கடவுளின் சொந்த தேசம் என்ற சிறப்புப்பெயருடன் உலகமெங்கும் அறியப்படும் பெருமையை பெற்றுள்ள கேரள மாநிலத்தின் தலைநகரம் இந்த ‘திருவனந்தபுரம்’ என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். ஆங்கிலேயரின் உச்சரிப்பில் இது ‘டிரிவன்ட்ரம்’ என்று திரிந்து அழைக்கப்பட்டு வந்தாலும் திருவனந்தபுரம் என்ற கம்பீரப்பெயரே இதன் அடையாளமாகும். காலனிய ஆட்சியின் மிச்சமாக ’டிரிவன்ட்ரம்’ என்ற பெயரே அரசாங்க ஆவணங்களிலும் இடம் பெற்றிருந்ததால் 1991ம் ஆண்டு கேரள மாநில அரசாங்கமானது ‘திருவனந்தபுரம்’ என்ற பெயரை அதிகாரபூர்வமாக திரும்பவும் அங்கீகாரம் செய்தது.
சர்வதேச முக்கிய ஸ்தலங்களில் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாக அறியப்பட்டுள்ள இந்த நகரத்தை சமீபத்தில் ‘நேஷனம் ஜியாகிரபிக் டிராவலர்’ பத்திரிகையும் வழிமொழிந்துள்ளது.
தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்கள் இந்நகரத்தை ‘என்றும் பசுமை மாறா நகரம் ‘ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலுள்ள 10 பசுமையான நகரங்களில் ஒன்றாக திருவனந்தபுரம் குறிப்பிடப்படுகிறது.
திருவனந்தபுரம் பகுதியானது புராண காலத்தில் விஜயம் செய்த அவதாரக்கடவுளான பரசுராமரிலிருந்து பண்டைய காலத்தில் பயணம் செய்த ஃபா ஹியான், மார்க்கோ போலோ மற்றும் கொலம்பஸ், வாஸ்கோ ட காமா வரை பல யாத்ரீகர்கள் விஜயம் செய்த வரலாற்று ஸ்தலமாக விளங்கியிருக்கிறது.
இன்னும் வரலாற்றுக்குறிப்புகளில் இடம் பெறாத எண்ணற்ற யாத்ரீகர்கள் இம்மண்ணில் கால் பதித்திருக்கின்றனர். ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேஷன் அல்லது அனந்தன் எனும் ஐதீக சர்ப்ப உருவத்தின்மீது மீது வீற்றிருக்கும் ‘மஹாவிஷ்ணு’வின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது.
(திரு- அனந்த – புரம்). இந்த மஹாவிஷ்ணுக்கடவுள் திருவனந்தபுரத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் அதே பெயரிலான அவதார வடிவில் எழுந்தருளியுள்ளார்.
ஏழு கடற்கரை மலைகளை ஒட்டி உருவாகியிருக்கும் இந்த நகரம் பரபரப்பான பெருநகரமாக மாறிவிட்டபோதிலும் தன் பழமைப்பொலிவை இன்னும் இழக்காமல் காட்சியளிக்கிறது.
இந்த நகரத்துக்காக பரசுராமர் கடல் தெய்வமான வருணனுடன் போரிட்டதாக உள்ளூர் ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன. மஹாவிஷ்ணுவால் பாதாள லோகத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன் மஹாபலி மன்னன் இந்த பூமியை ஆண்டதாக புராணிக கதைகள் கூறுகின்றன.
இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றாக மாறியுள்ள திருவனந்தபுரத்தில் பல அரசு சார்ந்த நிறுவனங்களும், கல்வி மையங்களும், தனியார் வணிக நிறுவன கேந்திரங்களும் அமைந்திருக்கின்றன.
