நீங்கள் இந்த கோடை காலத்தில் எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென ஆசைப்படுகிறீர்களா? இருப்பினும் கதிரவன் உங்கள் கட்டளைக்கு அடி பணிய மறுத்து வெளுத்து வாங்குகின்றானா? நீங்கள் சுற்றி பார்க்க நினைக்கும் ஒரு இடம் பெங்களூரு எனில், கண்டிப்பாக இந்த குண்டே பெட்டா பயணம் உங்களுக்கு சிறந்ததோர் அனுபவத்தை தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். அதிலும் நம் பயணம், இரவு நேர பயணமாக இருக்குமாயின் அது இன்னும் நம் பயணத்தை இதமாக்கி மனதை இனிமையை கொண்டு வருடும்.
இந்த கோடைக்காலம் வந்துவிட்டாலே... நம் கால்கள் தரையை தொட யோசிக்கிறது... என்ன செய்வது? வருணபகவான் காதுகளுக்கு நம் குரல் கேட்காமல் போக...இயற்கையை தேடி நாமும் அலைய தொடங்குகிறோம். நாம் செல்லும்பகுதி குளிர்ந்து காணப்பட்டால், செல்லும் நாம் மீண்டும் வீட்டிற்கு துள்ளி வருவோமா? என்பதே சந்தேகம் தான். நாம் செல்லும் பள்ளத்தாக்கு பகுதிகளில் மலர்கள் ஒளிந்து பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றினால், கண்டிப்பாக மலர்களின் மகரந்த துகள்களின் அடியில் நம் மனமும் தொலையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.
ஆம் உத்தரகண்டில் உள்ள அப்பேற்ப்பட்ட பகுதியை போல் ஒரு பயணம், நான் செல்ல வேண்டுமென ஆசைகொண்டேன். அதே நேரத்தில், நான் செல்லும் ஒன்று இரவு நேரப்பயணமாக இருக்க வேண்டுமென்பதிலும் கவனமாக நான் இருந்தேன்.
என்னுடைய தோழர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்த நான் இறுதியில் செல்ல போகும் இடத்தை உறுதி செய்தேன். ஆம் வெகுநேர ஆலோசனைக்கு பிறகு என் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க... நான் தேர்ந்தெடுத்த ஒரு இடம் குண்டே பேட்டா தான். ஆம், பெங்களூருக்கு அருகில் இருக்கும் இந்த இடம், நேரத்தை பொருத்தமட்டில் குறைவே என்பதால் நான் இந்த இடத்தை 'ஒகே' செய்தேன். நான் முதன் முதலில் செல்லும் இரவு பயணமும் இதுவே ஆகும். மிதமான வானிலையாலும் நமக்கு கைகொடுக்கும் இந்த குண்டே பெட்டாவிற்கு நான் அங்குள்ள உள்ளூர் வாசிகளின் உதவியுடன் செல்ல வேண்டுமென முடிவெடுத்தேன்.
குண்டே பெட்டாவை பற்றிய சிறு பத்தி உங்களுக்காக:
பெங்களூரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம் தான் இந்த குண்டே பெட்டா. இரண்டு பாறை அமைப்புகளை கொண்டு கர்நாடகாவில் காணப்படும் ஒரு அழகிய இடம் தான் இந்த குண்டே பெட்டா. ஆம், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திலுள்ள பாண்டவப்புரா என்னும் ஊரில் உள்ள இந்த குண்டே பெட்டா, கடல் மட்டத்திலிருந்து 2882 மீட்டர் உயரத்தில் அமைந்து, செங்குத்தான பாறைகளுடன் காணப்படுகிறது. வரலாற்றின் சிறப்புமிக்க இந்த பாண்டவப்புரா, சிறை வாசத்தின் போது பஞ்ச பாண்டவர்களும் அவர்களின் தாயாருமான குந்தி அம்மையாரும் தங்கி சென்ற ஒரு இடமாக நம்பப்படுகிறது.
அப்பொழுது குந்தியும் பஞ்ச பாண்டவர்களும் கொண்ட பாசம்... மலைகளை நோக்கி உருவாக்கப்பட்டது என்றும் கதைகள் உண்டு. அதனாலே இந்த இடத்திற்கு தன் தாயின் பெயரான குந்தியின் பெயரை பாண்டவர்கள் வைத்ததாக வரலாறு கூறுகிறது. அதேபோல் இந்த மலையின் அடிவாரத்தில் ஒரு ஆலயமும் அமைந்து நம்மை அமைதியடைய செய்கிறது. இந்த ஆலயம் மிகவும் புகழ்பெற்ற ஆலயம் என அங்கிருப்பவர்கள் கூற, பக்தி நீங்கா தன்மையுடன் ஆலயத்தை சுற்றி பார்த்து ஆச்சரியம் கொண்டு தான் போகிறோம்.
