"கோவா மலையாரம், கோத்த கடலாரம்" இரண்டும் பூண்டது நம் தமிழ்நாடு.
நம் தலைநகரம் சென்னையைக் கடல் தாலாட்டுகிறது. நம் தென்னெல்லைக் குமரியையோ கடல் மூன்று பக்கமும் அணைத்துச் சீராட்டுகிறது.
சென்னையிலிருந்து குமரிவரை, பயணம் முழுவதும் தமிழ் நாட்டில் இயற்கை பொக்கிஷங்கள் தழும்புகின்றன. குமரியின் முக்கடல் சங்கமத்தைக் காண்பதே ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஆனால் அதற்கு மேலும் இந்தப் பயணத்தில் எத்தனையோ இனிமைகள் இருக்கிறது.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
வழி 1 :
NH32 - NH38 -சென்னை - விழுப்புரம் - திருச்சி - NH44 கன்னியாகுமரி ரோடு - கன்னியாகுமரி
வழியில் பார்க்கக் கூடிய இடங்கள்
விழுப்புரம், திருச்சி, தேனி ஆகியவை
பயண தூரம்
708 கிமி
பயண நேரம்
சுமார் 10 மணி 49 நிமிடங்கள்
வழி 2 :
சென்னை - காஞ்சிபுரம் - NH48 - கிருஷ்ணகிரி - கொழிஞ்சிப்பட்டி டோல் பிளாசா - திண்டுக்கல் - மதுரை - திருநெல்வேலி - கன்னியாகுமரி
வழியில் பார்க்கக் கூடிய இடங்கள்
ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி
பயண தூரம்
829 கிமி
பயண நேரம்
சுமார் 12 மணி 42 நிமிடங்கள்
உங்களுக்கு ஒரு வேடிக்கை சொல்கிறேன். முதல் வழி தூரத்தில் குறைவாயினும் அதில் தான் டோல்கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை அதிகம்!
முதல் வழியை நீங்கள் தேர்வு செய்வீர்களாயின், ஒருவேளை நீங்கள் இலக்கினைச் சீக்கிரம் அடைந்துவிடக் கூடும். இரண்டாம் வழியிலோ, சற்று அதிக நேரமானாலும் வழி கண்ணுக்கு அழகியது, பார்க்கக் கூடிய இடங்கள் அதிகம்.
நானும் என்னோடு பயணம் செய்பவர்களும் குறைந்த நேரத்தில் முடிந்த வரை அதிகமான இடங்களைக் காணவே விரும்புவோம். அத்துடன் நம் பயணங்கள் எல்லாவற்றிற்கும் மூல இலக்கு என்ன? நம் பயண நேரம் நல்ல இனிமையான முறையில் செலவிடப்பட வேண்டும் என்பது தானே!
ஆகவே நாங்கள் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்தோம். இந்த வழியில் சுமார் 10 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. (சுங்கச் சாவடிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய வரைபடத்தை இங்கே பார்க்கலாம்: http://www.nhtis.org/nhai/map.htm#). நாங்கள் நான்கு பேர் கார் மூலம் பிராயணம் செய்தோம்.
முதல் நாள் :
கண்கள் உற்சாகப் பரப்பரப்பில் பளபளக்க, நாங்கள் சென்னையிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கே புறப்பட்டு விட்டோம். முதலில் நாங்கள் சென்றடைந்தது ஸ்ரீபெரும்புதூர் தலமே. ஆயினும் புலர்காலைப் பொழுதாக இருந்தமையால் திரும்பி வரும்போது இந்தத் தலத்தைக் காணலாம் என்று முடிவெடுத்துப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
கார் சாலையில் வெண்ணெயில் வழுக்கிக் கொண்டு செல்வதைப் போல் சென்றது. இப்படிப்பட்ட நல்ல சாலைகளே பயணத்தை மேலும் இனிமையாக ஆக்கிப் பயணக் களைப்பைப் பெருமளவு குறைக்கின்றன.
கேரளாவில் இப்படி ஒரு இடமா!
