ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழை பெற்றுள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மிகப்பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
நாயக்க மன்னர்கள் காலத்தில் அரண்மனை நூலகமாக உருவாக்கப்பட்ட இந்த நூலகம் அவர்களுக்கு பின் மராட்டா வம்சத்தை சேர்ந்த இரண்டாம் சரபோஜி மன்னரால் மேலும் வளர்க்கப்பட்டிருக்கிறது. 1918ம் ஆண்டிலிருந்து இந்த நூலகம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்துவருகிறது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கென திறக்கப்படும் இந்த பழமையான நூலகத்தில் 1998ம் ஆண்டிலிருந்து கணிணி மயமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. 1807ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட மெட்ராஸ் பஞ்சாங்கம் மற்றும் 1791ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் அச்சிடப்பட்ட பைபிள் படநூல் போன்றவை இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.
நூலக வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் குறித்த பல தகவல்களையும் ஆவணங்களையும் பார்வையாளர்கள் காணலாம்.
தமிழ்நாட்டின் சிந்தனையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய நூலம் இது. இளைய தலைமுறைக்கு இந்த நூலகம் அறிமுகம் செய்யப்படவேண்டியதும் அவசியம்.