ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் இயற்கையின் பேராற்றலுக்கு சவால் விட்ட படி படகில் அமர்ந்து சாகசப்பயணம் செல்வதென்பது அத்தனை சுலபம் இல்லை என்றாலும் சாகசங்களை விரும்புகிறவர்களுக்கு அது சாதாரணம் தான். சாகசப்பபடகு சவாரி ஹிமாலய மலைப்பகுதிகளில் ஓடும் ஆறுகளில் தான் முதன்முதலில் துவங்கப்பட்டது என்றாலும் தற்போது தென் இந்தியாவிலும் அது பிரபலமடைந்து வருகிறது. உறைய வைக்கும் இந்த சாகசம் செய்ய சிறந்த இடங்கள் எவை என்பதை தெரிந்துகொள்வோம்.
ரிஷிகேஷ்:
புகைப்படம்: Cordavida
யாத்திரீகர்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களில் ஒன்றான ரிஷிகேஷ் சாகசப்படகு சவாரி செய்ய உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. சிவபுரியில் இருந்து லக்ஷ்மண சுஹ்லா வரையிலான 16கி.மீ தொலைவு உள்ள ஆற்றுப்பதை பல ஆபத்தான திருப்பங்களையும், சுழல் உருவாகும் இடங்களையும் கொண்டுள்ளது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கு சாகசப்படகு சவாரி செய்ய ஏற்ற காலநிலை நிலவுகிறது. மற்ற நேரங்களில் வெள்ளப்பெருக்கும் கடும் குளிரும் நிலவும் என்பதால் படகு சவாரி அந்நேரங்களில் இங்கு தடை செய்யப்படுகிறது.
சன்ச்கர்:
புகைப்படம்: Philip Larson
படூம் மற்றும் சிமோ பகுதிகளுக்கு இடையே சன்ச்கர் ஆற்றில் நடக்கும் சாகசப்படகு சவாரி அந்தப்பகுதியின் பேரழகை ரசிக்க அருமையான வாய்ப்பை நமக்கு நல்குகிறது. ஆற்றின் இருபுறங்களிலும் 100 அடிக்குமேலான மலைகளை கடந்து செல்கையில் வேறெங்கோ மாய உலகம் ஒன்றினுள் செல்லும் பரவசம் நம்மை தொற்றிக்கொள்ளும். லடாக்கில் நாம் அதிகம் அறிந்திராத சில அழகான பிரதேசங்களை தாண்டி செல்லும் இந்த சாகசப்பயணம் சன்ச்கர் ஆறு இந்து மகா சமுத்திரத்தில் கலக்குமிடத்தில் நிறைவடைகிறது. சாகசங்கலளோடு இயற்கையின் அழகையும் ரசிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தவறாமல் சன்ச்கர் வரவேண்டும்.
சிக்கிம் & டார்ஜிலிங் :
புகைப்படம்: Spurkait
சிக்கிம் & டார்ஜிலிங்கின் முக்கிய நதியான 'டீஸ்டா' அனுபவம் வாய்ந்த சாகசப்படகோட்டிகள் விரும்பும் இடமாக உள்ளது. டீஸ்டா நதியின் கிளை நதியான ரங்கித் மிகவும் சவால் நிறைந்த பாதையாக கருதப்படுகிறது. துடுப்பு படகு சவாரி செய்யவும் இது ஏற்ற இடமாக உள்ளது. கடும் சவால்களை எதிர்கொண்டு சாகசம் செய்ய நினைப்பவர்களின் சொர்க்கபுரி ஆகும் இந்த இடம்.
கூர்க் :
புகைப்படம்: Philip Larson
கூர்கில் பாயும் பரபோல் நதி தென் இந்தியாவில் சாகசப்படகு சவாரி செய்ய ஏற்ற மிகச்சில இடங்களில் ஒன்று. சவால் நிறைந்த நீரோடைகள் இந்தப்பாதையில் உண்டு என்றபோதும் முன் அனுபவம் இல்லாதவர்களும் இந்த சாகசப்பயணத்தில் ஈடுபட ஏற்ற இடமாகவே இது உள்ளது. சமீப காலங்களில் கூர்கிற்கு தேனிலவு வருபவர்களும் தங்கள் தேன்னிலவை கொண்டாட இப்படிப்பட்ட சாகச விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
கோலத்:
தெற்கு ஹிமாலயப்பகுதியில் அமைந்திருக்கும் குண்டாலிகா ஆற்றில் 15கி.மீ தூரம் ஹிமாலய மலைகளின் காணக்கிடைக்காத அறிய காட்சிகளை பார்த்தபடி சாகசப்பயணம் மேற்கொள்ளலாம். நதியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் பருவமழைக்கு சற்று பிந்தைய காலங்களில் இங்கு செல்ல சிறந்த நேரமாகும்.