இந்திய விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப மையம்(IIST), விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம்(VSSC), இந்திய தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், சமூக வளர்ச்சி ஆய்வியல் மையம், சர்வதேச ‘பொது உரிமைக் குறியீடு கணிணி மென்பொருள்’ ஆராய்ச்சிக்கழகம்(ICFOSS), இந்திய அறிவியல் அராய்ச்சி மற்றும் கல்வி மையம் (IISER), மண்டல ஆராய்ச்சி ஆய்வுக்கூடம், சித்திரைத்திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பக் கழகம், ராஜிவ் காந்தி உயிரியல் தொழில்நுட்ப மையம், பூகோள அறிவியல் கல்வி மையம் மற்றும் தொழில்நுட்ப பூங்கா போன்ற முக்கிய ஸ்தாபனங்களும் இதில் அடங்கும்.
திருவனந்தபுரத்தின் ஆன்மீக அடையாளமான ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். இங்குள்ள நவராத்திரி மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கடவுளாகிய சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதத்தில் ஒரு இசைத்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.
இங்குள்ள குதிர மாளிகை அல்லது புத்தேன் மாளிகை என்று அழைக்கப்படும் பாரம்பரிய அரண்மனை கேரளிய கட்டிடக்கலை பாணிக்கான உதாரணமாக அமைந்துள்ளது. மேலும் திருவனந்தபுரத்தின் மஹாத்மா காந்தி சாலையில் பாரம்பரிய கலையம்சங்களுடன் காட்சியளிக்கும் பல மாளிகைகளை இன்றும் பார்க்கலாம்.
பழமை மற்றும் நவீனம் ஆகிய இரண்டு அம்சங்களும் இந்த தெருவில் ஒன்றோடன்று கலந்து மிளிர்கின்றன. சிவப்பு ஓட்டுக்கூரைகளுடன் காணப்படும் மாளிகைகளில் பழமையையும் கண்ணாடி மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் வானோங்கி நிற்கும் பலமாடிக்கட்டிடங்களில் நவீனத்தையும் கண்டு கொள்ளலாம்.
பாளையம் மசூதி, பழைய விநாயகர் கோயில், ஐரோப்பியபாணி கோபுரங்களுடன் எழுப்பப்பட்டிருக்கும் கிறிஸ்டியன் கதீட்ரல் போன்றவை அருகருகே அமைந்திருக்கும் அதிசயத்தையும் இங்கு பார்க்கலாம்.
இங்குள்ள கனககுண்ணு அரண்மனை அந்நாளைய திருவாங்கூர் மன்னர்களின் பொற்காலத்தை நினைவூட்டும் வகையில் வீற்றுள்ளது. இதன் தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்கள் உங்களை வெகுவாக கவரக்கூடும்.
நேப்பியர் மியூசியம் மற்றும் ஸ்ரீ சித்திரா ஆர்ட் காலரி போன்ற இடங்களில் வரலாற்று மற்றும் கலை அம்சங்களின் காட்சிகளையும் நீங்கள் ரசிக்கலாம். ராஜ வம்சத்தினரின் ரசனை உணர்வு உங்களை வியப்படைய வைக்கும் என்பதில் ஐயமில்லை.
கரமனா ஆறு மற்றும் அக்குளம் ஏரி போன்ற இடங்களின் இயற்கை எழில் பின்னணியும் நீங்கள் தவறவிடக்கூடாத அம்சமாகும். வனவிலங்குப்பூங்கா, நெய்யார் அணை மற்றும் காட்டுயிர் சரணாலயங்களும் போன்ற இடங்களும் திருவனந்தபுரம் வரும்போது தவறாமல் விஜயம் செய்யவேண்டிய இடங்களாகும்.
இந்த இடங்களில் கிடைக்கும் இயற்கையின் அருகாமையானது சொந்த கவலைகளை எல்லாம் மறக்க வைக்கும் சக்தி கொண்டதாகும். ஹேப்பி லேண்ட் வாட்டர் பார்க் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு பொழுதுபோக்கு ஸ்தலமாகும். ஷாப்பிங் பிரியர்களுக்கென்றே திருவனந்தபுரத்தில் சாலை பஜார் கடைத்தெரு காத்திருக்கிறது.
