நேரம் இருப்பின் பயணிகள் தலக்காடு அருகிலுள்ள மற்றொரு முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமான திருமாகூடல் நர்சிபூருக்கும் விஜயம் செய்யலாம். இது தலக்காட்டிலிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் உள்ளது.
இந்த ஸ்தலமானது தென்னிந்தியாவில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்ப மேளா திருவிழா நடைபெறும் இடமாகும். வட நாட்டிலுள்ள பிரயாக் ஸ்தலத்தைப்போன்றே மகிமை உடையதாக ஹிந்துக்களால் கருதப்படும் இந்த ஸ்தலம் தக்ஷிண காசி என்றும் அறியப்படுகிறது.இந்த ஸ்தலத்தில் உள்ள கோயில்களிலேயே குறிப்பிடத்தக்கது குஞ்ச நரசிம்ம ஸ்வாமி கோயிலாகும். இது திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இது அதிக அளவில் பக்தர்களால் விஜயம் செய்யப்படுகிறது.
ஒரு பிரம்மாண்டமான கோபுரம் மற்றும் நான்கு தூண்களாலான மண்டபம் போன்றவை இந்த கோயிலில் காணப்படுகின்றன. வருடாந்தரமாக நடைபெறும் தேர்த்திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர்.கோயில் சார்ந்த ஆன்மீக அம்சங்களைத்தவிர தொல்லியல் அம்சங்களுக்காகவும் இந்த திருமாகூடல் ஸ்தலம் பிரசித்தி பெற்றுள்ளது. புதுக்கற்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள் பல இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சமாதிப்படுகை எச்சங்கள், மண்பாண்டங்கள், சித்திரவரைபாட்டு பொருட்கள், கற்சின்னங்கள், உலோகக் கருவிகள், மணிகள், வளையல்கள், மிருகங்களின் எலும்புக்கூடுகள், மனித எலும்புக்கூடுகள் மற்றும் மரப்பொருட்களின் படிவங்கள் போன்றவை இங்கு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.