கூத்தனூர் சரஸ்வதி கோயில், இந்து மதப்புராணங்களில், கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோயில்களுள் ஒன்றாகும். பொதுவாக, மற்ற தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட கோயில்களில், பிற தெய்வங்களுள் ஒன்றாகவே சரஸ்வதி தேவியும் வழிபடப்படுகிறார்.
இது தவிர்த்து, அவருக்கென தனிக் கோயில் இருப்பது மிகவும் அரிது. தமிழ்நாட்டிலேயே, சரஸ்வதி தேவிக்கென தனியாக அமைக்கப்பெற்ற ஒரே கோயிலாக, இது திகழ்கிறது.
இக்கோயில், திருவாரூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கூத்தனூரில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையோரத்தில் அமைந்துள்ளது. பெரும்புலவராகிய ஒட்டக்கூத்தர் அவதரித்த பெருமை வாய்ந்தது இவ்வூர்.
இங்கு, கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் ஒன்றாகக் கலப்பதாக நம்பபடுகிறது. இம்மூன்று நதிகளும் ஒன்றாக சேர்ந்து “அரசலாறு” என்று வட்டார வழக்கில் வழங்கப்படும் “ஹரிசோல் நதியை” உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.
இக்கோயிலில், விஜயதசமியை வெகு விமரிசையாக கொண்டாடுவர். விஜயதசமி மற்றும் மஹாநவமி ஆகியவை கொண்டாடப்படும் நாட்களில் இங்கு செல்வது உசிதமாகும்.