'வீக் எண்டு' இந்த ஒரு விஷயம் மட்டும் இல்லை என்றால் நம்மில் பலருக்கு வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஐந்து நாட்கள் ஓடியாடி, தலையை பிய்த்துக்கொண்டு, மேலதிகாரியிடம் திட்டு வாங்கி வேலை செய்து ஒரு வழியாக வாரத்தை கடத்தி விடும் நாம், விலை மதிக்க முடியாத வீக் எண்டை வீணடித்து விடுவதை விட கொடுமை எதுவுமே இருக்க முடியாது. வெறுமனே மதியம் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு துங்குவதிலும், ஷாப்பிங் மால்களுக்கு சென்று கூட்டத்தோடு கூட்டமாக பொருட்களை வாங்குவதிலும், சினிமா பார்ப்பதிலும் என்ன இன்பம் இருந்துவிட போகிறது. வழக்கமான இந்த வார இறுதி கூத்துகளை தவிர்த்து மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் விதமான ஒரு பயணத்தை மேட்கொள்ளலாம் வாருங்கள். இந்த முறை நாம் பெங்களுருவில் இருந்து கிளம்பி தருமபுரி, சேலம், கரூர் வழியாக மதுரையை அடைந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வரையிலான சுவாரஸ்யமான ஒரு பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.
பெங்களுரு டு ராமேஸ்வரம்:
பெங்களுருவில் இருந்து ராமேஸ்வரம் 600 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. நமது பயணத்திட்டப்படி NH47 மற்றும் NH7இல் பயணிப்போம் என்பதால் இடையில் நிற்காமல் சென்றால் ஒன்பது அல்லது 10 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தை அடைந்து விடலாம். எப்படியும் மல்லிகை தேசத்தை கடந்துதான் வரவேண்டும் என்பதால் அங்கு ஒரெட்டு சென்று வரலாம். பின்னர் திரும்புகையில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி மற்றும் தஞ்சைக்கும் நேரமிருந்தால் தாராளமாக சென்று வரலாம். சரி, வாருங்கள் நமது பயணத்தை துவங்கலாம்.
Photo:j929
பெங்களுரு - சேலம் :
பெங்களுருவில் இருந்து அதிகாலை கிளம்பினால் எலெக்ட்ரானிக் சிட்டி, ஹோசூர் வழியாக தருமபுரியை அடைந்து அங்கிருந்து சேலத்தை அடையலாம். சிறிய சுற்றுலா எங்கேனும் செல்ல விரும்புகிறவர்கள் சேலத்தில் இருந்து30 கி.மீ தொலைவில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்க்கு செல்லலாம். பசுமை சூழ்ந்த மலைகளை உடைய ஏற்காட்டில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை அடுத்த பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். வாருங்கள்.
Photo:Rsrikanth05
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் வணிகத்தனம் இல்லாத அமைதியாக சுற்றிப்பார்க்க நல்ல இடங்கள் நிறைய உண்டு. முலிகை குணம் கொண்ட நீர் பெருகும் கிளியூர் அருவி, ஏற்காடு ஏரி, சேவராயன் மலை, பகோடா பாயிண்ட் போன்ற இடங்கள் இருக்கின்றன. குறைந்த செலவில் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத சுற்றுலாவுக்கு ஏற்காடு சிறந்ததொரு இடமாகும்.
Photo:Vinamra Agrawal
சேலம் டு மதுரை:
ஏற்காடு செல்லாமல் பயணத்தை தொடர விரும்புகிறவர்கள் சேலத்தில் இருந்து கிளம்பி நாமக்கல் கரூர் திண்டுக்கல் வழியாக வாடிப்பட்டியை அடைந்து அங்கிருந்து மதுரையை அடையலாம். இந்த பயண தூரம் 240 கி.மீ ஆகும். சேலத்தில் இருந்து மதுரையை வந்தடைய குறைந்தது நான்கு மணி நேரமாவது பிடிக்கும்.
மதுரையை அடையும் முன் திண்டுக்கல்லில் உலகப்புகழ் பெற்ற வேணு பிரியாணியை சுவைக்க மறந்து விடாதீர்கள். தனித்துவமான சுவை கொண்ட இந்த பிரியாணிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு.
Photo:a_b_normal123
மதுரை - மல்லிகை தேசம் :
எல்லா மக்களாலும் ஏதோ ஒரு காரணத்திற்காகவாவது விரும்பப்படும் நகரம் என்றால் அது தமிழ் நாட்டில் இருக்கும் மதுரை தான். மனம் வீசும் மல்லிகையும், பேரழகு கொண்ட மீனாட்சி அம்மனும் மதுரையின் அடையாளங்கள்.
