காவியூர் மஹாதேவா கோயில் கேரளாவிலுள்ள மிகப்பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும். இது திருவல்லா நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கோயில் தனது தனித்தன்மையான கோபுரக்கூரைச்சரிவு அமைப்பிற்காக புகழ் பெற்றுள்ளது.
அதாவது கோயிலின் கூரைச்சரிவு ஒரு முக்கோணம்போன்ற முகப்புத்தோற்றம் வருமாறு அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1000 வருடங்களுக்கு முன்னால் 10-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டுள்ள, தென்னிந்தியாவின் பழமையான கோயில்களில் ஒன்றான இது ‘திருக்காவியூர் மஹாதேவா கோயில்’ என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இங்குள்ள சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை ஏராளமான பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தின்போது நடத்தப்படும் திருவிழா மற்றும் ஹனுமான் ஜயந்தி போன்ற திருநாள்களின்போது இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.
இங்குள்ள சுவற்றில் காணப்படும் சில சிற்ப வடிப்புகள் 16ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக உள்ளன. பெரும்பாலும் ராமாயண மஹாபாரதக்காட்சிகள் இவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த கோயிலின் கட்டுமானத்திலும் அலங்கார நுணுக்கங்களிலும் அதிகமாக மரப்பொருளே பயன்படுத்தப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். கேரள கலைப்பாரம்பரியத்தின் அடையாளமாகவும் இந்த ‘மரக்கட்டுமானம்’ கருதப்படுகிறது. கிழக்காசியாவின் பகோடாக்கோயில்கள் போன்ற தோற்றத்தினை இந்த கோயில் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆபரண வடிவமைப்பு போன்று ஜொலிக்கும் வெளித்தோற்றத்தையும் பாரம்பரிய கேரளிய உள்ளலங்கார நுணுக்கங்களையும் கொண்டிருக்கும் இந்த அற்புதக்கோயில் பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு கலைப்படைப்பாகும்.