புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலானது தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்து ஆலயமாகும். அப்போதைய தஞ்சாவூர் மகாராஜாவான சத்ரபதி வெங்கோஜியின் கனவில் மாரியம்மன் வந்து தான் தஞ்சாவூருக்கு அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புன்னை மரக் காட்டின் நடுவே சிலை வடிவில் இருப்பதாகவும், தனக்கு அங்கே ஒரு கோவில் கட்டுமாறும் கூறினாராம்.
மகாராஜா அங்கு சென்று பார்த்தபொழுது மாரியம்மனின் சிலையைக் கண்டாராம். உடனே அதே இடத்தில் ஒரு கோவிலைக்கட்டி அச்சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தாராம். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் என்ற பெயர்க் காரணம் வந்த கதை இதுவாகும்.
புன்னைநல்லூர் மாரியம்மன் மக்களின் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை எவ்வாறு குணப்படுத்தி அருள்புரிகிறார் என்பது குறித்து மற்றொரு கதை உலவுகிறது.
18 ஆம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட துளஜா மகாராஜாவின் மகள் ஏதோ ஒரு நோயின் காரணமாக பார்வையை இழந்துவிட்டாராம். இக்கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக்கொண்டபின் அவர் இழந்த தனது பார்வையை மீண்டும் பெற்றதாக நம்பப்படுகிறது.