அருமையான DSLR கேமராவை கையில் வைத்துக்கொண்டு எங்கே புகைப்படம் எடுக்க போகலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? வாருங்கள் பன்முகதன்மையுடைய இயற்க்கை எழில் கொஞ்சும் இடங்களையும், தொழில்நுட்பத்தில் அதிக வளர்ச்சியடைந்த நவநாகரிகமிக்க நகரங்களையும் கொண்ட கர்நாடக மாநிலத்தில் நம் புகைப்பட தாகத்தை தீர்க்கும் இடங்களைப்பற்றி பார்க்கலாம்.
பன்னேர்கட்டா தேசிய பூங்கா
புகைப்படம்: Cheese Hogs
பெங்களூருவில் இருந்து 22கி.மீ தெற்க்கே அனெக்கல் மலைத்தொடரில் அமைந்திருக்கிறது. 25,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த தேசிய பூங்காவில் வனவிலங்கு காட்சியகம், பட்டாம்பூச்சி பூங்கா போன்றவை அமைந்திருக்கின்றன. வைல்டு லைப் புகைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த இடமாக இந்த பன்னேர்கட்டா தேசிய பூங்கா திகழ்கிறது. வெள்ளை புலி, குரைக்கும் மான், தேவாங்கு, எறும்பு தின்னி போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கு உள்ளன. கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்கு வனஉலா ( safari) ஏற்பாடு செய்யப்படுகிறது.
மடிகேரி, கூர்க்
புகைப்படம்: Praveen Tirumandyam
கர்நாடகாவின் கூர்க் மாநிலத்தின் தலைநகராக விளங்கும் மடிகேரி நகரம் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது. இயற்க்கை இங்கே அள்ளித்தரும் அற்புதங்களுக்கு அளவே இல்லை. மடிகேரியில் இருந்து 40கி.மீ தொலைவில் பசுமை போர்த்தியபடி வானத்தை முத்தமிட்டு நிற்கும் தடியண்டமோல் மலைகள், உங்கள் புகைப்பட குவியம் தவற விடக்கூடாத சொர்க்கம். நீல மலைகளுக்கு பின்னிருந்து சூரியன் உதயமாகும் காட்சி காண்போரை மெய்மறக்கச்செய்யும். இதை தவிர மடிகேரியை சுற்றி பிராமகிரி, மண்டல்பட்டி, அப்பே அருவி போன்ற ஏராளமான இடங்கள் உள்ளன. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் நீங்கள் இந்த இடத்தை கண்டதுமே காதலில் விழுவீர்கள் என்பது நிச்சயம்.
மகாத்மா காந்தி ரோடு (M.G Road)
புகைப்படம்: Naresh Rao
கர்நாடகத்தின் தலைநகரமான பெங்களுருவின் மிக முக்கிய சாலை இந்த M.G ரோடு. வனவிலங்குகளையும், இயற்க்கை அழகையும் விடுத்து நகரத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையையும், பெங்களுருவின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் புகைப்படங்களாக பதிவு செய்ய விரும்புகிறவர்களுக்கு ஏற்ற இடம் இது. எப்பொதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலை பெங்களுருவின் முக்கிய வியாபார ஸ்தலமாகவும் இருக்கிறது. இங்கு வந்தால் பலதரப்பட்ட பொருளாதார பின்னணி பல்வேறு கொண்ட மாநிலங்களில் இருந்து வந்து வாழும் மனிதர்களையும், நகர வாழ்க்கையின் நிதர்சனமான உண்மைகளையும் பார்க்கலாம்.
பாதாமி, பாகல்கோட் மாவட்டம்
புகைப்படம்: Venkatram Harish Belvadi
பெங்களுருவில் இருந்து 500கி.மீ தொலைவில் பாகல்கோட் மாவட்டத்தில் இருக்கும் இடம் தான் பாதாமி குகை கோயில்கள். ஆறாம்-எழாம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட பாதாமி சலுக்கியர்களால் குடையப்பட்ட இந்த குகை கோயில்கள் இந்திய குகை கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மொத்தம் நான்கு குகை கோயில்களை கொண்டிருக்கும் இந்த இடம் வரலாற்று தொன்மைவாய்ந்த இடங்களை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவர்களுக்கு ஏற்ற இடம். பெங்களுருவில் இருந்து ரயில் மூலம் பாகல்கோட் வந்து அங்கிருந்து கார் மூலம் பாதாமியை அடையலாம்.