திருவனந்தபுரம் நகரின் மையத்தில் இந்த ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவராக ஸ்ரீ மஹாவிஷ்ணு வீற்றுள்ளார். இது இன்றும் திருவாங்கூர் ராஜ வம்ச சந்ததியினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் கட்டுமானம் திராவிடப்பாணியில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீ பத்மநாபஸ்வாமி சிலை மிக பிரசித்தமானதாக அறியப்படுகிறது. அனந்த சயன கோலத்தில் (பாம்பின் மீது பள்ளி கொண்டவராக) பக்தர்களுக்கு தரிசனம்அளிக்கும் மஹாவிஷ்ணுவின் சன்னதியில் துணைவியரான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியையும் உடன் காணலாம்.
12000 சாளக்கிராம கற்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சன்னதி ‘கட்டுசக்கர யோகம்’ எனும் விசேஷ கலவையால் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு 90000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன என்பது மலைக்க வைக்கும் உண்மையாகும்.
தங்கச்சிலைகள், தங்கம், வெள்ளி, வைரங்கள், வைடூர்யங்கள் மற்றும் வெண்கல பொருட்கள் யாவும் இவற்றில் அடங்கும். பலவிதமான வைடூர்யக்கற்கள் பொதிக்கப்பட்டுள்ள இரண்டு தேங்காய் மூடிகளும் இவற்றுள் அடங்கும்.
ஆறு வருடங்களுக்கு ஒரு முறை இந்தக்கோயிலில் முரஜபம் என்ற திருவிழாச்சடங்கு 56 நாட்களுக்கு நிறைவேற்றப்படுகிறது. அற்புதமான பாரம்பரிய பின்னணியையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பெற்றுள்ள இந்த கோயில் திருவனந்தபுரம் நகரில் அவசியம் காண வேண்டிய அம்சமாகும்.