Aditya Patawari
இந்த குண்டே பெட்டாவுக்கு எப்படி செல்வது?
அந்த சனிக்கிழமையின் இரவு பொழுதில், அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்திற்காக நான் எம்.ஜி சாலையில் காத்திருந்து 9 மணிக்கு பயணத்திற்கு ஆதிப்புள்ளி இட்டேன். பெங்களூரிலிருந்து குண்டே பெட்டா, சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த 130 கிலோமீட்டர்களை கடக்க நமக்கு தோராயமாக 4 மணி நேரம் தேவைப்படுகிறது. அன்றைய அதிகாலை பொழுதில் பயணத்தில் நாங்கள் நடக்க வேண்டுமென்னும் ஆலோசனை கிடைக்க, என்னுடைய ஆற்றலை நான் மனதளவிலும் உடல் அளவிலும் சேமித்து கொண்டு... பயணத்தை தொடருவதற்கு ஏதுவாக சிறிது கண் அயர்ந்து தூங்கினேன்.
என் கைகளில் ஜி.பி.எஸ் வசதி இருந்தது, அதனால் என்னுடைய பயண அட்டவணைக்கான தாகத்தை தீர்த்து, அது எனக்கு தகவலை தந்து கொண்டிருந்தது. ஆம், பெங்களுரிலிருந்து புறப்படும் நாம் பிடாடி - ராமநகரம் - மாண்டியா - பாண்டவபுரா - குண்டே பெட்டா என மாநில நெடுஞ்சாலை 17இன் வழியாக செல்ல வேண்டுமென்பதனை ஜி.பி.எஸ் உதவியுடன் நினைவில் தேக்கி கொண்டு நான் செல்ல, பேருந்து சரியாக இரவு 1 மணி அளவில் எங்களை குண்டே பெட்டாவிற்கு அழைத்து சென்றது. நாங்கள் அனைவரும் அங்கே இறங்கி ஒரு சிறிய மாநாட்டினை போட, ஏனைய சுற்றுலா ஆர்வலர்களும் எங்களுடன் இணைந்து பயணத்தின் எதிர்ப்பார்ப்பை பற்றி மனம் விட்டு பேசி கொண்டிருந்தனர். அந்த முகம் தெரியாதவர்களுள் சிலர் தோழர்களாகவும் ஆனார்கள்.
Aditya Patawari
பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள்:
பயணத்திற்கு ஏதுவான தோல்களில் மாட்டும் தன்மை கொண்ட பை, கூடுதலாக உடைகள், ஒரு மெல்லிய சட்டை, நன்கு பொட்டலப்படுத்தப்பட்ட உணவு, வாட்டர் பாட்டில்கள், அடிப்படை / தனிப்பட்ட மருத்துகள், கிருமி நாசினி (சோப் வகைகள்), தூங்குவதற்கு ஏதுவான பைகள், ஒளிவிளக்கு என பயணத்திற்கு அத்தியவாசிய பொருட்களின் பட்டியல் அமைந்து நம் பயணத்தின் கடினத்தை குறைக்கிறது.
Aditya Patawari
பயணத்திற்கு ஏதுவான காலங்கள்:
நான் மார்ச் மாதத்தின் பொழுது இந்த குண்டே பெட்டாவை ரசித்தேன். இந்த இடத்தை ரசிக்க காலங்கள் எந்த ஒரு வகையிலும் கைகளை விரிக்காத போதிலும், செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களின் இடைப்பட்ட காலங்களில், நம் பயணத்திற்கு சிறந்ததொரு மாதங்களாக அமைகிறது. பருவ மழைக்காலங்களின் போது இந்த பயணத்தின் பாதைகள் வழுவழுப்புடன் இருக்க, யாராலும் இந்த பயணம் பரிந்துரை செய்யப்படுவது இல்லை. நாம் இரவு நேரப்பயணத்தை கோடைக்காலத்தின் போது தேர்ந்தெடுக்க மறுப்போமாயின் அப்பொழுதும் யாரும் இந்த இடத்தை நமக்கு பரிந்துரை செய்வதில்லை. ஆம், கோடைக்காலத்தின் போது இரவு நேரங்களில் மட்டும் இனிமையான பயணமாய் இது அமைய, அனைவரும் இரவு பொழுதையே பயணத்திற்கு உகந்த ஒரு பொழுதாக கருதுகிறார்கள் என்று கூறலாம்.