காஞ்சிபுரம் அடைந்ததோம்:
சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நாங்கள் "நகரேஷு காஞ்சி" என்று புகழப்பெறும் காஞ்சிபுரத்தை அடைந்தோம். ஆயிரம் ஆலயங்கள் கொண்ட அந்த அற்புத நகரம் எங்களைத் தூப வாசனையுடன் வரவேற்றது. நாங்கள் இங்கு என்னென்ன பார்க்க வேண்டும், எத்தனை நேரம் செலவிட வேண்டும் என்பதெல்லாம் துல்லியமாகத் திட்டமிட்டிருந்தோம். அதெல்லாம் ஒன்றும் சரியாக வரவில்லை. காஞ்சியின் சிற்ப விசித்திரங்களைக் கண்டு களிப்பதிலேயே எங்கள் பொழுது போய்விட்டது!
PC: Ssriram mt
சென்னை - கன்னியாகுமரி மூன்று நாள்கள் அற்புத பயணம்
கண்கவரும் காமாக்ஷி :
முதலில் நாங்கள் காஞ்சியம்பதியின் மகாராணியாகிய காமாக்ஷியின் ஆலயத்திற்குச் சென்றோம். அங்கிருந்த சிற்பத் தூண்கள் எங்கள் கண்னையும் கருத்தையும் கவர்ந்தன.
ஏகாம்பர நாதர்- பெயருக்கான காரணம்??
அடுத்துப் பஞ்சபூத ஸ்தலங்களில் ப்ருத்வி (பூமி) ஸ்தலமாகிய ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சென்றோம். இந்தப் பெயர் ஏக-ஆம்ர-நாதன் என்பதன் சேர்க்கை. ஒரு மாமரத்தின் வடிவானவன் அல்லது தலைவன் என்று பொருள்படும் இது. இங்கு 3500 ஆண்டுகள் பழமையான, நால்வேதங்களுக்குச் சமமான நான்கு கிளைகளை உடைய மாமரம் தலவிருட்சமாக உள்ளது.
PC: wikipedia
திருமணத்தடையா? கிளிக் செய்யுங்கள்
பனியில்லாத மார்கழியா? பட்டுப்புடவை இல்லாத காஞ்சிபுரமா?
காஞ்சிபுரத்தின் உயர்ந்த பட்டு நூலில் நெய்யப்பட்ட கைத்தறிப் பட்டுப் புடவைகளும், அவைகளின் அழகிய வேலைப்பாடுகளும், கண்ணைப் பறிக்கும் ஜரிகை வேலைப்பாடுகளும் உலகாளாவிய பெண்களின் மனதைக் கவர்ந்து அவர்களின் உடை அலமாரிகளில் இன்றியமையாத இடம்பெற்று விட்டனவே! அவற்றைக் காணாமல் கிளம்பவவாவது!
PC: రహ్మానుద్దీన్
காலை உணவிற்கு கிருஷ்ணகிரி :
பட்டுப்புடவைகள் வாங்கியானதும் எங்கள் பயணம் தொடர்ந்தது. கிருஷ்ணகிரி வந்தபோது கூடவே பசியும் வந்துவிட்டது! எங்கே சாப்பிடலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தபோது, சரவணபவன் ஆபத்பாந்தவனாய்க் கண்ணில் பட்டது. உள்ளே சென்றால், நெய் சொட்டும் தோசையும் சுடச் சுடக் கேசரியும் கொண்டு வந்து வைக்கப்பட்டது. இன்னும் தென்னிந்தியாவின் உணவு வகைகள் எல்லாமே கிடைக்கின்றது. கிருஷ்ணகிரியில் இன்னும் அடையார் ஆனந்த பவன், ஸ்ரீ முருகன் ஃபுட் கோர்ட், மெக்டொனால்ட்ஸ், ஸ்ரீ கிருஷ்ண பவன் எல்லாம் இருக்கிறது.
