பெரியார் காட்டுயிர் சரணாலயம் மற்றும் தேசிய இயற்கைப்பூங்கா என்றழைக்கப்படும் இந்த வளம் பொருந்திய வனப்பகுதி தேக்கடியின் பிரதான சுற்றுலா அம்சமாகும். கேரள மாநிலத்தின் காட்டுச்சுற்றுலா செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைத்துள்ள பெருமையை இந்த சரணாலயம் பெற்றுள்ளது.
பெரியார் ஏரி எனப்படும் செயற்கை ஏரியின் கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த சரணாலயம் அடர்த்தியான பசுமை மாறாக்காடுகளையும், பனி படர்ந்த மலைச்சிகரங்களையும் பச்சை பசேலென்ற பள்ளத்தாக்குப்பகுதிகளையும் தன் அங்கங்களாகவும் எல்லைகளாகவும் கொண்டுள்ளது.
ஏரியின் கரையை ஒட்டி யானைகள் கூட்டம் கூட்டமாக மேய்வதை ஏரியில் படகுச்சவாரி செய்தபடியே ரசிக்கும் காட்சிக்கு இணையான அனுபவம் வேறொன்றுமில்லை எனலாம்.
777 ச.கி.மீ பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த சரணாலயம் 1982ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பு சரணாலயம் எனும் விசேஷ அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
பல்வகையான உயிரினங்களும் தாவர வகைகளும் இந்த சரணாலயத்தில் நிரம்பியிருப்பதால் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பயணிகள் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்கின்றனர்.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி 53 புலிகளும், 62 பாலூட்டி விலங்குகளும் இங்கு வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்திய காட்டெருமை, சாம்பார் மான், கீரி, நரி, எலி மான், இந்திய காட்டு நாய் மற்றும் சிறுத்தைகள் போன்ற விலங்குகளை இங்கு காணலாம்.
மேலும், 320 வகையான பறவையினங்களும் 45 வகையான ஊர்வன உயிரிகளும் இங்கு வசிப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது. இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் வசிக்கும் சுற்றுலாப்பிரியர்கள், காட்டுயிர் ரசிகர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் தவறாமல் ஒரு முறையாவது விஜயம் செய்ய வேண்டிய இயற்கை சொர்க்கம் இந்த பெரியார் காட்டுயிர் சரணாலயம் ஆகும்.