Aditya Patawari
இனிமையான இரவு பயணம்:
கடும் வெயில் குறைந்து
கதிரவன் ஓய்வெடுக்க
நிலா தலையை மெல்ல தூக்க
எங்கும் இருள் சூழ்ந்து
இருக்கும் இடம் தெரியாமல் போக
தலைவரின் சொல் மெல்ல துளிர்விட
அவரின் ஆலோனைக்கேற்ப எடுத்தோம்
நாங்கள் கொண்டு வந்த ஒளி விளக்கை...
நாங்கள் சென்ற அந்த வழி அகன்று விரிந்து காணப்பட, அது தான் மிகவும் எளிதான ஒரு வழி என எங்களுட்ன் வந்த ஆலோசனையாளர் ஒலி (குரல்) கொடுத்தார்.
நாங்கள் சென்ற நிலப்பரப்பின் தன்மை திடீரென மாறிவிட, சமமான பகுதியில் நாங்கள் மெல்ல ஏறி சென்றோம். எங்கள் கையில் இருந்த விளக்கும் கையை விரிக்க, போதுமான வெளிச்சமற்று நாங்கள் தவித்தோம்.
Aditya Patawari
குண்டே பெட்டா
எங்களுக்குள் ஒரு பயம் அதிகரிக்க, மெல்ல நாங்கள் முன்னோக்கி செல்ல கற்பாறைகள் மீது நாங்கள் கால்களை பதிப்பதை உணர்ந்து செட்டென அமைதியானோம். நாங்கள் சென்ற ஏற்றப்பாதை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து குறுகிய பாதை ஒன்று தோன்ற, நாங்கள் கண்ட அந்த பெரிய பாறைகளின் வழியே மெல்ல ஆமை நடைபோட்டு சென்றோம். அந்த பாறைகள் தான்... நாங்கள் கொண்டுவந்த மூட்டை முடிச்சுகளை இறக்குவதற்கு சரியான இடம் என முடிவெடுத்து கழற்றி வீச, ‘பொத் பொத்தென்னும்' சத்தம் காதுகளில் ரீங்காரமாய் கேட்டது. அதன் பிறகு முன் நடந்து பாதை வழியாக நாங்கள் செல்ல, இறுதியில் இடைவெளி வழியாக ஏற தொடங்கினோம்.
ஒரு சில நீண்ட கடின பாதையைத் தவிர, எங்கள் பயணத்தில் நாங்கள் எந்த ஒரு சிரமத்தையும் காணவில்லை. ஆம், நன்கு அமைக்கப்பட்ட பாதை எங்களை சீறாக வழி நடத்தி செல்ல...இருப்பினும் கொஞ்சம் கவனமாகவே எங்கள் காலடிகளை நாங்கள் முன்னெடுத்து வைத்து பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் ஏறிய அந்த பாதையை கடக்க சுமார் 2 மணி நேரம் எங்களுக்கு தேவைப்பட்டது. அதுவும் மலையில் நாம் இரவு பொழுதில் ஏற, அது நமக்கு த்ரில்லான ஒரு பயணமாகவும் இனிமையானதொரு பயணமாகவும் அமைந்து மனதை இதமாக்கியது. ஒரு சில நிமிடங்கள் விழுந்த தூரல், எங்களை புத்துணர்ச்சி அடைய செய்து மேலும் எங்கள் பயணத்துக்கு பலத்தை சேர்த்தது.
Aditya Patawari
பயணத்தின் தூரம்:
அந்த அதிகாலை பொழுதின் 2:30 மணி அளவில்... எங்கள் 2 கிலோமீட்டர் பயணத்தின் மூலம் கற்பாறைகள் சூழ்ந்த மலைப்பகுதியை நாங்கள் அடைந்தோம். நாங்கள் முன் கடந்த பாதையைவிட இந்த பகுதி கொஞ்சம் மென்மையான சரிவுகளுடனே காணப்பட்டது. அங்கே உச்சியில் காணப்பட்ட நீளமான கல் தூண் முன்னே எங்கள் மனதினை பறிகொடுத்து தேடிக்கொண்டிருக்க... அந்த அதிகாலை பொழுதில் கூடாரம் அமைத்து ஓய்வுக்கு தயாரானோம். நாங்கள் கொஞ்சம் தூரம் நடந்து சென்று நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் இடத்தை அடைய, அனைவரும் எங்களோடு அந்த அனல் அழைப்பில் பங்கேற்று இன்பமானதோர் உணர்வினை கொண்டனர்.
