சிவபெருமானின் வாகனமாக கருதப்படும் நந்தி, ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைக்கப்பட்டிருக்கும். நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள்.
மேலும் நந்தி குறித்து பல சுவையான கதைகள் சொல்லப்படுகின்றன. அதாவது நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் நந்தியிடம் அனுமதி பெற்றுத்தான் சிவனை தரிசிக்க முடியுமாம்.
அதுபோன்று ஒருமுறை சிவனின் வாயிற்காப்போனாக பணிசெய்து வந்த நந்தி தேவர், சிவனும் பார்வதியும் காமத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த உரையாடலைக் கேட்டு, காமம் குறித்து 1000 அத்தியாயங்கள் அடங்கிய காம சூத்திரத்தை எழுதியதாக நம்பப்படுகிறது.
சரி! சரி! விஷயத்துக்கு வருவோம். இப்படியாக பல பெருமைகளை உடைய நந்திதேவருக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் அமைந்திருக்கும் பிரபலமான நந்தி சிலைகளைப் பற்றி காண்போம்.
பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.
படம் : Hari Shankar05
வீரபத்ரர் கோயில், லேபாக்ஷி
ஆந்திரப்பிரதேச மாநிலம் லேபாக்ஷியில் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நந்தி சிலை அமைந்திருக்கிறது. இந்த நந்திதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தி சிலையாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தியாகவும் இது அறியப்படுகிறது. இச்சிலை 15 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்டது.
படம் : Vinay332211
சாமுண்டி ஹில்ஸ், மைசூர்
மைசூரில் உள்ள சாமுண்டி மலைகளில் 1664-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய நந்தி நிர்மாணிக்கப்பட்டது. இது 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்டது.
படம் : Sanjay Acharya
காளைக் கோயில், பெங்களூர்
பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் அமைந்துள்ள என். ஆர் காலனியில் அமைந்துள்ள காளைக் கோயிலில் இந்த நந்தி சிலை அமைந்துள்ளது. இந்தக் கோயில் இருக்கும் பகுதியில் ஆதி காலத்தில் விளைந்த கடலைப்பயிரை தொடர்ந்து மேய்ந்தபடியே இருந்த ஒரு காளையை சாந்தப்படுத்த வேண்டி இந்த கோயில் கட்டப்பட்ட தாக கூறப்படுகிறது. இச்சிலை 15 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டது.
படம் : Visdaviva
ஹோய்சாலேஸ்வரர் கோவில், ஹலேபீடு
ஹோய்சாலேஸ்வரர் கோவில் 12-ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனது. இந்தக் கோயிலில் 14 அடி உயரம் கொண்ட இரண்டு ஒற்றைக்கல் நந்தி சிலைகள் காணப்படுகின்றன.
படம் : Ramanathan.k.i
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சிவபெருமானுக்கு முன்பு இரண்டு நந்திகள் இருக்கின்றன. இவற்றில் பெரிய நந்தி மண்டபத்துக்கு வெளியேயும், சிறியது மண்டபத்தின் துவக்கத்திலும் அமையப்பெற்றுள்ளன.
படம் : Balajijagadesh
அருணாச்சலேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று விசேஷ பூஜை நடைபெறும். அப்போது அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து நந்திக்கு பூஜை செய்யப்படும்.
படம் : Thamiziniyan
நெல்லிக்காய் பசவண்ணா கோயில், நந்தி ஹில்ஸ்
பெங்களூரிலிருந்து 61 கி.மீ தொலைவில் உள்ள நந்தி ஹில்ஸின் உச்சியில் அமைந்திருக்கும் இந்த நந்தியின் காரணமாகத்தான் நந்தி ஹில்ஸ் பகுதிக்கும், அது அமைந்துள்ள நந்தி கிராமத்துக்கும் அப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நெல்லிக்காய் பசவண்ணா கோயில் 1300 ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படுகிறது.
படம் : Tinucherian
ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலின் நந்தி.
படம் : Thamizhpparithi Maari
சென்னக்கேசவா கோயில், பேலூர்
கர்நாடக மாநிலம் பேலூரில் அமைந்துள்ள சென்னக்கேசவா கோயிலின் நந்தி.
படம் : Gagan.G.C
கபாலீசுவரர் கோயில், சென்னை
மைலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலுள்ள கவசம் அணியப்பட்ட நந்தி.
படம் : mountainamoeba