Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இத்தனை அருவிகள் இருந்தும் தண்ணீர் பஞ்சம் ஏன்?

இந்தியாவில் இத்தனை அருவிகள் இருந்தும் தண்ணீர் பஞ்சம் ஏன்?

By Staff

ஒரு சில அருவிகளை பார்க்கும்போது நாமும் அந்த அருவியோடு சேர்ந்து விழுந்தால் என்ன என்று தோன்றும். அந்த அளவுக்கு இயற்கையின் மயக்கவைக்கும் படைப்பாக அருவிகள் திகழ்கின்றன.

இப்படி மலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவியின் அழகையும், ஓங்காரமிட்டு கொட்டும் ஓசையையும் நாள் பூராவும் ரசித்துக்கொண்டிருக்கலாம்.

சில அருவிகளில் நீராடி மகிழலாம், ஆனால் சில அருவிகளை தூரத்திலிருந்து மட்டும்தான் பார்த்து ரசிக்க முடியும்.

அந்த வகையில் பார்த்த மறு வினாடி உங்களை சொக்கவைக்கவும், பாறைகளில் விழுந்து சிதறும் சாரலில் உங்களை குளிரூட்டவும் எண்ணற்ற அருவிகள் இந்தியாவில் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

தூத்சாகர் அருவி

தூத்சாகர் அருவி

உலகின் மிக அழகிய அருவிகளில் ஒன்றாகவும், 310 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதால் இந்தியாவின் 5-வது உயரமான அருவியாகவும் கருதப்படும் தூத்சாகர் அருவி பனாஜி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சத்யராஜ் அறிமுகமாகும் சீன் இந்த அருவியின் பின்னணியில்தான் படமாக்கப்பட்டது. இந்த அருவியை கர்நாடக மாநிலத்திலிருந்து ஹூப்ளி, தர்வாத், அல்நாவர், லோண்டா, தீனைகாட், கேஸ்டில் ராக், தூத்சாகர் ரயில் பாதையில் அடைய முடியும்.

படம் : Purshi

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

கேரளாவின் திருச்சூரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும், கொச்சியிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற அதிர்ச்சியூட்டும் தற்கொலைக்காட்சி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில்தான் படம்பிடிக்கப்பட்டது. பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா' எனும் சிறப்புப்பெயரையும் இந்த நீர்வீழ்ச்சி பெற்றுள்ளது.

படம் : Iriyas

நோகலிகை நீர்வீழ்ச்சி

நோகலிகை நீர்வீழ்ச்சி

ஒவ்வொரு வருடமும் பெய்யும் அபரிமிதமான மழைப்பொழிவுக்கு பெயர் போன சிரபுஞ்சியில் அமைந்துள்ள நோகலிகை நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அருவி டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். எனவே மழைக்காலங்களில் இந்த அருவிக்கு சுற்றுலா வருவதே சிறப்பானதாகும்.

எத்திப்போத்தலா அருவி

எத்திப்போத்தலா அருவி

ஆந்திர மாநிலத்தில் உள்ள எத்திப்போத்தலா அருவி நாகர்ஜுனாசாகர் நகருக்கு வெகு அருகாமையிலும், நாகர்ஜுனாசாகர் அணையிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி கிருஷ்ணா நதியின் கிளை நதியான சந்திரவங்காவிலிருந்து பிறந்து, 70 அடி உயரத்திலிருந்து ஆர்பரித்துக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்த அருவிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் ரங்கநாதன் மற்றும் தாத்ரேயர் கோயில்களுக்கு பயணிகள் நேரம் இருந்தால் சென்று வரலாம்.

படம் : Praveen120

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி தர்மபுரியிலிருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 3 மணி நேர பயண தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த அருவிப்பகுதியில் காணப்படும் கார்பனைட் பாறைகள் ஆசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன. இங்கு கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும் போது இந்த பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல் சவாரி செய்வது அற்புதமான அனுபவம். மேலும் அருவிக்கு அருகிலேயே அப்போதே நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக பயணிகளுக்கு பொரித்து தரப்படுவது மற்றொரு சுவாரசியம்.

வஜ்ராயி அருவி

வஜ்ராயி அருவி

மகாராஷ்டிர மாநிலம் சதாரா நகரத்திலிருந்து 27 கி.மீ தொலைவில் புகழ்பெற்ற பூக்களின் பள்ளத்தாக்கு, காஸ் பள்ளத்தாக்குக்கு அருகில் வஜ்ராயி அருவி அமைந்துள்ளது. 1840 அடி உயரத்திலிருந்து விழும் இந்த அருவி இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் அதிக அளவில் மழைப்பொழிவு காணப்படுவதோடு, மழைக்காலங்களில் பச்சை பசேலென்று இயற்கை அழகோடு காட்சிதரும் அருவியையும், அதன் சுற்றுப் பகுதிகளையும் பார்த்து ரசிப்பது கண்கொள்ளா கைதியாக இருக்கும். மேலும் இந்த அருவிக்கு அருகே 'குட்டி காஷ்மீர்' என்று அழைக்கப்படும் டப்போலா போன்ற சுற்றுலாத் தலமும் அமைந்திருக்கிறது.