PC: Ssanthosh555
பைக் ரைடிங் பிடிக்குமா? அப்போ கிளிக் பண்ணுங்க
அடுத்து மணக்கும் மல்லியின் மதுரை :
சுகமாய் அன்று காலைச் சிற்றுண்டி முடிந்ததும் கிருஷ்ணகிரியிலிருந்து கிளம்பி மாலையில் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். கல்விக்கும் கலைக்கும் காலகாலமாய் நிலைக்களனாய் விளங்குவதாயிற்றே நம் மதுரை! வந்ததும் முதல் வேலையாக "மதுரை அரசாளும் மீனாக்ஷி"யைத் தரிசிக்கக் கிளம்பினோம். மீனாக்ஷியம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்துச் சிற்பத் தூண்களைப் பார்த்த கண்களை விலக்க முடியாது. இரவு உணவு பாரம்பரிய தென்னிந்திய உணவு வகைகளின் சுவைக்குப் பெயர்பெற்ற ஸ்ரீசபரீஸில் கழிந்தது.
PC: எஸ்ஸார்
இரண்டாம் நாள் !
எங்கள் இலக்கான கன்னியாகுமரியைச் சீக்கிரம் அடைய எண்ணிய நாங்கள் சாலையில் வெகு நேரம் கழிக்க விரும்பவில்லை. முருகன் இட்லிக் கடையில் காலைச் சிற்றுண்டியருந்தியவுடனே கிளம்பிவிட்டோம். மிகப் பிரபலமான முருகன் இட்லிக் கடையில் அதன் புகழுக்கேற்றபடி சிற்றுண்டிகள் மிகத் தரமாக இருக்கின்றன.
கன்னியாகுமரி வந்தாச்சு :
இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான யாத்திரைத் தலமான கன்னியாகுமரியை இரண்டு மணி நேரங்களில் அடைந்து விட்டோம். இங்கு தேவி பார்வதி கன்னிகையாய் எழுந்தருளித் தவமிருந்து நம் புண்ணிய பாரதத்தின் எல்லையைக் காத்து வருவதாலேயே இத்தலம் இப்பெயர் பெறுகிறது.
PC: Ravivg5
தங்கும் விடுதிகள் :
இங்கு வந்து சேர்ந்ததும் நாங்கள் செய்த முதல் வேலை, கடலை நோக்கும்படியான தங்கும் விடுதி எதிலேனும் தங்க இடம் தேடியது தான். எங்கெங்கோ தேடிச் சலித்து முடிவில் கிழக்கு ரத வீதிக்கு வந்து சேர்ந்தோம். "Sea View" என்று போட்டிருக்கும் எல்லா விடுதிகளிலும் கடலின் காட்சி தெரிவதில்லை - ஏமாந்து விடாமல் கவனமாக இருங்கள். விவேகானந்தா கேந்திரம் தங்குவதற்குச் சௌகரியமான இடம் அளிக்கிறது. அங்கிருந்து கடற்கரைக்குச் சுலபமாகச் சென்று விடலாம். ஆனால் நல்ல கடல் காட்சி கிடைக்கும் விடுதி வேண்டும், சூரிய உதயம், அஸ்தமனம் ஆகிய காட்சிகளை பால்கனியில் அமர்ந்து இரசிக்க வேண்டும் என்றால், கீழ ரத வீதியில் இருக்கும் விடுதிகளே சிறந்தது (கன்னியாகுமரியில் இருக்கும் தங்கும் விடுதிகளை நம் வலைத் தளத்தில் இங்கு பாருங்கள்: /Kanyakumari/hotels/)
இதன் பின் நாங்கள் கடற்கரையில் சுற்றி, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சின்னச் சின்ன நினைவுப் பரிசுகள் வாங்கிக் கொண்டோம்.
கன்னியாகுமரியின் பகவதி ஆலயம் :
பின் ஆனந்தமாகக் கன்னியாகுமரி அம்மனின் தரிசனம்! பகவதி பளபளவென்ற மூக்குத்தியுடன் பாங்காகப் புன்னகைக்கிறாள். சிறுமியின் தோற்றத்தில் இருந்தாலும் தனி ஒருத்தியாய் அசுரனை வென்று அகிலத்தைக் காத்த பராசக்தி இவள்.
