பி.ஆர் மலைகள் அல்லது பிலிகிரி ரங்கணா மலைகள் என்று அறியப்படும் இந்த மலைப்பிரதேசம் மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் பன்முக இயற்கைச்சூழலியலைக்கொண்டுள்ளது.
இந்த பிலிகிரி ரங்கணா மலை தன் பெயரை இங்குள்ள வெண்ணிற மலையில் அமைந்துள்ள ரங்கநாதஸ்வாமி கோயில் மூலம் பெற்றுள்ளது. இந்த பி.ஆர் மலைகள் சாமராஜநகர் மாவட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் தென்கிழக்கு எல்லையில் தமிழ்நாட்டை ஒட்டி அமைந்துள்ளது.
காட்டுயிர் மற்றும் சூழலியல்
பிலிகிரி ரங்கஸ்வாமி கோயில் காட்டுயிர் சரணாலயம் சுருக்கமாக BRT காட்டுயிர் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. இது 539 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
5091 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இயற்கை பாதுகாப்பு மையம் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்களை இணைக்கும் ஒரு இணைப்பு மலையில் அமைந்துள்ளது. இப்பகுதி வறண்ட மற்றும் பசுமை மாறா இலையுதிர்காடுகளைக்கொண்டுள்ளது.வளமான தாவரச்செழிப்பைக்கொண்டுள்ளதால் அதிக காட்டுயிர்களும் விலங்குகளும் இங்கு வசிக்கின்றன.
இந்த காட்டுயிர் சரணாலயம் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்யமங்கலம் காட்டுயிர் சரணாலயத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இந்த காட்டில் காட்டெருமைகள், கரடி, புள்ளி மான், சாம்பார் மான், சிறுத்தைகள், காட்டுநாய்கள், யானைகள் மற்றும் நான்கு கொம்பு மான் போன்றவை வசிக்கின்றன.
மேலும் 200 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் இங்கு காணப்படுகின்றன. கொண்டைப்பருந்து, வெண்சிறகு பட்டாணிக்குருவி, துடுப்பு வால் கரிச்சான் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
சாகச விரும்பிகளுக்கான அம்சங்கள்
பாறையேற்றம், காவேரி, கபிலா ஆறுகளில் ஆற்றுப்படகு சவாரி போன்றவற்றுடன் தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி போன்ற பொழுது போக்கு அம்சங்களும் ஏராளமாக இந்த ஸ்தலத்தில் சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கின்றன..
ஆன்மீக சுற்றுலா அல்லது விடுமுறை சுற்றுலா எதுவாக இருந்தாலும் இந்த பி.ஆர் மலைகள் ஒரு அற்புதமான சுற்றுலா / யாத்ரீக ஸ்தலமாக திகழ்கிறது. கோயிலுக்கு விஜயம் செய்வதாக இருந்தால் தேர்த்திருவிழா நடக்கும் மாதமான ஏப்ரல் மாதத்தில் செல்வது சிறந்தது. காட்டுயிர் பூங்காவுக்கு விஜயம் செய்யும் நோக்கத்துடன் செல்ல விரும்பினால் ஜுனிலிருந்து அக்டோபர் வரை உள்ள இடைப்பட்ட காலம் உகந்ததாகும்.
உல்லாசமான இனிமையான விடுமுறைச்சுற்றுலா அனுபவத்தை பெறவிரும்புபவர்களுக்கு இது மிகவும் உகந்த ஸ்தலமாகும்.