படம் : Vinayakmore

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கிறார்கள். ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது. இந்த அருவி கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 401 கி.மீ தொலைவில் உள்ளது.

படம் : Sarvagnya

பெருந்தேனருவி

பெருந்தேனருவி

பெருந்தேனருவி என்பதற்கு 'பெருக்கெடுத்து ஓடும் தேனின் வெள்ளம்' என்று பொருள். இது பத்தனம்திட்டா நகரிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த அருவி 100 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டுவதும், அதன் பிறகு பம்பை நதியுடன் கலக்கின்ற காட்சியும் பயணிகளின் நினைவை விட்டு என்றும் அகலாது.

இருப்பு நீர்வீழ்ச்சி

இருப்பு நீர்வீழ்ச்சி

கர்நாடகாவின் பிரபல சுற்றுலாத் தலமான கூர்கிலிருந்து 61 தொலைவிலும், கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிக்கு வெகு அருகிலும் இருப்பு நீர்வீழ்ச்சி அமையப்பெற்றுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் மஹா சிவராத்திரியின் போது குளித்தால் பக்தர்களின் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

படம் : Rameshng

ஷிவனசமுத்ரா அருவி

ஷிவனசமுத்ரா அருவி

ஷிவனசமுத்ரா அருவி , பரச்சுக்கி மற்றும் ககனச்சுக்கி நீர்வீழ்ச்சி என்று இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. 200 அடி உயரத்திலிருந்து விழும் இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளும் காவிரி ஆற்றில் கலக்கின்றன. இந்த இரட்டை நீர்வீழ்ச்சி இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாகவும் உலகின் 100 முக்கிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இது கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 135 கி.மீ தொலைவில் உள்ளது.

வன்டாங் நீர்வீழ்ச்சி

வன்டாங் நீர்வீழ்ச்சி

இந்தியாவின் 13-வது உயரமான நீர்வீழ்ச்சியாக கருதப்படும் வன்டாங் நீர்வீழ்ச்சி மிசோரம் மாநிலத்தின் மிக உயரமான அருவியாக அறியப்படுகிறது. இந்த அருவி 229 மீ உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாய் விழுகிறது. இது வன்டாங் என்ற சிறந்த நீச்சல் வீரரின் நினைவாக அவர் பெயரில் அழைக்கப்படுகிறது. ஒருமுறை அவரது சாகசங்களின் போது ஒரு பெரிய மரக்கட்டை அவர் மீது விழுந்து இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

படம் : Lpachuau

நுராரங்க் அருவி

நுராரங்க் அருவி

அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில் இந்த அற்புதமான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தவாங் மற்றும் பொம்டிலா நகரங்களுக்கு இடையே உள்ள ஜாங் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.

படம் : Easyvivek

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் பியர் ஷோலா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த அருவியை வந்தடைய கூறிய நடைபாதையில் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு முன்னாட்களில் கரடிகள் தண்ணீர் அருந்த வந்த காரணத்தால் 'பியர்' ஷோலா நீர்வீழ்ச்சி என்று அறியப்படுகிறது.

கிளியூர் அருவி, ஏற்காடு

கிளியூர் அருவி, ஏற்காடு

கிளியூர் அருவி ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா வர ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலங்களே மிகவும் ஏற்றவை. ஏனெனில் பருவமழையின் காரணமாக நல்ல நீர்வரத்து காணப்படுவதுடன், 300 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியின் அற்புத காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அருவியில் குளித்து பொழுதை கழிக்கலாம். மேலும் மழைக்காலத்தில் மலையேற்றம் செய்யும்போது இங்குள்ள பாதைகள் வழுக்கும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

மீன்முட்டி அருவி

மீன்முட்டி அருவி

300 அடி உயரத்திலிருந்து விழும் மீன்முட்டி அருவி கேரளாவின் 2-வது மிகப்பெரிய அருவியாக அறியப்படுகிறது. இந்த அருவி கல்பெட்டா நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் காணப்படும் நீரில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத ஒரு சூழல் உள்ளது. இதன் காரணமாக 'மீன்களை தடை செய்யும் பகுதி' என்ற அர்த்தத்தில் இந்த அருவி மீன்முட்டி அருவி என்று அழைக்கப்படுகிறது. இவ்வருவியை ஊட்டி செல்லும் காட்டு வழியாக 2 கி.மீ ஹைக்கிங் மூலம் அடையலாம். அவ்வாறு நீங்கள் அருவிக்கு செல்லும் அந்த இரண்டு கிலோமீட்டர் நெடுந்தூர பயணத்தில் மீன்முட்டி அருவியின் மயக்கும் அழகை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

படம் : Vssekm

அகஸ்தியர் அருவி, அம்பாசமுத்திரம்

அகஸ்தியர் அருவி, அம்பாசமுத்திரம்

அகஸ்தியர் அருவி திருநெல்வேலியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. அதோடு பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் இருப்பதால் கோயிலிலிருந்து இந்த அருவியை நடந்தே சென்றடைய முடியும். இந்தப் பகுதியில் மூலிகைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் அருவி நீரில் சரும வியாதிகளை போக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் வெயில் காலம் வந்துவிட்டால் அகஸ்தியர் அருவியில் கூட்டம் அலைமோதும்.

