ஆதி தமிழர்கள் கோயில்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் அமைக்காமல் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு வகையில் உதவும்படியாகவே அமைத்துள்ளனர்.
கோவில்களில் கல்வி, மருத்துவம் முதலியன நடைபெற்றதாக நம் இலக்கியங்கள் வழி நாம் அறிய முடியும். உடல் நிலை சரியில்லை என்றால் கோவிலுக்கு செல்வது என்பது அங்கு கிடைக்கும் துளசி உட்பட பல மூலிகைகளை உண்டு நோய்களை விரட்ட வழிவகுத்தது. அக்காலத்தில் விஷக்கடிகளுக்கு பயந்துதான் மக்கள் வாழ்ந்து வந்தனர் தற்காலத்தில் சொல்லப்படும் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு போன்றவை அந்த காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
உடல் நலத்தைப் பேணும் வகையில் மக்களும் தங்களது வாழ்வியலை அமைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் காடுகளிலும் மேடுகளிலும் வேலை பார்த்துவிட்டு வரும் மக்கள் தங்களை பாம்பு முதலிய விட பூச்சிக்களிடமிருந்து பாதுகாக்கவேண்டியிருந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் பாம்பு கடிக்கு மருந்து கிடைக்கின்றதாம். அந்த மருந்து என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாம்புக்காக எறும்புகள் கட்டி இருக்கும் புற்றுமண் தான் அந்த மருந்து. முள்ளை முள்ளால் எடு என்பது போல பாம்புகள் அதிகம் வாழும் இடங்களிலே இதுபோன்ற விடமுறிவு மருந்துகளும் கிடைக்கும்.
அய்யன் சின்னையன்
கி.பி 1777ஆம் ஆண்டு செங்காளியப்பன் என்பவருக்கு மகனாக பிறந்தவர் சின்னையன் என்ற இயற்பெயர் கொண்ட வாழைத் தோட்டத்து அய்யன்.
பன்னிரண்டு வயது வரை கல்வி பயின்ற அவர் கல்வி மேல் பெரிய நாட்டமில்லாமல், இயற்கையை அரவணைத்து மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டிருக்கிறார்.
சிறு வயதில் ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவராக இருந்த சின்னையன் மாடு மேய்க்கும் போது தானாகவே கோவில் ஒன்றை கட்டி வழிபாடு மேற்கொண்டு வந்திருக்கிறார்.
ஒருநாள் இவர் மாடுமேய்க்கும் வழி வந்த பெரியவர் சின்னையனுக்கு சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்துள்ளார். இதிலிருந்து ஞானம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
PC: Official
மீண்டும் வந்த கடவுள்
அதே பெரியவர் பின்னொருநாள் சின்னையனின் அறையில் தோன்றி சிவன் பார்வதி தேவியாரோடு இருக்கும் காட்சியை காட்டி மறைந்துவிட்டாராம்.
சிவ தரிசனம் பெற்ற பிறகு நோய்களை குணமாக்கும் வல்லமையையும், பாம்பு மற்றும் தேள் ஆகியவற்றின் விஷத்தை விபூதி மற்றும் பஞ்சாட்சிர மந்திரங்களை கொண்டு குணப்படுத்தும் அதிசக்தியும் பெற்றதாக கோவில் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
PC: Official
கனவில் வந்தார் சின்னையன்
72ஆவது வயதில் மாடு முட்டியாதால் சின்னையன் இறைவனடி சேர்ந்ததாக கருத்துகள் நிலவிவருகிறது.
பின் தனது பண்ணையில் வேலை செய்து வரும் தொழிலாளி ஒருவரின் கனவில் தோன்றி தான் இதுநாள் வரை பூஜித்து வந்த லிங்கம் மற்றும் நந்தி ஆகியவவை இருக்கும் இடத்தை சொல்லியிருக்கிறார். அங்கு கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையையும் விட்டிருக்கிறார் அவர்.
பின்னாளில் ஊர்மக்கள் ஒன்று கூடி அந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த லிங்கம் மற்றும் நந்தி இருந்த இடங்களைச் சுற்றி தான் இன்று நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
PC: Official
ஞான மரம்
புத்தர் எப்படி ஞானம் பெற்றதாக கூறப்படுகிறதோ அதேபோன்று சின்னையன் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள மரத்தினடியில் அமர்ந்திருக்கும்போது ஞானம் பெற்றுள்ளார்.
PC: Official
அருள் தரும் தெய்வங்கள்
கோயிலின் மூலவராக வாழைத் தோட்டத்து அய்யன் கிளுவை மரத்தின் கீழ் சிறிய சிற்பமாக அருள்பாலிக்கிறார். அதோடு இக்கோயிலில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் முருகன் ஆகியோரது சந்நிதிகளும் இங்கே இருக்கின்றன.
PC: Official
எங்குள்ளது தெரியுமா?
கோவை மாவட்டத்தில் திருப்பூர் எல்லையை ஒட்டி நொய்யல் தழுவியோடும் சோமனூர் என்ற ஊரில் அமைந்திருகிறது வாழைத்தோட்டத்து ஐய்யன் கோயில். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும், வாழைத் தோட்டத்து அய்யன் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் இன்னும் தெரிந்து கொள்ள கோவிலுக்கு நேரடியாக வருகை தாருங்களேன்.
PC: Official
எப்படி செல்லவேண்டும்?
கோவை - அவினாசி சாலையில் உள்ள கருமத்தம்பட்டியில் இருந்து 8கி.மீ தொலைவில் சோமனூருக்கு அருகே அய்யம்பாளையம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீங்கள் கோவையில் இருந்தாலோ அல்லது அடுத்தமுறை கோவைக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தாலோ நிச்சயம் வாழைத் தோட்டத்து அய்யன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.
PC: Official