எல்லாமே எளிதாக கிடைக்கும் வரை அதன் அருமை தெரியாது என்று சொல்வார்கள். இன்று ஐ.டி போன்ற துறைகளில் வேலை செய்வோர் ஆன்-சைட் வாய்ப்புக்கிடைத்து அமெரிக்க சென்றதுமே இந்தியா ஒரு கீழாந்தர நாடு என்பதுபோன்ற கமென்ட் அடிப்பது பரவலாகி வருகிறது.
தனது சுயலாபத்திற்காக நம்மை எப்படியெல்லாம் அடிப்படுத்தி வைத்திருந்தனர், அதிலிருந்து மீள எத்தனையோ என்னென்ன தியாகங்களை செய்திருக்கின்றனர் என்பது பற்றி தெரிந்துகொள்வதில் கூட ஆர்வமிருப்பதில்லை. ஏதுமறியா அப்பாவிகள் கொல்லப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் மிக மோசமான சம்பவமாக அமைந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
எப்போது நடைபெற்றது?:
1919ஆம் வருடம் பஞ்சாபி புத்தாண்டான பைசாகி திருவிழாவை கொண்டாட ஏப்ரல் 13ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமான அம்ரித்சர் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜாலியன்வாலாபாக் பூங்காவில் குழுமியிருந்தனர். அங்கு தான் இந்த படுகொலை நடந்தது.
யார் உத்தரவிட்டது?:
ஜலந்தர் கண்டோன்மென்ட்டில் இருந்து அம்ரித்சருக்கு உதவி ஆணையராக மாற்றலாகி வந்த பிரிகேடியர் ஜெனரல் R.E.H. டயர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டுப்போர் வெடிக்கலாம் என்ற சந்தேகத்தில் பஞ்சாபில் எந்தவொரு பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது என்று தடைவிதித்திருக்கிறார். அந்த உத்தரவு மக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்கப்படவில்லை. இந்த உத்தரவு பற்றி அறியாமல் தான் மக்கள் ஜாலியன்வாலாபாக்கில் கூடியிருக்கின்றனர்.
இது குறித்து கேள்வியுற்ற ஜெனரல் R.E.H. டயர் ஐம்பது கூர்க்க ரைபிள் படை வீரர்களுடன் சென்று ஜாலியன்வாலாபாக் பூங்காவில் இருக்கும் ஒரே ஒரு குறுகிய வாயிலில் நின்று குண்டுகள் தீரும் வரை கூட்டத்திரை சுட உத்தரவிட்டிருக்கிறார்.
இறந்தது எத்தனை பேர்?:
பத்து நிமிடங்கள் 1650 குண்டுகள் நிற்காது முழங்கியிருக்கின்றன. முன்னெச்சரிக்கை கூட இல்லாமல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது தப்பிக்க வழியின்றி பெண்கள், குழந்தைகள் என அனைவரும் குண்டுகளுக்கு இரையாகியிருக்கின்றனர். ஆங்கிலேயே அரசின் கணக்குப்படி இறந்தது மொத்தம் 379, காயமடைந்தவர்கள் 1170. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸோ ஆயிரத்திற்கும் அதிகமானார்கள் இறந்ததாகவும், ஆயிரத்தி ஐநூறு பேருக்கு மேல் காயமுற்றதாகவும் சொன்னது.
நினைவுச்சின்னம்:
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நினைவுச்சின்னமாக ஜாலியன்வாலாபாக் பூங்கா மாற்றப்பட்டது. இங்குள்ள சுவர்களில் படுகொலையின் போது குண்டுகளால் ஏற்ப்பட்ட தடயங்களை இன்றும் காணலாம். குண்டுகளில் இருந்து தப்பிக்க இந்த பூங்காவில் உள்ள கிணற்றில் விழுந்தும் பலர் உயிரிழந்திருக்கின்றனர். அந்த கிணற்றையும் நாம் பார்க்கலாம்.
சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயிலுக்கு பக்கத்திலேயே இந்த ஜாலியன்வாலாபாக் பூங்காவும் அமைந்திருக்கிறது.