கோவளம் என்ற பெயரைக் கேட்டாலே கேரளாவிலிருக்கும் (திருவனந்தபுரம்) கடற்கரை தான் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகிலும் கோவளம் என்ற பெயரில் ஒர் அழகிய கடற்கரை இருக்கிறது. வங்காள விரிகுடாவின் கோரமண்டல் கடலோர எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் கோவளத்தில் நீங்கள் என்னப் பார்க்க முடியும்?
PC: Kmanoj
அமைதியான கடல் காற்று, வெண்மையாய் மிளிரும் கடற்கரை மணல், வண்ணமிகு கடற்சிற்பிகள், கம்பீரமாய் நிற்கும் பனை மரங்கள், இதமான-மாசு கலவாத--கடல்காற்று, வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் நீர் விளையாட்டுகள் போன்றவைகள் நிறைந்த இந்த ரம்மியமான சூழ்நிலை உங்களை ஈர்த்து உங்கள் மனதை உற்சாகப்படுத்திவிடும்.
சென்னையிலிருந்து ஏறத்தாள 40 கிலோமீட்டர் தென் திசையில், கிழக்கு கடற்கரைச் சாலையில், மாமல்லபுரம் செல்லும் வழியில் கோவளம் என்ற மீனவ கிராமம் அமைந்துள்ளது. தற்சமயம் அதிக பிரபலம் அடைந்து வரும் இந்த கடற்கரையின் அழகு, உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கோவளம் கடற்கரை, சென்னைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு சுற்றுலா ஸ்தலமாகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருப்போரூர் தாலுக்காவிலிருக்கும் இந்த கடற்கரைக் கிராமம் மீன்பிடி தொழிலுக்கும் பெயர் பெற்ற இடமாகும். இந்த கிராமத்து மக்களின் முக்கிய தொழில் மீன்பிடித்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து கோவளம்செல்ல பழைய மகாபலிபுரம் சாலையையோ கிழக்கு கடற்கரைச் சாலையையோ நீங்கள் தேரிந்தெடுக்கலாம். சுற்றுலாப் பயணிகள் வசதியாக கோவளத்திற்குச் செல்ல மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் இயக்கி வருகின்றன. சென்னை கடற்கரையிலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் கரையோரமாக படகின் வழியாகவும் நீங்கள் கோவளத்திற்குப் போக முடியும்.
ஆர்காடு நவாப் சாதித் அலி என்பவர் கோவளத்தை ஒரு துறைமுக நகராக அறிமுகப்படுத்தினார். இந்த பழமையான துறைமுகத்தின் தடயங்களை இன்றும் இங்குக் காணமுடிகிறது. 18 ஆம் நூற்றாண்டில் (காலனி ஆதிக்கக் காலத்தில்) டச்சுக்காரர்கள் இப்பகுதியில் அழகான ஒரு கோட்டையினைக் கட்டினர். பின்னர் ஆர்காடு நவாப் இதனைக் கைப்பற்றினார். அதன் பின்னர் பிரஞ்ச்சுக்கார்கள் கையிலும் ஆங்கிலேயர் கையிலும் சிக்கி, அரைகுறையாகத் தகர்க்கப்பட்ட இந்தக் கோட்டையில் தற்சமயம் ஃபிஷர்மேன்ஸ் கோவ் (ஐந்து நட்சத்திர தகுதி பெற்றது) என்ற ஆடம்பர உல்லாச கடற்கரை விடுதியை தாஜ் ஹோட்டல்களின் குழுமம் நடத்திவருகிறது.
இந்த ஹோட்டல் அமைந்துள்ளப் பகுதியில் கேசுவரினா மரங்கள் காணப்படுகின்றன.
இங்கிருந்து 5 கீ.மீ தொலைவில், கிழக்குக் கடற்கரை சாலையில் தஷின சித்ரா என்ற செயற்கை கிராமம் உள்ளது. இந்த திறந்தவெளி அருங்காட்சியகம் ஆந்திரா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை மற்றும் வழ்க்கை முறையை படம்பிடித்துக் காட்டுகிறது. தஷின சித்ரா அருங்காட்சியகத்திற்கு மிக அருகில் எம் ஜி எம் டிஸ்ஸி வேர்ல்ட் என்ற பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை பூங்கா உள்ளது. எல்லா வயதினருக்கும் ஏற்ற கேளிக்கையும் விளையாட்டுகளும் இங்கு உண்டு.
PC: Wings and Petals
சென்னையில் காணப்படும் மற்ற கடற்கரைகளை விட சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் கோவளத்தில், பாறைகள் மீது அலைகள் மோதி அடிக்கும் காட்சியையும் மணல் நிறைந்த நீண்ட கடற்கரைப் பகுதியையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இந்த கடற்கரையின் வளைவானத் தோற்றம் இதன் அழகை மேலும் மிளிரச் செய்கிறது.
வாரத்தின் இறுதியில், கூட்டமாக வரும் கிராமவாசிகள் கட்டுமரங்களில் ஆர்வத்துடன் ஏறி கடலலைகளுடன் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். கடல் நீரில் கேளிக்கை அனுபவிக்க விரும்புகிறவர்களுக்கு இதுவே சிறந்த கடற்கரை. இங்கு நீங்கள் கடலோர நடைப்பயிற்சி செய்தால் அது உங்கள் மனதிற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.
