துங்க நதிக்கரையின் கரையில் அமைந்துள்ள அமைதியான இந்த நகரில்தான் ஹிந்துக்களால் போற்றப்படும் ஆன்மீக குரு ஆதி சங்கராச்சாரியார் தன் முதல் மடத்தை நிறுவினார். அதிலிருந்து எழில் கொஞ்சும் இந்த சிருங்கேரி நகரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் முழுதும் விஜயம் செய்யும் ஒரு புனிதத்தலமாகவும் இருந்து வருகிறது.
சிருங்கேரியின் பின்னணியில் சில ஐதீக கதைகளும் கூறப்படுகின்றன. அதாவது, கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் சிருங்கேரி ஒரு பசுமை நிறைந்த வளமான பூமியாக இருந்ததாகவும், இங்கு வந்த குரு ஆதி சங்கராச்சாரியார் இந்த மண்ணின் மகிமையை ஒரு அதிசயத்தின் மூலம் அறிந்து தன் மடத்தினை இங்கு நிர்மாணிக்க முடிவு செய்ததாக அந்தக் கதை கூறுகிறது.
துங்கா நதிக்கரையில் உலவிக்கொன்டிருந்தபோது சங்கராச்சாரியார் ஓரிடத்தில் நாகப்பாம்பு ஒன்று கர்ப்பமுற்றிருந்த ஒரு தவளையின் மீது வெயில் தாக்காதவாறு தன் படத்தினை விரித்து பாதுகாத்துக்கொன்டிருந்த அதிசயத்தை கண்டு, தன் இரையும்,எதிரியுமான தவளையின் மீது ஒரு நாகப்பாம்பினை கருணை காட்ட வைக்கும் அளவுக்கு அந்த மண் சக்தி வாய்ந்ததாக சங்கராச்சாரியார் அறிந்து கொண்டதாக அந்த ஐதீகம் கூறுகிறது.
இன்று சிருங்கேரியில் குரு சங்கராச்சாரியாரின் சாரதா பீடமானது தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது. மேலும், புகழ் பெற்ற வித்யாஷங்கர் ஆலயம் மற்றும் சாரதாம்பா கோயில் இரண்டும் சிருங்கேரியில் அவசியம் பார்க்க வேண்டியவை.
வித்யாஷங்கர் ஆலயத்தில் 12 தூண்கள் 12 கிரக ராசிகளை ஒத்திருக்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது பிரசித்தம். மேலும் இந்த ஆலயம் வானியல் தத்துவங்களை ஒட்டி கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சிருங்கேரியில் வருடம் முழுவதுமே மிதமான இதமான வெப்பநிலை நிலவுகிறது. அருகில் மங்களூரில் விமான நிலையம் இருக்கிறது. மேலும் பெங்களூரிலிருந்து 330 கி.மீ தொலைவில் உள்ள இந்த நகரத்துக்கு பல வழிகளிலும் பஸ் வசதிகள் உண்டு. ஷிமோகா மற்றும் காடூர் இரண்டும் அருகில் உள்ள ரயில் நிலையங்கள்.