ஸ்ரீசைலம் நகருக்கு சுற்றுலா வரும்போது பயணிகள் தவறாமல் செல்ல வேண்டிய இடங்களில் முக்கியமானது இந்த ஸ்ரீசைலம் சரணாலயம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் பாதுகாப்பு காடுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஸ்ரீசைலம் சரணாலயம் 3568 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
ஸ்ரீசைலம் சரணாலத்தில் விலங்குகள் ஒன்றையும் உங்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் இதன் முரட்டுத்தனமான நிலப்பரப்பும், ஆழமான மலை இடுக்குகளும் சிறப்பானதொரு சாகச அனுபவத்தை தரும்.
அதோடு சரணாலத்தின் உள்ளே செல்லச் செல்ல ஏராளமான மூங்கில் மரங்களை உள்ளடக்கிய அடர்த்தியான இலையுதிர் காடுகள் உங்களுக்கு சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை கொடுக்கும்.
ஸ்ரீசைலம் சரணாலயத்தின் காடுகளில் புலிகள், சிறுத்தைகள், காட்டுப் பூனைகள், கரடிகள், மான்கள், கழுதை புலிகள், எறும்புதிண்ணிகள், பனை புனுகு பூனைகள் போன்ற எண்ணற்ற விலங்கினங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
மேலும் இந்த சரணாலயம் ஸ்ரீசைலம் அணைக்கு வெகு அருகிலேயே இருப்பதால் பலவகைப்பட்ட முதலைகளையும் நீங்கள் இங்கு பார்க்கலாம்.