கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ள இடம் இந்த தேன்மலா ஆகும். தேன் நிரம்பிய மலை என்பதை பெயரிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.
திருவனந்தபுரத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இந்த தேன்மலா அமைந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக ‘சூழலியல் சுற்றுலாத்திட்டம்’ (இயற்கை சுற்றுலா வளாகம்) இப்பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேன்மலா நகரம் பலவிதமான அற்புத மூலிகைத்தாவரங்களுக்கும் தேனுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.
‘சூழலியல்’ சுற்றுலாத்திட்டத்தின் அடிப்படையாக இப்பகுதி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கலாச்சார மண்டலம், சாகசப்பொழுதுபோக்கு மண்டலம், பொழுதுபோக்கு மண்டலம், மான்கள் மறுவாழ்வு மண்டலம் மற்றும் படகுச்சவாரி மண்டலம் என்பவையே அவை.
பல ஏக்கர்களில் விரிந்திருக்கும் பசுமை மாறாக்காடுகளை கொண்டிருக்கும் இந்த இயற்கை சுற்றுலா வளாகம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது.
இந்த ‘சூழலியல்’ சுற்றுலாத்திட்ட வளாகத்தில் பல அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் நிரம்பியுள்ளன. மலைப்பாங்கான அமைப்பை கொண்டுள்ள இந்த சுற்றுலாத்தலத்தில் படகுச்சவாரி, கயிற்றுப்பாலம், மலையேற்றம், சிகரமேற்றம், சைக்கிள் பயணம் மற்றும் இசை நீரூற்று போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.
இயற்கை ரசிகர்கள் விரும்பக்கூடிய சொர்க்கபூமி
தேன்மலா சுற்றுலாத்தலத்தின் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக கல்லடா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு அணை அமைந்துள்ளது. மேலும் பாலருவி நீர்வீழ்ச்சி எனும் ஒரு பிக்னிக் ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளது.
இது தேனிலவுப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. பலவிதமான மான் இனங்கள் வசிக்கும் மான் பூங்காவும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். இந்த பூங்காவில் கட்டப்பட்டிருக்கும் மரவீடுகள் ஒரு அற்புதமான சுற்றுலா அனுபவத்தை தர காத்திருக்கின்றன.
நட்சத்திரவனம் எனும் தோட்டப்பண்ணை, ஆரியங்காவு சாஸ்தா கோயில், குளத்துப்புழா சாஸ்தா கோயில் மற்றும் மரத்தொங்கு பாலம் போன்றவை தேன்மலா சுற்றுலாத்தலத்தை சுற்றுலா ரசிகர்களுக்கு பிடித்த இடம் எனும் புகழை பெற்றுத்தந்துள்ளன.
திருவனந்தபுரம் மற்றும் புனலூரிலிருந்து சாலை மார்க்கமாக செல்லும் வகையில் தேன்மலா அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதிகளுக்கு எந்த குறையுமில்லை. இனிமையான மற்றும் மிதமான பருவநிலை இங்கு பயணிகளை வரவேற்கிறது. சாகசம் அல்லது பொழுதுபோக்கை விரும்பும் பயணிகளுக்கு ஒரு முழுமையான மறக்க முடியாத அனுபத்தை வழங்க இந்த தேன்மலா சுற்றுலாத்தலம் காத்திருக்கிறது.