கண்ணைக் கவரும் இயற்கை எழில் கட்சிகள் நிறைந்த இந்தக் கடற்கரை ஒரத்திற்கு பிரசித்திப் பெற்ற ஆலிவ் ரிட்லெய் வகை கடல் ஆமைகள் குறிப்பிட்ட காலங்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பத்தற்காக வருவது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் முதல் ஏப்ரல் மாதங்களில் இந்த ஆமைகளை நீங்கள் இப்பகுதிகளில் காணலாம். இந்த வகை ஆமைகள், வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மைல்கள் இடப்பெயர்ச்சி செய்து குறிப்பிட்ட சில கடற்கரைப் பகுதிகளுக்குக் கூட்டமாகச் சென்று முட்டையிடுகின்றன.
இந்த நிகழ்வு " அரிபாடா" (ஸ்பெயின் மொழியில் வந்து சேர்தல் என்று பொருள்) என்றழைக்கப்படுகிறது. இந்த ஆமைகள் அதிக அளவில் முட்டைகளையிட்டு புத்திசாலித்தனமாக கடற்கரை மணலில் குழி தோண்டி அவைகளைப் புதைத்து பாதுகாப்பாக வைக்கின்றன.
இங்கு காணப்படும் புனித கார்மேல் அன்னை கத்தோலிக்க தேவாலயம் மிகவும் பழமையானது. சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் இந்த ஆலயத்தை, கி.பி 1870 க்கும் 1780 க்கும் நடுவில் அருட்தந்தை கார்மேலாத்தா அவர்கள் கட்டத் தொடங்கினார். துரதிஷ்டவசமாக கட்டிட பணி முடியும் முன்னர் அவர் இறந்துவிட்டார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், டிமோண்டி என்ற போர்ச்சுகீசிய வியாபாரி இந்த ஆலயத்தை கட்டி முடித்தார் என்பது வரலாற்றுச் செய்தி. இந்த ஆலயம் போர்ச்சுக்கீசிய கலை வண்ணதில் கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
கோவளத்திலிருந்து ஏறத்தாழ 4 கிலோ மீட்டர் தொலைவில் மகாபலிபுரம் போகும் வழியில் திருவடந்தை என்ற இடத்தில் பிரசித்திப் பெற்ற நித்திய கல்யாணப் பெருமாள் கோவில் உள்ளது. திருமணமாகாத ஆண்களோ அல்லது பெண்களோ இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் அவர்களுக்கு திருமணமாகிவிடும் என்பது ஓரு ஐதீகமாகும். மேலும் இந்த கடற்கரை அருகில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள தர்கா ஒன்றும் காணப்படுகிறது.
மீன்பிடி தொழிலுக்குப் பிரபலமான கோவளம் கடற்கரை கிராமத்தில் நீர்சறுக்கு, படகுப்பயணம், ஸ்க்யூபா டைவிங்க் மற்றும் நீச்சல் போன்ற நீர் விளையாட்டுகளுக்கு பஞ்சமில்லை. இந்தியாவின் முதல் நீர்சறுக்கு கிராமமாக விளங்கும் கோவளத்தில் நீர்சறுக்குப் பயிற்சி நடத்தும் நீர்சறுக்குப் பள்ளிகள் உள்ளன. நீர்சறுக்கு விளையாட்டுப் போட்டிகளும் இங்கு நடத்தப்படுவதுண்டு. இந்தியாவின் முதல் நீர்சறுக்கு விளையாட்டு முகாம் இங்குதான் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நீர்சறுக்கு விளையாட்டில் சாகசம் செய்ய விரும்புகிறவர்களுக்கு பல விஷயங்களை இங்குள்ள பயிற்சிக் கூடங்களில் கற்றுத் தருகிறார்கள். நீங்கள் நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட விரும்பினால் அதற்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஏற்ற பருவ காலமாகும். இந்தக் கடற்கரை கிழக்குக் கடற்கரையில் காணப்படும் காற்று நீர்சறுக்குக்கு (wind surfing) பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்று ஆகும்.
PC: Wings and Petals
இங்கிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் தான் மகாபலிபுரம் (மாமல்லபுரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு) இருக்கிறது. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய இந்த நகரத்தில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுகளும் எழில்மிகு சிற்பங்களும் உங்களை வியப்பில் ஆழ்த்திவிடும். இங்கிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில், சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம், ஒரு ஊர்வன காப்பு மையமாகவும் ஊர்வனவியல் தொடர்புடைய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சிக்கூடமாகவும் செயல்படுகிறது.
அன்றாட வாழ்வின் அழுத்தம் நிறைந்த பணிச்சுமைகளிலிருந்தும் மன இறுக்கத்திலிருந்தும் விடுபட்டு அமைதியாக இயற்கையுடன் நேரத்தை செலவு செய்ய விரும்புகிறவர்கள் அவசியம் சந்திக்க வேண்டிய இடம் கோவளம் கடற்கரை.