கோயம்பத்தூரில் சுற்றிப்பார்க்க எதுவுமே இல்லை என்று பலர் குறைபட்டு கொண்டாலும் வேறெந்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் வாய்க்காத ஒரு வசதி கோயம்பத்தூர் வாசிகளுக்கு உண்டு. ஊட்டி, கொடைக்கானல் என்ற தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டு அழகான மலைவாச ஸ்தலங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியும். விடுமுறை நாட்களில் அதிகாலை நண்பர்களுடன் வண்டியில் கிளம்பி ஊட்டிக்கு டீ குடிக்க மட்டுமே செல்லும் இளைஞர்கள் கோயம்பத்தூரில் உள்ளனர். அதே போல தான் கொடைக்கானலுக்கும். சுற்றிப்பார்க்க நல்ல நல்ல இடங்களை கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு ஒரு சின்ன சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள். நாம் பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக கொடைக்கானலை நோக்கி பயணிப்போம்.
கோயம்புத்தூர் - பொள்ளாச்சி:
பயணத்தின் முதல் கட்டமாக நாம் கோயம்பத்தூரில் இருந்து 43கி.மீ தூரத்தில் இருக்கும் பொள்ளாச்சியை அடைய வேண்டும். பசுமை நிறைந்த பொள்ளாச்சியில் நாம் சுற்றிபார்க்க நல்ல இடங்கள் உண்டு. ஆழியார் ஆணை, டாப் ஸ்லிப், வால்பாறை போன்றவை பொள்ளாச்சிக்கு பக்கத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்கலாகும். இந்த சாலை போக்குவரத்து நெரிசல் அற்றது என்பதால் நாம் பொள்ளாச்சியை 40 நிமிடத்தில் அடைந்து விட முடியும்.
பொள்ளாச்சி - பழனி:
பொள்ளாச்சியை அடைந்த பிறகு அங்கிருந்து உடுமலைபேட்டை வழியாக நாம் பழனியை அடைய வேண்டும். 65 கி.மீ தூரம் கொண்ட இந்த பயணத்தை நாம் ஒரு மணிநேரத்தில் கடந்து விடலாம். முடிந்தால் அப்படியே முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதும், தமிழ் நாட்டின் முக்கிய கோயில்களில் ஒன்றான பழனிக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு பயணத்தை தொடரலாம்.
பழனி - கொடைகானல்:
அடுத்ததாக நாம் பழனியில் இருந்து கொடைக்காணல் நோக்கி செல்லவிருக்கிறோம். பழனியில் இருந்தே கொண்டை உசி வளைவு சாலைகள் ஆரம்பமாகி விடுகின்றன. பழனியில் இருந்து கொடைகானல் 64 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பயணம் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது ஆகும். கொஞ்சம் ஆபத்தான இந்த சாலையில் கூடுதல் கவனத்துடன் வாகனத்தை செலுத்துவது நல்லது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த அழகிய நகரம் ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் கோடை வெப்பத்தை சமாளிக்க மற்றும் உயர் அதிகாரிகள் ஓய்வெடுக்க உருவான நகரம் தான் இந்த கொடைக்கானல்.
இன்று தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நகரம் தேனிலவு வரும் புது மணதம்பதியரிடையே மிகப்பிரபலம். அருமையான சீதோஷனதையும், சுற்றிபார்க்க நல்ல நல்ல இடங்களும் இங்கே உண்டு. வாருங்கள், கொடைக்கானலில் ஒரு இன்ப உலா வரலாம்.
கொடைகானல் ஏரி:
கொடைக்கானலின் முக்கியமான சுற்றுலா இடம் என்றால் அது கொடைகானல் ஏரி தான். செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியில் படகு சவாரி மிகப்பிரபலம் ஆகும். இது ஒரு நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. காதலர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது போல உள்ளது இந்த ஏரி.
பேரிஜம் ஏரி:
கொடைக்கானலில் இருக்கும் இடங்களிலேயே அழகானது என்றால் அது பேரிஜம் ஏரி தான். இந்த ஏரியை அடைய வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டியது அவசியம். கொஞ்சம் கடினமான பாதையை தாண்டியே இந்த ஏரியை அடைய முடியும்.
இந்த பகுதியில் பல அரியவகை பறவைகளும், விலங்குகளும் வசிக்கின்றன. இந்த ஏரியின் நீரும் மிகுந்த சுவை நிறைந்தது. எந்தவித தொந்தரவும் இல்லாமல் இயற்கையை ரசிக்க நினைப்பவர்கள் வர கண்டிப்பாக வேண்டிய இடம் இந்த பேரிஜம் ஏரி. இவை தவிர குணா குகை, பொட்டனிக்கல் கார்டென் சூசைட் பாயின்ட் போன்ற இடங்களும் இங்கே உண்டு.