மங்கீ ஃபால்ஸ், பொள்ளாச்சி

மங்கீ ஃபால்ஸ், பொள்ளாச்சி

மங்கீ ஃபால்ஸ் ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் குழந்தைகளோடு பொழுதை கழிக்க ஏற்ற இடமான மங்கீ ஃபால்ஸ் செல்வதற்கு நுழைவுக்கட்டணமாக வெறும் 15 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

சூச்சிப்பாறை அருவி

சூச்சிப்பாறை அருவி

கல்பெட்டா நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெப்பாடி நகருக்கு அருகே சூச்சிப்பாறை அருவி அமைந்திருக்கிறது. சூச்சிப்பாறை அருவியை 2 கிலோமீட்டர் நெடுந்தூர நடைபயணம் மூலம் பசுமையான தேயிலை தோட்டங்களையும், காடுகளையும் கடந்து அடையும் அனுபவம் உங்கள் நினைவு இடுக்குகளில் பசுமை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கும். மேலும் இங்கு பயணிகளுக்காக மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் குடில்களில் இருந்து அருவியின் அழகையும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டத்தையும் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

படம் : Yjenith

தோஸேகார் நீர்வீழ்ச்சி

தோஸேகார் நீர்வீழ்ச்சி

சதாராவிலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி ஒட்டுமொத்த மகாராஷ்டிர மாநில மக்களுக்கும் பிடித்தமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் எக்கச்சக்கமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

படம் : Vikashegde

சுருளி அருவி

சுருளி அருவி

தேனியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளி அருவி தேனியின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த அருவியில் நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படுவதால் இந்த காலங்களில் இங்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் 18 குகைகள் காணப்படுகின்றன. இவ்வருவியின் அருகே சுருளி வேலப்பர் கோயில், கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. இதில் லிங்கபர்வதவர்த்தினி கோயிலில் கோடி லிங்கங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது சிறியதும் பெரியதுமாக மொத்தம் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தீர்பரப்பு அருவி, திருவட்டாறு

தீர்பரப்பு அருவி, திருவட்டாறு

தீர்பரப்பு அருவி கன்னியாகுமரியிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், திருவட்டாறுக்கு அருகில் 10 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி வருடத்தில் 4 மாதங்கள் தவிற பிற மாதங்களில் வழிந்து ஓடுகின்றது. எனவே வளமை குறையாத இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பணை அறையையும் இங்கு உருவாக்கி இருக்கிறது. இவ்வருவிக்கு அருகில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்று உள்ளது.

குற்றாலம்

குற்றாலம்

தமிழ்நாட்டில் குற்றாலம் அருவிக்கு அறிமுகமே தேவையில்லை. குற்றால அருவிகள் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பாலருவி என்று ஒன்பது அருவிகளாக அறியப்படுகின்றன. இதில் பிரதான அருவியான பேரருவி 60 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவிகளில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் நீர்வரத்து அதிகமாகும். எனவே ஜூன் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலும் குற்றாலம் வருவதற்கு ஏற்ற காலங்களாகும்.

கேத்தரின் அருவி

கேத்தரின் அருவி

கோத்தகிரியில் காப்பி பயிரிடப்படுவது துவங்கக் காரணமாக இருந்த M.D. காக்பர்ன் என்பவரது மனைவியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. கோத்தகிரியில் முதலில் குடியேறியவர்களில் காக்பர்ன் தம்பதியரும் அடங்குவர். இது 250 அடி உயரத்திலிருந்து இரு நிலைகளாக விழும் நீர் வீழ்ச்சியாகும். இந்த அருவி மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் வழியில் அரவேணு என்ற இடத்தில் கோத்தகிரியிலிருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வருவியின் முழுமையான காட்சியைக்காண டால்பின் மூக்கு வியூ பாயிண்ட்டுக்கு செல்ல வேண்டும்.

கெம்ப்டி நீர்வீழ்ச்சி

கெம்ப்டி நீர்வீழ்ச்சி

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முசூரி பகுதியில் அமைந்திருக்கும் கெம்ப்டி நீர்வீழ்ச்சி 40 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவி உத்தரகண்ட் தலைநகர் டேராடூனிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

படம் : Harshanh

திருமூர்த்தி அருவி

திருமூர்த்தி அருவி

திருமூர்த்தி அருவி கோயம்புத்தூருக்கு 86 கிலோமீட்டர் தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக எழுப்பப்பட்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X