இந்த தோட்டத்தை உருவாக்கினார்.
இந்த தோட்டம் மூன்று சமதளப்பரப்புகளாக வேறு வேறு காரணங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புற தோட்டம் திவான்-இ-ஆம் என்றும், நடுவில் உள்ள தோட்டம் திவான்-இ-காஸ் அல்லது பேரரசரின் தோட்டம் என்றும், மேலேயுள்ள தோட்டம் அரச குடும்ப பெண்களுக்காகவும் என பிரிக்கப்பட்டுள்ளது.
பெர்சியாவில் உள்ள சஹார் பாக் தோட்டத்தின் வடிவத்தை போலவே ஷாலிமார் தோட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த தோட்டத்தின் நீரூற்றுகளின் பின்னணியில் வைக்கப்பட்டு, இரவில் எண்ணைய் விளக்குகளால் ஒளிர வைக்கப்படும் 'சினி கானாஸ்' அல்லது வளைந்த மாடங்கள் இதன் அழகை மேலும் கூட்டுவதாக உள்ளன.
இந்த மாடங்களில் தற்போது அவற்றின் பின்னால் ஊற்றிக் கொண்டிருக்கும் தண்ணீரின் நிறத்திற்கேற்ற பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஷாலிமார் தோட்டத்தைச் சுற்றிலும் சுமர் 31 ஏக்கர் பரப்பளவில் 'சினார் மரங்கள்' வைக்கப்பட்டுள்ளன.