ஸ்ரீ சித்திரா ஆர்ட் காலரி நேப்பியர் மியூசியத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ராஜா ரவிவர்மா ஓவியங்களுக்காக இது பிரசித்தி பெற்றுள்ளது. ராஜபுதன பாணி, ராஜஸ்தானிய பாணி மற்றும் முகலாய பாணி ஓவியங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள பாலினீசிய மற்றும் தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் தனித்தன்மையுடன் ஒளிர்வது குறிப்பிடவேண்டிய அம்சமாகும். நுணுக்கமான கல் அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் அழுத்தமான வண்ணங்களுடன் இவை காட்சியளிக்கின்றன.
சீன ஓவியங்கள், திபெத்திய ஓவியங்கள் மற்றும் ஜப்பானிய ஓவியங்கள் போன்ற கிழக்குத்தேச ஓவியங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது இந்த கலைக்கூடத்தின் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது.
இவை மட்டுமில்லாமல், சில குறு ஓவியங்களும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களை பார்க்கும் நீங்கள் பிரமிப்பின் எல்லைக்கே சென்றுவிடுவீர்கள். அந்த அளவுக்கு நம்ப முடியாத நுணுக்கம் வாய்ந்தவை இவை.
சர்வதேச அளவில் புகழ் பெற்று அறியப்படும் இந்த ஓவியக்கலைக்கூடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் விஜயம் செய்கின்றனர். இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேலும் செலவழிக்கும்படியாக திட்டமிட்டுக்கொண்டு இந்த அற்புத ஸ்ரீ சித்திரா ஆர்ட் காலரி காட்சிக்கூடத்திற்கு வருகை தருவது சிறந்தது. திரும்பும் போது உங்கள் மனமெங்கும் ஓருவித சிலிர்ப்பு ஒட்டிக்கொண்டிருப்பதை உணர்வீர்கள்.