சர்குஜா மாவட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில எல்லையை ஒட்டியவாறு இந்த தமோர் பிங்க்லா காட்டுயிர் சரணாலயம் அமைந்திருக்கிறது. தமோர் மலை மற்றும் பிங்கல நல்லா என்று அழைக்கப்படும் மலைகளின் பெயர்களால் இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது.
இந்த சரணாலயம் வழியே பாயும் மோரன் ஆறு பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் சாஹர் நீர்த்தேக்கத்தில் சேர்கிறது.
அம்பிகாபூரிலிருந்து 100 கி.மீ தூரத்திலும் சூரஜ்பூருக்கு வடக்கே 35 கி.மீ தூரத்திலும் இந்த தமோர் பிங்க்லா காட்டுயிர் சரணாலயம் அமைந்திருக்கிறது. இங்கு பலவகையான மரங்கள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் நிரம்பியுள்ளன.
இந்த சரணாலயத்திற்கு அருகில் பிம்ப்ரி ரயில் நிலையம் உள்ளது. இருப்பினும் தகுந்த தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத ஒரு பிரதேசமாக இந்த வனப்பகுதி அமைந்திருக்கிறது. குய் மற்றும் பிஹார்பூர் மலைத்தொடர்கள் இந்த தெற்கு சர்குஜா வனப்பகுதி வழியே நீண்டுள்ளன.
கலவையான இலையுதிர்காடுகளை இந்த சரணாலயம் உள்ளடக்கியிருக்கிறது. சால் மற்றும் மூங்கில் மரங்கள் இந்த காட்டுப்பகுதி முழுதும் வளர்ந்து காணப்படுகின்றன.
புலிகள், சிறுத்தைகள், கரடி, சம்பார் மான், நீல எருது, சிதல் மான், காட்டெருமை போன்ற விலங்குகள் இங்கு வசிக்கின்றன. பல்வேறு பறவையினங்கள் மற்றும் ஊர்வன உயிரிகளும் இந்த சரணாலயத்தில் வாழ்கின்றன.
நவம்பர் முதல் ஜூன் வரையிலான பருவம் இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்ப்பதற்கு உகந்ததாக உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி விமான நிலையம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி விமான நிலையம் போன்றவை அருகிலுள்ள விமான நிலையங்களாகும்.
சூரஜ்பூர் ரயில் நிலையமும் அருகில் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ராம்கோலா அல்லது அம்பிகாபூரில் தங்கிக்கொண்டு இந்த சரணாலயத்திற்கு வருகை தரலாம்.