வெப்ப சார்ந்த பகுதியான தமிழகத்தில், தென்காசி, கோவை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள்தான் ஒரளவிற்கு பசுமையும், இதமான வானிலையும் கொண்டவை. ஆகஸ்ட் நெருங்குகிறது, குற்றாலத்தில் பருவ காலம் களை கட்டிவிடும். குற்றாலம், அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு வரை எல்லோருக்கும் விருப்பமான சுற்றுலா தலம். மற்ற சுற்றுலா தலங்களைப் போல அதிகம் பணம் செலவழிக்கத் தேவையில்லை. இதனால் சீசன் சமயத்தில் அத்தனை அருவிகளிலும் கட்டுகடங்காத கூட்டம் இருக்கும். இதில் என்ன வேடிக்கையென்றால், குற்றாலத்தை சுற்றியிருக்கும் மக்கள் பலர் அருவிகளுக்குச் செல்வதில் அத்தனை ஆர்வம் காட்ட மாட்டார்கள். பக்கத்தில் இருக்கும்போது அருமை தெரியாது தானே ?
ஆனால், இந்தப் பதிவு குற்றாலத்தைப் பற்றியதல்ல அதைச் சுற்றியிருக்கும் அருமையான கோவில்களைப் பற்றியது.
ஆஞ்சநேயர் கோவில், கடையநல்லூர்
Photo Courtesy : Karthikeyan Ramchel
வயல்வெளிகளுக்கு நடுவில் ஒரு கோவிலை கற்பனை செய்ய முடியுமா ? போகிற வழியெங்கும் மிதமான குளிர் காற்று, சுற்றியும் பசுமையான மரங்கள் என இயற்கைச் சூழலில் இருக்கும் அழகான கோவில்தான் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவில். கோவிலுக்குள் அழகான தெப்பக்குளமும் இருக்கிறது. கிருஷ்ணாபுரம், கடையநல்லுரை ஒட்டி இருக்கும் ஒரு சிறு பகுதி.
அனுமன் ஜெயந்தி, ராம நவமி பண்டிகைகளின் போது சிறப்பு பூகைகள் நடைபெறுகின்றன.
பக்தர்கள் வந்து தியானம் செய்வதற்காக ஒரு தியான மண்டபமும் இருக்கிறது
குற்றாலத்திலிருந்து கடையநல்லூருக்கு 21 கி.மீ. கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் இருக்கிறது கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவில்.
கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்தும், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் 'ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
பூஜை நேரங்கள் : காலை 8 முதல் 12 வரை; மாலை 3.30 முதல் 7.30 வரை
சனிக்கிழமை : காலை 7 முதல் 9 மணி வரை.
திருமலைக் கோவில், பண்பொழி
Photo Courtesy : Yokishivam
குற்றாலத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் இருக்கிறது பண்பொழி. இதன் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைமீது இருக்கிறது திருமலைக் கோவில்.
இந்த ஆலயத்தில் இருக்கும் இறைவன் முருகன்; 'திருமலை முருகன்' என்றும் 'திருமலை முத்துகுமாரசுவாமி' என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் 'திருமலை அம்மனுக்கான' ஒரு சன்னதியும் தெப்பக்குளமும் அமைந்துள்ளது.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு ஒரு முறையேனும் வந்து வழிப்பட்டால் அவர்கள் வேண்டியது நடைபெறும் என்பது ஐதீகம்.
Photo Courtesy : Yokishivam
இந்த கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக இருக்கும். புகைப்பட ப்ரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடம்.
தென்காசி காசிவிஸ்வநாத கோவில்
Photo Courtesy : Pandiaeee
கோபுர வாசற்குள் நுழையும்போது ஆளைத் தள்ளும் சுகமான காற்று, கோபுரங்கள், பெரிய பிரகாரம், எனப் பல சிறப்புகள் இந்த 500 வருட கோவிலுக்கு. கி.பி. 1445-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, கி.பி. 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன. கோவிலைச் சுற்றியிருக்கும் அல்வாக்கடைகளில் - வாழை இலையில் சுடச்சுட அல்வாத் துண்டை விரலால் கிள்ளி சாப்பிடுவது ஒரு அலாதி இன்பம், சீசன் சமயங்களில் கூட்டம் அலைமோதும். இதுதவிர நிறைய துணிகடைகளும் இருக்கின்றன.