விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்தில் அய்ல அய்ல ஐ என்றொரு பாடல் வரும். அதில் சிறப்பான சுற்றுலாத் தளங்களை வைத்து விளம்பரப் படப்பிடிப்பு நடத்தும்படியான காட்சிகளை படமாக்கியிருப்பார்கள்.
முதலில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இடத்திலிருந்து தேயிலை விளம்பரத்தையும், பின் ஜில்லெட்டுக்கான ரேசர் விளம்பரத்தை ராஜஸ்தானின் கோட்டைகளிலும் காட்டியிருப்பார்கள்.
அந்த பாடலில் இருக்கும் காட்சியில் ஒரு நகரமே நீல நிறமாக காட்டப்படும். அது பெரும்பாலும் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட நகரம் என்றே பலர் நம்பிவருகின்றனர், ஆனால் அது உண்மையில் நீல நிறமுடைய நகரம் ஆகும்.
அந்த நகரத்தில் இயல்பாகவே அனைவரும் நீல நிறத்தில் சுவர்களுக்கு வண்ணம் பூசி நகரத்தையே நீல வண்ணமாக மாற்றியுள்ளனர். அந்த நகரத்தில் அதுமட்டுமில்லாது பல அரிய பொக்கிஷங்களும், கண்கவரும் சுற்றுலாத் தளங்களும் காணப்படுகின்றன. வாருங்கள் காணலாம்.
ஜோத்பூர்
ஜோத்பூர் நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய பாலைவன நகரமாகும். இது இரண்டு விசேஷப்பெயர்களால் பெருமைப்படுத்தப்படுகிறது. ஒன்று ‘சூரிய நகரம்' மற்றொன்று ‘நீல நகரம்' ஆகும்.
Francisco Anzola
சூழலியல்
தெளிவான சூரியவெளிச்சத்துடன் கூடிய சூழ்நிலையைக் கொண்டிருப்பதால் சூரிய நகரம் என்றும், மேஹ்ரான்கர் கோட்டைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நீல வண்ணம் பூசப்பட்டு காட்சியளிப்பதால் நீல நகரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.
Acred99
தார்பாலைவன வாசல்
இது தார் பாலைவனத்தில் எல்லையில் அமைந்திருப்பதால் ‘தார் பாலைவன வாசல்' என்றும் அறியப்படுகிறது. ரத்தோர் வம்சத்தின் ராவ் ஜோதா என்பவரால் இந்த நகரம் 1459ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
முற்காலத்தில் மார்வார் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று அதன் ஸ்தாபகரான ராஜபுத்திர தளபதி ராவ் ஜோதாவின் நினைவாக ஜோத்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
michael clarke s
நாவிற்கு சுவை
ஜோத்பூருக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் திகட்ட வைக்கும் சுவையுடைய மக்கானியா லஸ்ஸி போன்ற பாரம்பரிய உணவு வகைகளை ருசிக்கலாம். இது தயிர் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களில் தயாரிக்கப்படுவதாகும்.
மேலும், மாவா கச்சோரி, பியாஸ் கி கச்சோரி மற்றும் மிர்ச்சி படா போன்ற பல பண்டங்கள் உணவுப்பிரியர்களை தம் வாசனை மற்றும் ருசியால் கவர்வது நிச்சயம்.
Acred99
கைவினைகளின் களஞ்சியம்
பாரம்பரிய உணவின் ருசியைத் தவிர ஜோத்பூரில் சுற்றுலாப்பயணிகளை கவரும் அம்சங்களாக பாரம்பரிய கைவினைப்பொருட்கள், பூவேலைப்பாடுகள் கொண்ட செருப்புகள் மற்றும் பரிசுப்பொருட்கள் போன்றவை இங்குள்ள கடைத்தெருக்களில் கிடைக்கின்றன.
Jpatokal
ஸ்பைசி ஸ்டீரட்ஸ்
சோஜாடி கேட், நய் சரக் மற்றும் கிளாக் டவர் போன்ற வண்ணமயமான கடைத்தெருக்கள் ஜோத்பூரில் உள்ளன. மேலும், சிவப்பு மிளகாய்களுக்கான மிகப்பெரிய மார்க்கெட் என்ற பெருமையையும் ஜோத்பூர் பெற்றுள்ளது.
michael clarke stuff
கேளிக்கைகள் கொண்டாட்டங்கள்
ஜோத்பூர் நகரம் வருடந்தோறும் நடத்தப்படும் பலவகை விழாக்களுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 14ம் தேதி இந்நகரத்திலுள்ள போலோ மைதானத்தில் சர்வதேச ‘காற்றாடித்திருவிழா' நடத்தப்படுகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின்போது காற்றாடி விடும் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து ரசிகர்கள் கூடுகின்றனர். அச்சமயம் வானவெளியெங்கும் வண்ணமயமான காற்றாடிகள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பறக்கவிடப்படுகின்றன.