Aditya Patawari
முகாமில்:
அங்கேயே நாங்கள் சில மணி நேரம் சுற்றிகொண்டிருந்து பின் நாங்கள் கொண்டு சென்ற, தூங்குவதற்கு ஏதுவான அந்த பையை விரித்தோம். அந்த அழகிய நிலாவை ரசித்து கொண்டிருந்த என் கண்கள்...வானத்தில் பூத்துக்குழுங்கும் நட்சத்திரங்கள் அந்த நிலாவிடம் சண்டையிட்டுகொண்டிருப்பதை ரசித்தபடி அயர்ந்து தூங்க முயற்சி செய்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு விடியற்காலை பொழுது எங்களை வரவேற்று அந்த நாளுக்கு தயார் செய்ய, அந்த அழகிய காட்சி எங்கள் கண்களை வெகுவாக கவர்ந்து எங்கள் இதழ்கள் கதைகள் பல பேச ஆரம்பித்தன.
நாங்கள் கண்ட அந்த கல் தூண்... அழகிய பார்வையை எங்களுக்கு சமர்ப்பித்து காட்சிகளால் மனதை இதமாக்க...பாண்டவப்புரா ஏரி எங்களை ஏளனமாய் பார்த்து சிரித்தது. ஆம், இத்தகைய இயற்கையை விடுத்து ஏன் இந்த செயற்கை உலகம் என்னும் நோக்கத்தில் தான் அது சிரித்ததோ? அது அந்த ஏரியின் நீருக்கே வெளிச்சம்... இந்த பாண்டவப்புரா ஏரியையும் அதனை சுற்றி இருக்கும் பகுதியையும் ‘தொன்னூர் ஏரி' என்றும் அழைப்பர். அங்கு நாங்கள் கண்ட அந்த சூரிய உதயக்காட்சி எங்கள் மனதை வருடி அமைதியால் நிலைகுழைய செய்தது. சூரியன் மேலே சென்று எங்களை ஏளனமாய் பார்க்க, நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறுபடியும் கீழே இறங்க தொடங்கினோம்.
Aditya Patawari
குண்டே பெட்டா
நான் அந்த அழகை ஏக்கத்துடன் பார்த்து ரசித்து இறங்கியபடி இருக்க...காலை பொழுதில், மலைகளில் நாங்கள் கண்ட அந்த பாறை ஒருவித பதட்டத்தை மனதில் ஏற்படுத்தியது. அட ஆமாம்ங்க....நாங்கள் இரவில் இறங்கி நடந்த அந்த பாதை, என்ன என தெரிந்தால் நீங்களே ஒரு நிமிடம் பயம் கொள்வீர்கள்...நாங்கள் கடந்து வந்த அந்த கற்பாறைகள்....சாதாரண பாறைகள் அல்ல...அது எரிமலை கிரானைட் பாறைகள் மற்றும் கற்பாறைகள் என்பதை தெரிந்துகொண்ட பிறகு நம்முள் ஏற்படும் ஒரு உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா என்ன? நாங்கள் கண்ட அந்த பாறைகள், மிகவும் பெரிதாக காணப்பட்டதுடன் வெவ்வேறு வடிவங்களையும் கொண்டிருந்தது. அந்த பாறைகளில் சில அடையாளங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
இறுதியாக கீழே இறங்கிய நாங்கள், ஒரு பெருமூச்செறிந்த போதிலும் இத்தகைய அழகிய பயணம் முடிவுற போவதை நினைத்து ஒரு ஏக்கம் மனதில் இருந்தது. அங்கே அடிவாரத்தில் காணப்பட்ட ஆலயத்தில் அமைதியை தேடி, அதன் பின்னர்...பல்களை துலக்கிவிட்டு, புத்துணர்ச்சியை முகத்தில் விதைக்க முயற்சி செய்து...சுற்றுலா வழி நடத்துனர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை உணவை மனதார உண்டு, பெங்களூருக்கு செல்ல தயராகினோம். இருப்பினும், எங்களுக்கு இறுதியில் திருப்புமுனையாக நாங்கள் கண்ட அந்த எரிமலை கிரானைட் பாறைகளை மீண்டும் எப்பொழுது காணுவோம் என்னும் ஏக்கம் ஒரு ஒரத்தில் இதயத்தில் தேங்கி. நினைவுகளை சுமந்து கொண்டு ஊருக்கு நடைப்போட்டது கால்கள்.
Aditya Patawari