PC: Sankarrukku
காந்தி மண்டபம் :
கோயிலிலிருந்து காந்தி மண்டபம் சென்றோம். இந்த மண்டபம் காந்தி மகானின் நினைவாய் 1956-ல் கட்டப்பெற்றது. காந்தியடிகள் மறைந்தபோது அவர் மேனி தகனம் செய்யப்பட்டு அந்தப் புனிதச் சாம்பல் இங்கே சமுத்திர நீரில் கரைக்கப்பட்டது. அதன் முன் சாம்பல் பாதுகாப்பாய் வைக்கப்பட ஒரு மண்டபம் கட்டப்பட்டது. இந்த நினைவு மண்டபம் காந்தி மகானின் அஸ்தி இருந்த இடத்தில் தினமும் மதியம் 12 மணிக்குக் கதிரவனின் ஒளி விழுமாறு அற்புதமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
PC: Tony Jones
விவேகானந்தர் பாறை :
கரையிலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் கடலில் அமைந்திருக்கின்றன இரட்டைப் பாறைகள். 1892ல் சிகாகோவிற்குச் சென்று உலகப் புகழ்பெற்ற தன் உரையை ஆற்றுமுன் விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்து இந்தப் பாறையில் அமர்ந்து தியானம் புரிந்தார். இங்கு அவர் நினைவாக விவேகானந்தர் மண்டபம் எழுப்பியிருக்கிறார்கள். நம்மை அங்கு அழைத்துச் செல்ல மின்விசைப் படகுகள் இருக்கின்றன. சாந்தி பொலியும் இந்த மண்டபம் எல்லோரும் காண வேண்டியது.
PC: Nikhil B
திருவள்ளுவர் சிலை :
கன்னியாகுமரியில் காண வேண்டிய மற்றொன்று திருவள்ளுவர் சிலை. 38 அடிப் பாறை மீது 133 அடி உயரமாய் அமைக்கப்பட்டுள்ள பொய்யாமொழிப் புலவரில் சிலை மிக அற்புதமாய் உள்ளது. 133 அடி என்பது திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கும் விதம் பொருத்தமாய் அமைந்துள்ளது. 21-ஆம் நூற்றாண்டின் சிற்ப அற்புதமான இந்தச் சிலை 2000ஆம் ஆண்டு ஜனவரியில் செய்து முடிக்கப்பட்டது.
முக்கியமாய்ப் பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும் பார்த்து முடித்ததும் கதிரவன் மறையும் காட்சியைக் காண விரைந்தோம். கதிர் மறைவதும் மதி எழுவதுமான அந்த எழிற்கோலம் கட்டாயம் காண வேண்டிய ஒன்றாயிற்றே!
PC: Nikhil B
மூன்றாம் நாள் :
கன்னியா குமரியில் அதிகாலை சூரியன் :
மறுநாள், அதிகாலை புலரும் முன் எழுந்து கடற்கரைக்கு விரைந்து சென்றோம். சூரிய உதயக் காட்சியைக் காண வேண்டுமே!
வானில் முதலில் செம்மை படருவதும், கருநீலக் கடல் அழகாக நிறம் மாறுவதும், பொன்னிற ஆதவன் பொலிந்து தோன்றுவதும், கடல் நீர் மின்னிக் கொண்டு கைகொட்டி அவனை வரவேற்பதும் ஏதோ மாயக் காட்சி போலத் தோன்றிற்று. எங்கும் போகாமல் இங்கேயே அமர்ந்து இந்தக் கடலையும் காற்றையும் ஒளியையும் இரசித்துக் கொண்டு இருந்து விடலாமா என்று தோன்றியது. என்ன செய்ய, கடமை காலைப் பிடித்து இழுக்கிறதே! கனத்த மனத்துடன் தான் திரும்ப வேண்டியிருக்கிறது.
நீங்களும் சென்று வாருங்கள் !!
ஆனாலும் மனதினில் பகவதியின் சிரிப்புத் தெரிகிறது. காதுகளில் அலைகளின் ஆரவாரம் நீங்காமல் இருக்கிறது. கதிரொளியும் மதியொளியும் கண்ணில் இருக்கிறது. கன்னியாகுமரி நமக்குள்ளேயே நிறைகிறது.