Gaurav Joshi
மார்வார் திருவிழா
அஷ்வின் பருவம் என்றழைக்கப்படும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களின்போது மார்வார் திருவிழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாள் திருவிழாவானது ராஜஸ்தான் மாநில பழங்குடி இசை மற்றும் நடனம் போன்றவற்றை கண்டு ரசிக்கும் வாய்ப்பை பயணிகளுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Christopher Michel
சந்தை
இதுதவிர ஜோத்பூரின் நாகவுர் சந்தை ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது பெரிய கால்நடைச் சந்தைத்திருவிழாவாக புகழ் பெற்றுள்ளது.
இந்த பிரசித்தமான கால்நடைச்சந்தை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. சுமார் 70,000 காளைகள், ஒட்டகங்கள் மற்றும் குதிரைகள் இந்த சந்தையில் வியாபாரம் செய்யப்படுகின்றன. சந்தைக்கென்றே இந்த கால்நடைகள் அலங்கரிக்கப்பட்டிருப்பது மற்றொரு விசேஷமாகும்.
ஒட்டகப் பந்தயம், காளைப்பந்தயம், வித்தைக்காட்சிகள், பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கதைசொல்லும் நிகழ்ச்சிகள் போன்றவை இந்த சந்தையில் பார்வையாளர்களுக்காக நிகழ்த்தப்படுகின்றன.
Tom Maisey
கட்டிடக்கலையும் காவியமும்
பாரம்பரிய உணவு வகைகள், மார்க்கெட் மற்றும் திருவிழாக்களுக்கு அடுத்தபடியாக வருவது ஜோத்பூர் நகரத்தின் அடையாள அம்சங்களான பழைய மன்னராட்சிக் கோட்டைகள், அழகிய அரண்மனைகள், தோட்டப்பூங்காக்கள், கோயில்கள் மற்றும் பாரம்பரிய விடுதிகளாகும்.
Arjunransigoan
உமைத் பவன்
இந்த முக்கியமான சுற்றுலா அம்சங்களில் உமைத் பவன் அரண்மனை குறிப்பிடத்தக்க வரலாற்றுச்சின்னமாகும். இந்த அழகிய அரண்மனை இந்தோ-காலனிய கலை நுணுக்கத்திற்கு உதாரணமாக திகழ்கிறது.
அழகாக வெட்டப்பட்ட மஞ்சள்கற்கள் இக்கட்டிடத்திற்கு அழகைச் சேர்க்கின்றன. உமைத் பவன் அரண்மனையின் ஒரு அங்கமாக அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் மாதிரி ஏரோப்பிளேன்கள், ஆயுதங்கள், பீங்கான் பொருட்கள்,கரண்டி வகைகள், பழமையான கடிகாரங்கள், பாப் கைக்கடிகாரங்கள், அபூர்வ கற்கள், புகைப்படங்கள் மற்றும் வேட்டைச்சின்னங்கள் போன்றவற்றை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
en:User:Ss2107
மெஹ்ரான்கர் கோட்டை
மெஹ்ரான்கர் கோட்டை ஜோத்பூரிலுள்ள மிகப் பிரசித்தமான கோட்டையாகும். இந்த கோட்டை வளாகத்தில் மோதி மஹால், ப்பூல் மஹால், ஷீஷா மஹால் மற்றும் ஜான்கி மஹால் போன்ற அரண்மனைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏழு வாயில்களைக் கொண்டுள்ளது. பலவிதமான அழகிய பல்லக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு அருங்காட்சியகமும் இந்த கோட்டை வளாகத்தில் உள்ளது.
A Vahanvati
எப்படி செல்லலாம்?
ஜோத்பூர் நகரம் பிரத்யேக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளதால் முக்கிய இந்திய நகரங்களுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் அருகிலுள்ள சர்வதேச விமானத்தளமாகும். மேலும், சுற்றுலாப்பயணிகள் ஜெய்பூர், டெல்லி, ஜெய்சல்மேர், பிக்கானேர், ஆக்ரா, அஹமதாபாத், அஜ்மேர் மற்றும் உதய்பூர் நகரங்களிலிருந்து பேருந்து மூலம் பயணம் செய்ய ஏற்றவாறு பேருந்துச்சேவைகள் உள்ளன.
A Vahanvati
சுற்றுலா செல்ல ஏற்ற காலம்
ஜோத்பூர் பிரதேசம் வெப்பமான மற்றும் வறண்ட பருவநிலையை வருடமுழுதும் கொண்டுள்ளது. கோடை காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் போன்ற முக்கிய பருவங்களே இங்கு முக்கிய பருவங்களாகும். அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை உள்ள காலம் ஜோத்பூருக்கு விஜயம் செய்து சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற காலமாகும்.
Clément Bardot