சுல்தான் பத்தேரி நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் எடக்கல் குகைகள், அம்புகுத்தி மலையில் கற்காலத்தின் உன்னத நினைவுச் சின்னமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இங்கு காணப்படும் தொன்மையான சிற்பங்களும், கல்வெட்டுகளும் வரலாற்று காதலர்களின் தீராத தாகத்தை தீர்க்கும் கலைப் பிரவாகமாய் திகழ்ந்து வருகிறது.
எடக்கல் குகைகளில் மொத்தம் மூன்று தொகுதிகளாக குகைகள் அமைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மனித இருப்பின் சுவடுகளாக அறியப்படுகின்றன.
இந்த குகைகளின் சுவர்களில் எண்ணற்ற தொன்மையான கல்வெட்டுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.
இவை யாவும் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளாக கருதப்படுவதால் உலகம் முழுக்க உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றியலாளர்கள் கவனத்தை பெற்றுள்ளன. மேலும் இந்த குகைப் பகுதிகளில் காலை நேரங்களில் நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.