திரிசூர் ஆர்க்கியாலஜிகல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த தொல்லியல் அருங்காட்சியகம் 1938ம் ஆண்டிலேயே நிறுவப்பட்டு பின்னர் 1975ம் ஆண்டில் நாம் தற்போது பார்க்கும் ஒருங்கிணந்த வளாகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அச்சமயம் தனியாக இருந்த புகைப்பட காட்சிக்கூடமும் தொல்லியல் காட்சிக்கூடமும் ஒன்றிணைக்கப்பட்டு புதிய ஒழுங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்வதன் மூலம் வரலாற்றில் பின்னோக்கி பயணிக்கும் அற்புத அனுபவத்தை பார்வையாளர்கள் பெறலாம். 7ம் நூற்றாண்டு வரை நீளும் பல அரிய ஏட்டுப்பிரதிகள், தொல்பொருள் மிச்சங்கள் மற்றும் கற்சிலைகள் இந்த மியூசியத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
பொதுவாக இந்த அரும்பொருட்கள் யாவுமே கேரள பகுதியிலிருந்து திரட்டப்பட்டவையாக இருந்தபோதிலும், பெரும்பாலானவை திரிசூர், வயநாட் மற்றும் பாலக்காட் பகுதிகளிலிருந்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்று அரும்பொருட்கள் மட்டுமல்லாமல், பல முக்கிய தலைவர்களில் தத்ரூப சிலைகள், வரலாற்று கட்டிடங்களின் குறுவடிவ மாதிரிகள், சுவரோவியங்கள் போன்றவற்றையும் இங்கு காணலாம்.
இந்த அருங்காட்சியக கட்டிடத்தின் வடிவமைப்பும்கூட கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கலையம்சங்கள் கலந்து தோற்றமளிப்பதையும் பார்த்து ரசிக்கலாம். பலவித வரலாற்று அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முக்கியமான அருங்காட்சியகங்களில் ஒன்று எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது. திரிசூர் வனவிலங்கு காட்சியகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே இந்த ஆர்க்கியாலஜிகல் மியூசியம் இடம் பெற்றுள்ளது.