கிள்ளி ஆறு மற்றும் கரமணா ஆறு ஆகிய இரண்டு ஆறுகளின் கரையில் திருவனந்தபுரம் நகரம் அமைந்துள்ளது. கிழக்கு எல்லையில் தமிழ்நாடும் மேற்கு எல்லையில் அரபிக்கடலும் இதன் எல்லைகளாக காணப்படுகின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளதால் திருவனந்தபுரம் பகுதி முழுவதுமே பசுமையான இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பிக் காணப்படுகின்றன. ஆகவே சுற்றிப்பார்க்க அலுக்கவே அலுக்காத சூழலும் ரம்மியமும் இங்கு மிகுந்துள்ளன.
தென்னை மரங்களின் அணிவகுப்போடு கூடிய தங்கமணற்பரப்புடன் மின்னும் தூய்மையான கடற்கரைகள், சொக்க வைக்கும் உப்பங்கழி ஓடைகள், கொஞ்சமும் பொலிவு குறையாத பாரம்பரியம் மிளிரும் வரலாற்று சின்னங்கள் மற்றும் கோயில்கள் போன்ற அம்சங்கள் வெகு தூரத்திலிருந்தும் சுற்றுலா ரசிகர்களை திருவனந்தபுரத்திற்கு கவர்ந்து இழுக்கின்றன.
இம்மாவட்டத்திலுள்ள அகஸ்தியர் கூடம் எனும் மலைச்சிகரம்ம் கடல் மட்டத்திலிருந்து 1868 மீட்டர் உயரத்தில் வானுயர்ந்து காட்சியளிக்கிறது. பொன்முடி மற்றும் முக்குணிமலா ஆகியவையும் இந்த தென்கோடி நகரத்துக்கு அருகிலுள்ள முக்கியமான மலைவாசஸ்தலங்களாகும். பறவைக்கோயில் எனும் இடத்தில் சூரிய உதயத்தின் அற்புதமான அழகை கண்டு ரசிக்கவும் பயணிகள் மறக்கக்கூடாது.
மழைக்காலத்தின்போது இந்த நகரம் ஓணம் திருவிழாக் கொண்டாட்டங்களை வரவேற்க தயாராகிவிடுகிறது. வசந்த கால அறுவடைத்திருவிழா, பாம்பு படகுப்போட்டி மற்றும் யானை ஊர்வலம் போன்ற பாரம்பரிய நறுமணம் கமழும் கொண்டாட்டங்களில் நகரமக்கள் உற்சாகமாக பங்கேற்பதை காணலாம்.
இந்த விழாக்காலத்தின் போது திருவனந்தபுரம் நகரம் முழுதுமே ஒரு சொர்க்க பூமி போன்று ஜொலிப்பதை நேரில் பார்த்தால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். மோகினியாட்டம், கதகளி, கூடியாட்டம் மற்றும் இன்னும் பல எண்ணற்ற, வண்ணமயமான நிகழ்த்து கலை(பாரம்பரிய கூத்து/நடனக்கலை) வடிவங்கள் கனவுக்காட்சிகள் போன்று இக்காலத்தில் அரங்கேற்றப்படுகின்றன.
கேரள மாநிலத்தின் எல்லாப்பகுதிகளையும் போலவே திருவனந்தபுரமும் வருடம் முழுக்க இனிமையான பருவநிலையுடன் காணப்படுகிறது. குறிப்பிடத்தக்க சுற்றுலாப்பருவம் என்று இங்கு ஏதுமில்லை.
விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக நல்ல போக்குவரத்து வசதிகளையும் இந்த பாரம்பரிய தலைநகரம் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலுள்ள சுற்றுலா ரசிகர்கள் அனைவரும் ஆசுவாசமாக விஜயம் செய்யவேண்டிய ஒரு அமைதியான தூய நகரம் இந்த திருவனந்தபுரம் ஆகும்.