அற்புதமான அலங்கார மரக்குடைவு வேலைப்பாடுகளுடன் மற்றும் கேரள மண்ணின் பாரம்பரிய தோற்றத்துடன் வீற்றிருக்கும் கனககுண்ணு அரண்மனையானது கலையம்சம் நிறைந்த ஒரு முக்கியமான மாளிகையாகும். அரசர்கள் ஆண்ட காலத்தில் மஹோன்னதமாக விளங்கிய கேரளத்தின் கலைப்பாரம்பரிய சித்தரிப்பாகவும் இது காட்சியளிக்கிறது.
கனககுண்ணு அரண்மனையானது திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சியின்போது கட்டப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான சடங்குகள், விருந்துகள் மற்றும் ராஜ வம்ச நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்காகவே பிரத்யேகமாக இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கிறது.
கோலாகல நிகழ்ச்சிக்கான மாளிகை என்பதால் அற்புதமான அலங்கார கலையம்சங்களுடன் இது கட்டப்பட்டிருக்கிறது. இன்றும் இந்த அரண்மனையின் பொலிவு சிறிதும் குன்றாமல் ஒளிர்வது பார்வையாளர்களை மலைக்க வைக்கும் காட்சியாகும்.
இந்த அரண்மனையை ஒட்டியே நேப்பியர் மியூசியம் எனும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தற்சமயம் கனககுண்ணு அரண்மனை திருவனந்தபுரத்தின் முக்கியமான பாரம்பரிய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் பிரத்யேக மையமாக பயன்படுத்தப்படுகிறது.