தேக்கடிக்கு அருகில் உள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலம் இந்த வந்தான்மேடு எனும் சிறு நகரமாகும். ஓவியம் போன்ற இயற்கைக்காட்சிகள் சூழ்ந்த இந்த எழில் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும்போது இப்படியும் இயற்கை அழகு தமிழ்நாட்டுக்கருகில் மறைந்து கிடக்கின்றதா என்று வியந்து போவீர்கள்.
இங்கு வாசனைப்பயிர் தோட்டங்கள் பச்சைபோர்வையை வழிய விட்டாற்போன்று அலையலையாய் மடிந்து சரிந்து காட்சியளிக்கின்றன. ஏற்றுமதிக்கெனவே உயர்ரக ஏலக்காய் இங்கு பயிர் செய்யப்படுகிறது.
வந்தான்மேடு நகரைச்சுற்றி பயிர்த்தோட்டங்களுடன் வெல்வெட் பொதிகள் போன்று காட்சியளிக்கும் மலைகளை தரிசிப்பது பயணிகளுக்கு பரவசமூட்டும் அனுபவமாகும். இங்குள்ள நிசப்தம் தவழும் ஏரியை பார்க்கும்போது இயற்கை இவ்வளவு அழகா என்று வியக்க தோன்றும்.
தேக்கடியிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ள இந்த வந்தான்மேடு நகரத்தை சாலை மார்க்கமாக சென்றடையலாம். சூழலியல் சுற்றுலாப்பிரதேசங்களான முரிக்கடி, பண்டிக்குழி, காவி மற்றும் செல்லார் கோயில் போன்றவையும் இந்த சிறு நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளன.
இயற்கை உலா, நடைபயணம் போன்ற அதிக சிரமமில்லாத வெளிப்பொழுதுபோக்குகளில் பயணிகள் ஈடுபடலாம். இங்குள்ள பணப்பயிர் தோட்டங்களில் காட்சி விளக்க சுற்றுலா சேவைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பல சிக்கனமான ரிசார்ட் விடுதிகளும் விருந்தினர் விடுதிகளும் இங்கு பயணிகள் வசதிக்காகவே உருவாகியுள்ளன. பளிச்சென்ற பசுமைத்தோட்டங்களும், பழங்கள் நிறைந்த தாவரக்காட்சிகளும் இங்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளை பிரமிக்க வைப்பதுடன் புத்துணர்ச்சியூட்டவும் தவறுவதில்லை.