படகுப் பயணம் என்பது எப்போதுமே நம் உள்ளத்தை லேசாக்கி இனிமையான அனுபத்தை தரக்கூடியது. இதன் காரணமாகவே அந்தக் காலங்களில் ராஜாவும், ராணியும் அரண்மனை வளாகத்திலேயே ஒரு ஏரியை வெட்டுவித்து படகுப்பயணம் செய்து மகிழ்ந்தனர்.
அந்தப் படகுப்பயணம் செய்யும் அனுபவமே ஒரு கவிதை என்று சொல்லலாம். அதாவது சலசலத்து ஓடும் நீரலைகளின் சங்கீதமும், ஆங்காங்கு கீரிச்சிடும் பறவைகளின் மழலை ஒலிகளும், எங்கும் வியாபித்து இருக்கும் நீரின் ஏகாந்தமும் நம் மனதை கொள்ளைகொண்டு விடும்.
அதுவும் நம் மனதுக்கு பிடித்தவர்களுடன் செல்லும்போது இன்னும் கூடுதல் இன்பத்தை நம்மால் நுகர முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டின் சில இடங்களில் படகுப்பயணம் செய்வது பேரானந்தத்தை தரக்கூடியது. அதுபோன்ற குளிர்ச்சியான அனுபத்தை தரக்கூடிய அற்புதமான சில பகுதிகளை காண்போம்.
ஊட்டி ஏரி, ஊட்டி
ஊட்டிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஊட்டி ஏரி. பல்வேறு புவியியல் காரணங்களாலும் பஸ் ஸ்டாண்ட், ரேஸ் கோர்ஸ் மற்றும் ஏரிப்பூங்கா போன்றவற்றாலும் ஏரி அதன் உண்மையான அளவில் இருந்து இன்று சுருங்கி விட்டது. இந்த ஏரியில் படகுப்பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இதன் மூலம் ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் போது மாநில அரசு இரண்டு நாட்கள் நீடிக்கும் படகு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறது.
படம் : Navaneeth Krishnan S
பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்
கடலூரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன. உலகிலேயே 2-வது மிகப்பெரியதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் கருதப்படுகின்றன. இது சிதம்பரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குறுக்கும் நெடுக்குமாக இங்கு செல்லும் எண்ணற்ற சிறு சிறு தீவுக்கூட்டங்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் வெளிநாட்டு பறவைகளின் தங்குமிடமாக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டே காடுகளுக்குள் படகுப்பயணம் படகுப்பயணம் செய்வது புதுவித அனுபவமாக இருக்கும்.
படம் : Planemad
கோடை ஏரி, கொடைக்கானல்
1863-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியான கோடை ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் காட்சியளிக்கிறது. இந்த ஏரி கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வேரியை ஒட்டியே படகு துறைகள் காணப்படுகின்றன. எனவே இங்கு துடுப்பு படகுகள் அல்லது மிதி படகுகள் என்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு உல்லாசமாக படகுச் சவாரியில் ஈடுபடலாம்.
படம் : Aruna
படகு குழாம், குற்றாலம்
குற்றாலம் படகு குழாம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி அருகே மேலவெண்ணமாடைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. குளுமையான சூழலில் உங்கள் குடும்பத்தோடு, நண்பர்களோடு அல்லது காதலரோடு கைகோர்த்தவாறு இங்கு படகுப்பயணம் செய்வது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
படம் : PREVRAVANTH
நிலாவூர் ஏரி, ஏலகிரி
நிலாவூர் ஏரி ஏலகிரியில் படகுப் பயண விரும்பிகள் அடிக்கடி வந்து செல்லும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு இடமாகும். இது நிலாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய ஏரி கிட்டத்தட்ட கரைகளில் தோட்டங்களுடன் கூடிய குளம் போன்றது. ஆனால் அந்தப் படகுப்பயணம் செய்யும் ஏகாந்த அனுபவத்தை நீங்கள் ஏலகிரி செல்லும்போது அனுபவிக்கத் தவறாதீர்கள்.
படம் : cprogrammer