சாகசங்கள் செய்ய உங்களுக்கு பிடிக்கும் என்றால், நண்பர்களோடு ஒரு அணியாக ஒரு சவாலை எதிர்கொள்ள முடிந்தால், ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி என சொல்பவராக இருந்தால், எல்லாத்தையும் விட மனதில் கொஞ்சம் தில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஒருமுறையாவது செல்ல வேண்டிய இடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் சன்ஸ்கர் தான். வாருங்கள் இங்கே ஏன் செல்ல வேண்டும் என்பதற்கான ஐந்து முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீறிப்பாயும் ஆற்றை வெற்றிகொள்ள முடியும்:
Photo: Philip Larson
ஆம், மிதவை படகில் நண்பர்களுடன் ஒரு அணியாக ஒன்றிணைந்து அதி வேகத்தில் பாயம் சன்ஸ்கர் ஆற்றில் கூர்மையான பாறைகளையும், ஆபத்தான வளைவுகளையும் கடும் முயற்சியில் கடப்பது மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஆபத்து நிறைந்த சாகசம் என்றாலும் முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளதால் அசம்பாவிதம் ஏதும் நிகழ வாய்ப்பில்லை. இந்தியாவில் இப்பொது பிரபலமாகி வரும் இந்த 'ரப்டிங்' விளையாட்டுக்கு மிகச்சிறந்த இடம் இந்த சன்ஸ்கர்.
காரகோரம் சன்ஸ்கர் இடையே சைக்கிளிங்:
Photo: sandeepachetan.com
ஹிமாலய மலைகளின் மேலே காரகோரம் மற்றும் சன்ஸ்கர் இடையே கடுமையான மலைப்பாதையில் ஆபத்தான மலைமுகடுகளில் சைக்கிளிங் செய்யலாம். பனி படர்ந்த மலைகளையும், பசுமைநிறைந்த பள்ளத்தாக்குகளையும், அதிர்ஷ்டம் இருந்தால் ஹிமாலய மலைகளில் வாழும் வனவிலங்குகளையும் கண்டு ரசிக்க முடியும். கடுமையான மலைப்பாதை என்பதால் உடல் பிட்டாக இருப்பவரால் மட்டுமே இதை முயற்சிக்கவும்.
சாதரில் உறைந்த ஆற்றின் மேல் நடக்க முடியும்:
Photo: vijay_v82
இந்தியாவில் உள்ள சாகச விளையாட்டுகளில் மிக சவால் நிறைந்ததாகவும், ஆபத்தானதாகவும் சொல்லப்படுவது சன்ஸ்கரில் உள்ள சாதர் என்னும் ஆற்றை பனி காலத்தில் அது உறைந்திருக்கும் போது அதன் மேல் நடந்து கடக்கும் ட்ரெக்கிங் தான். 70 முதல் 80 கி.மீ தொலைவு உள்ள இந்த ட்ரெக்கிங் பயணத்தை முடிக்க குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். குளிர்காலத்தில் தான் இந்த ஆற்றின் மேல் ட்ரெக்கிங் செல்ல முடியும் என்பதால் அப்போது குளிர் -5* முதல் -20* வரை இருக்கும்.
உறைய வைக்கும் இந்த குளிரில் இருந்து தப்பிக்க உகந்த குளிர் தாங்கும் ஆடைகளை கொண்டு செல்வது நல்லது. மனதையும் உடலையும் கடுமையாக சோதிக்கும் இந்த ட்ரெக்கிங் பயணம் அதிபயங்கரமான சாகம் செய்ய விரும்புபவர்களுக்கு மட்டுமே.
குகையின் முனையில் தியானம் செய்யலாம்:
Photo: sandeepachetan.com travel photography
ஒரு பெரிய மலையில் இருக்கும் குகையின் முனையில் கட்டப்பட்டிருக்கிறது புக்தல் என்னும் திபெத்திய புத்த மடாலயம். 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த புத்த மடாலயம் அமைந்திருக்கும் மழையின் கீழ் ஆறு ஒன்றும் ஓடுகிறது. அதனால் தொங்கும் பாலம் ஒன்றின் வழியாக ஆபத்து நிரந்த குகைப்பாதையை அடைந்து அங்கிருந்து இந்த மடாலயத்தை அடையலாம். இதனுள் நூலகம் மற்றும் தியான கூடம் ஆகியவை உள்ளன. இதற்க்கு பக்கத்தில் உள்ள பாத்தும் என்னும் நகரத்தில் இருந்து 2-3 நாள் நடந்தே இந்த மடாலயத்தை அடையமுடியும்.
நம்மில் பலரது 'Bucket List' இல் இருக்கும் லடாக் செல்கையில் அப்படியே சன்ஸ்கருக்கும் சென்று சாகசங்களை முயற்சி செய்து பாருங்கள். ஆபத்தான தருணங்களில் தான் நம்மை பற்றி நாமே அறியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.