தலக்காடு நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சோமநாதபுரம் கிராமத்துக்கும் விஜயம் செய்யலாம். இந்த கிராமம் இங்குள்ள ஷீ வேணுகோபால ஸ்வாமி கோயில் மற்றும் ஸ்ரீ சென்னக்கேசவா கோயிலுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.
ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி கோயில் 1296 ம் ஆண்டு ஹொய்சள அரசரான நரசிம்மாவால் கட்டப்பட்டுள்ளது. கேசவா கோயில் என்றும் அறியப்படும் சென்னக்கேசவா கோயில் 1268 ம் ஆண்டு ஹொய்சள தளபதி சோமநாதரால் இரண்டாம் நரசிம்மர் காலத்தில் கட்டுவிக்கப்பட்டுள்ளது.சென்னக்கேசவா கோயில் ஒரு திரிகோண நட்சத்திர வடிவில் அமைந்த மேடையின் மீது எழுப்பப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் பயணிகள் முதலில் தூண்களால் ஆன ஒரு கூடத்தினைக் காணலாம். இந்தக்கூடமானது அந்த திரிகோண கட்டமைப்புகளுக்கான வழியாய் நீள்கிறது.
இந்த சென்னக்கேசவ கோயிலின் முழு கட்டமைப்பும் முழுக்க முழுக்க சிற்ப வடிவமைப்புகளை தாங்கி நிற்கிறது. அதாவது வெறும் சுவரையோ கல்லையோ பயணிகள் ஒரு இடத்தில் கூட இந்த கோயிலில் பார்க்க முடியாது. இந்தக் கோயிலை இப்படி விவரிக்கலாம். ஒரு தேர்ந்த பொற்கொல்லனால் வடிக்கப்பட்ட தங்க ஆபரண அட்டிகை எப்படியிருக்கும்? அப்படி காட்சி அளிக்கின்றது இந்த சென்னக்கேசவ கோயில்.
இதன் சுவர்களில் கடவுள்கள், தேவியர், இசைக்கலைஞர்கள், சிங்கங்கள், குரங்குகள், யானைகள், நடன மங்கையர் மற்றும் யோகிகளின் சிற்பங்கள் காணப்படுகின்றன. 64 சிற்றறைகளைக் கொண்டதாக இங்குள்ள உள் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஆதியில் வேணுகோபாலா, ஜனார்த்தனா மற்றும் கேசவா சிற்பங்கள் இந்த கர்ப்பகிருகத்தில் வைக்கப்பட்டிருந்தன. தற்சமயம் கேசவா சிற்பம் தவிர்த்து மற்ற இரண்டு மட்டுமே உள்ளன.