நிச்சயம் மதுரையில் ஒரு நாளேனும் சுற்றிபார்க்க ஏராளமான இடங்களும், சுவைத்துப்பார்க்க வகை வகையான உணவுகளும் உண்டு வாருங்கள் அவை என்ன என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Photo:McKay Savage
மதுரை மீனாட்சியம்மன் கோயில்:
வைகை நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த பெருங்கோயில் ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மதுரையின் உயிர் நாடியாக திகழ்கின்றது. மீனாட்சியம்மன் உடையார் சுந்தரேஸ்வரருடன் வீற்றிருக்கும் இக்கோயில் தமிழர் கட்டிடகலையின் சிகரமாக இருக்கின்றது. களிமண்ணால் செய்யப்பட்டதோ என்று வியக்க வைக்கும் வகையில் இங்கிருக்கும் சிற்பங்கள் அழகுநயத்துடன் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம் இக்கோயிலின் மிக முக்கிய பண்டிகையாகும். மதுரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக வரவேண்டிய இடம் இக்கோயில்.
Photo:Ranjith shenoy R
திருமலை நாயக்கர் மஹால்:
மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையின் கலவையாக இருக்கிறது. தமிழ் நாட்டில் முற்கால மன்னர்கள் வாழ்ந்த இடங்களில் எஞ்சியிருக்கும் சிலவற்றில் இந்த நாயக்கர் மஹால் முக்கியமானது. உண்மையில் இப்போதிருக்கும் அளவை காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இருந்ததாம் ஆனால் போர், ஆட்சி மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களினால் அரண்மனையின் ஒரு பகுதி மட்டுமே எஞ்சி நிற்கிறது. மதுரை செல்கையில் இங்கும் கட்டாயம் சென்று வாருங்கள்.
Photo:Dietmut Teijgeman-Hansen
இவை தவிர அழகர் கோயில், காந்தி நினைவு அருங்காட்சியகம் போன்ற இடங்களும் இங்கே பிரபலம். நேரம் கிடைத்தால் அங்கும் சென்று வாருங்கள்.
மதுரையின் உணவுகள்:
மதுரையில் கிடைக்கும் உணவை ஒரு முறை ருசித்தவர்கள் பின் வாழ்க்கை முழுக்க அதுபோல ருசித்து சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். அப்படி சுவைக்கு அடிமையாக்கவல்லது மதுரையில் கையால் அரைத்த மசாலாவில் செய்த உணவுகளும், உயிரை குளிரவைக்கும் ஜிகிர்தண்டாவும். மதுரை ஸ்பெஷல் சிக்கன் குருமா, பரோட்டாவை கண்டிப்பாக சுவைத்து மகிழுங்கள். மதுரையின் சிறப்புகளில் ஒன்று இங்கு அதிகாலை மூன்று மணிக்கும் சுடச்சுட மல்லிகை இட்லி கிடைக்கும்.
Photo:deepgoswami
மதுரை டு ராமேஸ்வரம்:
பயணத்தின் இறுதி கட்டமாக மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிய பயணத்தை துவங்கலாம். NH 49இல் மூன்று மணிநேர பயணத்தில் இந்திய பெருநிலப்பரப்பை பாம்பன் பாலம் வழியாக கடந்து ராமேஸ்வரத்தை அடையலாம். 170 கி.மீ தூர பயணம் இது. ராமேஸ்வரத்தில் பக்தர்கள் வசதிக்காக குறைவான கட்டணத்தில் நிறைய தாங்கும் விடுதிகள் உண்டு. அங்கே இரவு தங்கிவிட்டு அதிகாலை ராமேஸ்வரம் கோயில் தரிசனத்திற்கு செல்லலாம்.
ராமநாதசுவாமி கோயில்:
ராவணன் என்னும் பெரும் சிவபக்தனை கொன்ற பாவத்தை போக்க பகவான் ராமர் ஹிமாலய மலையில் இருந்து சிவலிங்கம் ஒன்றை எடுத்து வர அனுமனை பணிக்கவே அவர் லிங்கத்தை கொண்டு வர அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் சீதாதேவி தன் கைகளால் மணலில் செய்த லிங்கமே இன்று ராமநாதசுவாமி என வழிபடப்படுகிறது. சைவ மற்றும் வைணவர்களின் முக்கிய கோயிலாக இருக்கும் இங்கு 22 தீர்த்த கிணறுகள் இருக்கின்றன. அவற்றில் நீராடினால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் தான் ஹிந்து கோயில்களிலேயே வைத்து நீளமான நடைபாதை உள்ளது. வரலாற்று சிறப்பும், கலை நயமும் மிக்க இந்த கோயிலுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது அவசியம் வரவேண்டும்.
Photo:Swaroop C H
ராமேஸ்வரம் கோயில் நடைபாதை
முன் சொன்னது போல உலகில் இருக்கும் ஹிந்து கோயில்களில் வைத்து மிக நீண்ட நடைபாதையை ராமேஸ்வரத்தில் நீங்கள் காணலாம். இவ்வழியில் இருக்கும் தூண்களில் உள்ள சிற்ப்பங்கள் இன்றைய நவீன கட்டுமானத்திற்கு சவால் விடுப்பவை.
Photo:Roberto and Bianca