தென் திருப்பதி எனும் சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் இந்த ஸ்ரீ வல்லப கோயில் பக்தர்களை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது.
அந்த அளவுக்கு கண்ணைக்கவரும் கலையம்சத்துடன் இந்த கோயில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள பல சிலைகள் ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்டவையாக காட்சியளிக்கின்றன.
இவற்றில் பல நுணுக்கமான செதுக்கல்களும் சித்தரிப்புகளும் காணப்படுகின்றன. உத்ர-ஷீபலி எனும் திருவிழாச்சடங்கு இங்கு மார்ச் – ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் கெட்டுகழா எனும் கோலாகலமான ஊர்வலமும் நடத்தப்படுகிறது. வண்ணமயமான தெப்பத்தேர்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் மற்றும் கேரளிய செண்டை மேள வாத்தியங்கள் போன்றவற்றுடன் வெகு சிறப்பாக இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது. திருவிழாக்காலத்தில் தெருவெங்கும் சந்தைக்கடைகள்அமைக்கப்பட்டு ஊரே விழாக்கோலம் பூண்டிருப்பது கண்கொள்ளா காட்சியாகும்.
இந்த கோயிலைச்சுற்றிலும் பசுமையான தாவரச்செழிப்பும் மரங்களும் காணப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். வேறு எந்த கோயில்களிலும் இல்லாத ஒரு சிறப்பாக இந்தக்கோயிலில் தினமும் கதகளி நடன நிகழ்ச்சி ஒரு சடங்காகவே நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீக நாட்டம் இல்லாதவர்களும் ரசித்து மகிழும் சிற்பக்கலை அம்சங்களையும் அழகிய தோற்றத்தையும் இந்த கோயில் கொண்டுள்ளது. இங்கு 50 அடி உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ள துவஜஸ்தம்பமானது ஒற்றைக்கல்லால் ஆன கருடபஹவானின் சிலையுடன் காட்சியளிக்கிறது. இதுவும் ஒரு அற்புதமான கலைப்படைப்பாக ரசிக்கப்படுகிறது.