சர்குஜா மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் வட பகுதியில் அமைந்திருக்கிறது. இது உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை தனது எல்லைகளாக கொண்டிருக்கிறது. இம்மாவட்டத்தின் 50 சதவீத நிலப்பரப்பு பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியாகவே காணப்படுகிறது.
இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 17 வது இடம் வகிக்கும் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்த சர்குஜா மற்றும் ஜஷ்பூர் மாவட்டங்கள் தேயிலை உற்பத்திக்குரிய சாதகமான சூழலை பெற்றிருக்கின்றன.
இந்த மாவட்டத்தோடு சம்பந்தப்பட்ட பல்வேறு புராணக்கதைகள் இப்பிரதேசத்தில் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று - ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தபோது இப்பகுதிக்கு வருகை தந்தார் என்பதாகும்.
எனவே இந்த பகுதியில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதாதேவியின் பெயரின் அழைக்கப்படும் ஊர்களை பார்க்க முடிகிறது. ராம்கர், சீதா-பெங்க்ரா மற்றும் லட்சுமண்கர் போன்ற இடங்களை உதாரணமாக சொல்லலாம்.
சத்தீஸ்கரின் இதர மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களை போல இந்த சர்குஜா பிரதேசமும் பல்வேறு ராஜ வம்சங்களால் ஆளப்பட்ட வரலாற்று பின்னணியை கொண்டிருக்கிறது.
நந்த வம்சத்தில் தொடங்கி, அடுத்து மௌரிய வம்சத்தினரை தொடர்ந்து ரக்ஷால் வம்சத்தினர் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது ஒரு சமஸ்தான ராஜ்ஜியமாக திகழ்ந்திருந்தது.
ஹஸ்தேவ் ஆறு, ரிஹாந்த் ஆறு மற்றும் கன்ஹார் ஆறு போன்றவை பாயும் படுகைப்பகுதியாக இந்த சர்குஜா மாவட்டம் அமைந்துள்ளது. கிரீன் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ‘தி லாஸ்ட் மைக்ரேஷன்’ இந்த சர்குஜா வனப்பகுதியை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.
இந்தப்படம் இப்பிரதேசத்தில் வசிக்கும் யானைகளின் வாழ்க்கை மற்றும் புலம்பெயர்தல் பற்றியதாக எடுக்கப்பட்டிருந்தது.
சர்குஜா மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா சிறப்பம்சங்கள்
வரலாற்றுப்பின்னணி மற்றும் பழங்குடி பாரம்பரியம் மட்டுமல்லாமல் பல்வேறு அம்சங்களுக்காக இந்த சர்குஜா மாவட்டம் சுற்றுலாப்பயணிகள் விரும்பி தேடிவரும் இடமாக விளங்குகிறது.
புராதன சிதிலங்கள் மற்றும் கலைநயம் மிக்க சிற்பங்கள் போன்றவற்றை கொண்டுள்ள சில முக்கியமான ஸ்தலங்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவை தவிர பல நீர்வீழ்ச்சிகளும் இங்கு காணப்படுகின்றன.
இவற்றில் மைன்பாட் எனும் இடத்தில் உள்ள டைகர் பாயிண்ட் நீர்வீழ்ச்சி ஒன்றாகும். ராம்கர் மற்றும் சீதா பெங்ரா போன்ற இடங்களில் உள்ள குகைகளில் காணப்படும் வரலாற்று காலத்துக்கு முந்தைய ஓவியங்கள் பயணிகளின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளன.
ராமர் தனது 14 ஆண்டுகால வனவாசத்தின்போது இந்த ராம்கர் பகுதியில் தங்கியிருந்ததாக உள்ளூர் புராணக்கதைகள் கூறுகின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோயில் நகரம் என்று பிரசித்தமாக அறியப்படும் அம்பிகாபூர் எனும் நகரமும் இந்த சர்குஜா மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது. வருடம் முழுக்கவும் வற்றாது காட்சியளிக்கும் வெந்நீர் நீரூற்று ஒன்று தாத் பாணி எனும் இடத்தில் உள்ளது.
இந்த ஊற்று நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தீபாதிஹ் எனும் ஸ்தலத்தில் காணப்படும் கோயில் சிதிலங்கள் மற்றும் தீர்த்தக்குளங்கள் போன்றவையும், தேவ்கார் எனும் இடத்தில் வீற்றிருக்கும் தொல்லியல் சான்றுகளும் வரலாற்று ஆர்வலர்களை கவர்ந்து இழுக்கின்றன.
மக்களும், கலாச்சாரமும்!
சர்குஜா மாவட்டத்தின் மக்கள் தொகையில் பழங்குடி இன மக்களே மிகுந்துள்ளனர். பாண்டோ மற்றும் கொர்வா எனப்படும் ஆதிவாசிகள் இன்றும் இங்குள்ள காட்டுப்பகுதிகளில் வசிக்கின்றனர்.
இந்த பாண்டோ இனத்தார் மஹாபாரத பாண்டவர்களின் வம்சாவளியினராகவும், கொர்வா இனத்தார் கௌரவர்களின் வம்சாவளியினராகவும் கருதப்படுகின்றனர். பட்டுப்பூச்சி வளர்ப்பு சர்குஜா மக்களின் பிரதான தொழில்களில் ஒன்றாக உள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் பரியா இன மக்கள் பரியா எனும் மொழியை பேசுகின்றனர். இங்கு நடைபெறும் எல்லா திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களிலும் பழங்குடி நடன வடிவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தவறாமல் நிகழ்த்தப்படுகிறது.
ஆண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்கும் ஷைலா நடனம் எனும் குழு நடனம் இங்கு நடைமுறையில் உள்ள நாட்டுப்புற நடன வடிவமாகும். அறுவடைக்காலமான ஜனவரி மாதம், அரசியல் ஊர்வலங்கள், தேசிய மற்றும் அரசாங்க திருவிழாக்களின் போது இந்த ஷைலா நடனம் தவறாமல் இடம்பெறுகிறது.
இந்த நடனத்தில் மூங்கில் கம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சுவா நடனம் எனும் மற்றொரு நடனக்கலை வடிவம் இளம்பெண்கள் தங்களுக்கு விருப்பமான எதிர்கால கணவர்களை கவர்வதற்காக ஆடுவது போல் நிகழ்த்தப்படுகிறது.
மேலும் குபேரக்கடவுளை கவர்வதற்காகவும் இந்த சுவா நடனம் ஆடப்படுவதுண்டு. கர்மா நடனம் எனும் ஒருவகை நடனத்தில் ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் என இருதரப்பினருமே கலந்துகொண்டு ஆடுகின்றனர்.
இந்த நடனத்தின்போது கரம் எனும் மரத்தைபோற்றி பாடியபடி ஆடுகின்றனர். புனிதமான மரமாக கருதப்படும் இந்த ‘கரம்’ மரத்திற்கு பல்வேறு பூஜைச்சடங்குகளையும் செய்விக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவம்
இப்பகுதியின் வெப்பநிலையானது கோடைக்காலத்தில் மிக அதிகமாகவும் குளிர்காலத்தில் மிகக்குறைந்தும் காணப்படுகிறது.
எப்படி செல்லலாம் சுர்குஜாவுக்கு?
சாலை மார்க்கம் மற்றும் ரயில் மார்க்கமாக சுர்குஜா மாவட்டத்துக்கு வருவது எளிதாக உள்ளது. விமான மார்க்கம் அவ்வளவு சௌகரியமானதாக இருக்க வாய்ப்பில்லை.