நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பள்ளீஸ்வரர் கோயில். இக்கோயிலில் மூலவருக்கு திருவரப்பள்ளியுடையார் என்ற பெயரும் உண்டு. சிவன் இங்கு அறத்தின் உருவமாக சித்தரிக்கப்படுகிறார். எனவே பிறரால் அநீதி இழைக்கப்பட்டவர்கள் சிவனிடம் நீதி வேண்டி வழிபடுகிறார்கள்.
இக்கோவில் அருகில் உள்ள நதியில் வாழும் மீன்களுக்கு இங்கு வரும் பக்தர்கள் உணவு பொருட்களை வழங்குவது வழக்கம். சிலர் மீனைப் பிடித்து மூக்கு குத்தி விளையாடுவதாகவும், சில காலத்திற்கு முன்பு ஒருவர் அங்குள்ள மீனைப் பிடித்து வெட்டிச் சமைக்கத் தொடங்கினாராம்.
குழம்பில் கொதித்த மீன்கள் உயிர்பெற்று தாவிக் குதித்து நதிக்குள் ஓட ஆரம்பித்தனவாம். இந்தச் சமயம் ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. எனவே, இந்த கோவில் ஈஸ்வரனுக்கு, அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயர் வழங்கலானது. தினமும் காலையில் மூலவருக்குப் படைத்த படையலை, இத்தீர்த்தத்திலுள்ள மீன்களுக்கு போடுகிறார்கள்.
இந்த கோயிலில் சிவன் மீன் வடிவில் இருப்பதாக கூறுகின்றனர் பக்தர்கள்எனவே இவர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு முன்பே இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பல்வேறு தின்பண்டங்களைக் கொடுத்து வழிபடுகின்றனர். இதற்குப் பின்னரே இவர்கள் கோவிலுக்கு சென்று சிவனையும் அம்மனையும் வழிபடுகின்றனர்.
Pc: Yosarian -
சித்தர்கள் சேர்ந்து இங்கு சிவலிங்கம் ஒன்றை வடிவமைத்தனர். அதற்கு ஆருஷிலிங்கம் என்று பெயர்.
இக்கோவிலுக்கு கொல்லி அறப்பள்ளி, கொல்லிக்குளிரறைப்பள்ளி மற்றும் சதுரகிரி என்ற பெயர்களுமுண்டு. இக்கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது. சுமார் 280 கி.மீ.பரப்பளவும் 1300 மீட்டர் உயரமும் கொண்ட இம்மலைத்தொடரை சேர வேந்தர்கள் ஆண்டனர். சேர மன்னன் வல்வில் ஓரி ஒரு வள்ளல். சிறந்த வில் வீரனான இவன் ஒரே அம்பில் உடும்பு, காட்டு யானை, காட்டுப்பன்றி, புலி மற்றும் புள்ளிமான் போன்ற விலங்குகளை வீழ்த்திய பெருமைக்குரியவன். இம்மன்னன் ஆண்ட கொல்லிமலை நாட்டின் ஒரு பகுதிக்கு அறப்பள்ளி என்று பெயர். இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள சிவன் அறப்பள்ளீஸ்வரர் என்று பெயர் பெற்றுள்ளார்.