தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒன்பது நவக்கிரககோவில்களில் திருநாகேஸ்வரம் கோவிலும் ஒன்றாகும். கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநாகேஸ்வரத்தில் இக்கோவில் உள்ளது.
சிவபெருமான் நாகநாதசுவாமி என்னும் பெயருடன் குஜாம்பிகா என்னும் பெயருடன் கூடிய தனது பார்வதிதேவியுடன் இங்கு அருள்பாலிக்கிறார். கூடவே லட்சுமிதேவியும் , சரஸ்வதி தேவியும் இங்கு உறைகின்றனர்.
அவர்களுக்கும் இங்கு கோவில்கள் உண்டு. நாகக்கன்னி மற்றும் நாகவல்லி என்னும் இரு தேவியருடன் காட்சி அளிக்கும் ராகு பகவானையும் இங்கு தரிசிக்கலாம்.
தனது சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்கு ராகுபகவான் இக்கோவிலில் உள்ள சிவபெருமானைப் பூசித்தாராம். மற்ற கோவில்களில் ராகு பகவான் நாக உருவத்தில் காட்சி அளிக்கும் பொழுது இக்கோவிலில் மட்டும் அவர் மனித முகத்துடன் தோன்றுவது சிறப்பாகும்.
கோவிலுக்குள் சில மண்டபங்களும், உயரமான கோபுரங்களும்,பெரிய பிரகாரமும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலானது கோட்டைச் சுவர்களைப்போல் அமைந்துள்ளன.
வெளிப்பிரகாரத்தை ஒட்டி கோபுரங்கள் அமைந்துள்ளன. தென்மேற்குப்பகுதியில் ராகுபகவானின் சிலை உள்ளது. கோவிலின் தென்பகுதியில், நான்கு மண்டபங்களால் சூழப்பட்ட திருக்குளம் இருக்கிறது.
இது தேரின் அமைப்பில் கட்டப்பட்ட 100 தூண்களைக் கொண்ட மண்டபத்தால் சூழப்பட்டுள்ளது. கோவிலானது சோழர் கால கட்டடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது. ராகு காலத்தில் தினந்தோறும் ராகுவுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பாலாபிஷேகத்தின்போது, பாலானது ராகுவின் மேல் பட்டு வழியும் போது அது நீல நிறமாக மாறுவதை அனைவரும் கண்டு அதிசயிக்கலாம்.