அரேபியக்கடல், இந்தியப்பெருங்கடல், வங்காள விரிகுடா என முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியா குமரி அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரம். கேரளத்திற்கு பக்கத்தில் இருப்பதால் இங்கு தமிழ் கலாச்சாரமும், கேரளா கலாச்சாரமும் பின்னிப்பிணைந்தே இருக்கின்றன. நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் அளவிற்க்கு குமரியின் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள் என தனக்கென தனியொரு அடையாளத்தை கொண்டிருக்கும் இங்கு சுற்றுலா வருவதற்கான இடங்களும் நிறையவே உண்டு. 'கேப் கோமேரின்' என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட குமரி முனை இந்திய பெருங்கண்டத்தின் இறுதியாக விளங்குகிறது. வாருங்கள், குமரியில் கொட்டிக்கிடக்கும் அற்புதங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
குமரி சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்:
Photo: M.Mutta
கன்னியா குமரிக்கு வருபவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு விஷயம் குமரி முனையில் கதிரவன் தன் பொன்னிற கரங்களை பரப்பி துயில் எழுவதை காண்பதுதான். பறந்து விரிந்த நீலக்கடலின் பின்னிருந்து வர்ணஜாலம் நிகழ்த்தி சூரியன் உதயமாவதை பார்க்க அத்தனை அழகாக இருக்கும். அதே போலவே சூரியன் அஸ்தமனமாவதை பார்க்கவும் ஏராளமானவர்கள் கூடுகின்றனர். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் இந்த அற்புதமான காட்சிகளை உங்கள் குவியத்தில் கொள்ளையடித்திட மறக்காதீர்கள்.
திருவள்ளுவர் சிலை:
Photo: Premnath Thirumalaisamy
இன்று உலகத்தில் இருக்கும் மொழிகளிலேயே பழமையானதாய் அதே சமயம் எதற்கும் சளைக்காத இளமையுடன் தமிழ் இருக்கிறதென்றால் வள்ளுவன் இல்லாமல் அது நடந்திருக்காது. அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தமிழக அரசால் கட்டப்பட்டு 2000மவாது ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டது. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை குறிக்கும் விதமாக 133 அடி உயரத்தில் விவேகானந்தர் பாய்க்கு அருகில் உள்ள குட்டி தீவு ஒன்றில் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிடக்கலை அதிசயம் சென்று சொல்லும் அளவிற்கு சுனாமி, பூகம்பம் போன்ற பெரும் இயற்கை பேரழிவுகளையும் தாங்கி நிற்கும் ஷக்தி வாய்ந்தது இது. 2004ஆம் ஆண்டு சுனாமி இந்த சிலை உயரத்துக்கு எழும்பியதாம். குமரி முனையில் இருந்து இந்த சிலைக்கு செல்ல படகு வசதி உண்டு. குமரியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
விவேகானந்தர் பாறை:
Photo: Premnath Thirumalaisamy
இந்தியாவில் பிறந்த சிறந்த ஆன்மீக ஞானிகளுள் ஒருவராக உலகமக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவேகானந்தர் இந்தியா முழுக்க தன் ஆன்மீக தேடலை நிறைவு செய்ய தேசாந்திரியாய் அலைந்து கொண்டிருக்க ஒரு நாள் அவர் குமரி முனைக்கு வரவே அங்கு குமரி முனையில் இருந்து 500மீ தூரத்தில் உள்ள பாறைக்கு நீந்தியே சென்று மூன்று நாட்கள் இடைவிடாது தியானம் செய்து ஞானம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. அவர் தியானம் செய்த பாறையின் மேல் அவர் நினைவாக எழுப்பப்பட்டதே இந்த விவேகானந்தர் நினைவு மண்டபமாகும். ஹிந்து, கிருத்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களின் கட்டிடக்கலையை ஒன்றிணைத்து இது கட்டப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தியான மண்டபத்தில் சிறிது நேரம் தியானம் செய்து விட்டு செல்கின்றனர். வள்ளுவர் சிலையை சுற்றிப்பார்த்த பிறகு அப்படியே அதனருகில் இருக்கும் இங்கும் சென்று வரலாம்.
சுசீந்தரம் கோயில்:
Photo: ganuullu
ஹிந்து மதத்தின் மூன்று முக்கிய கடவுள்கள் ஆன சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரின் சந்நிதிகளும் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த தானுமலையான் கோயில் கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரத்தில் அமைந்திருக்கிறது. இந்தக்கோயிலின் கட்டிடக்கலை சிறப்பு என்னவென்றால் இங்கிருக்கும் இசைத்தூண்கள் ஆகும். ஒற்றைக்கல்லில் ஆனா இந்த இசைத்தூண்கள் தட்டப்படுகையில் சரியான விகிதத்தில் ஒலி எழுப்பக்கூடியவை ஆகும். இந்தக்கோயிலில் மார்கழி மாதமும், சித்திரை மாதமும் சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இங்கு நடக்கும் 9 நாள் தேர் திருவிழாவை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுட்ட்ருலாப்பயனிகள் வருகின்றனர்.
மாத்தூர் தொங்கும் பாலம்:
Photo: ganuullu
ஆசியாவிலேயே மிகப்பெரிய மேற்பாலம் குமி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா உங்களால். ஆம், மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தில் தான் 115 அடி உயரமும் ஒரு கிலோமீட்டர் நீளமும் கொண்ட மாத்தூர் பாலம் அமைந்திருக்கிறது. காமராஜர் ஆட்சி காலத்தில் சுற்றி இருக்கும் கிராமங்கள் பசன வசதி பெற வேண்டி கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது மாவட்ட நிர்வாகத்தால் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டு தினமும் குறைந்தது 100 சுற்றுலாப்பயணிகளையாவது ஈர்க்கிறது.
எப்படி அடையலாம்:
கன்னியா குமரிக்கு சென்னை, கோவை, திருவனந்தபுறம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து நேரடி ரயில் வசதி உண்டு.