ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்களைக்கொண்டு சிறப்பான நகரமாக விளங்கிய இந்த தலக்காடு நகரத்தின் ஆதி கட்டமைப்பு 16ம் நூற்றாண்டில் மணலில் புதையுண்டது.3
உடையார்களின் ஆட்சிக்காலத்தின் போது நிகழ்ந்த இயற்கைப்பேரிடர் சம்பவத்தால் இப்படி நிகழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பின் உள்ளூர் ஐதீகக்கதைகள் வேறுவிதமான நம்பிக்கைகள் மூலமாக சொல்லப்படுகின்றன.
அதாவது இந்தப் பிரதேச ராணியான அலமேலு என்பவரின் சாபத்தால் தலக்காடு நகரம் மண்ணில் புதையுண்டு போனதாக அந்த கதைகள் தெரிவிக்கின்றன.
மைசூர் உடையார் வம்சம்
ஒரு காலத்தில் ஐந்து புகழ் வாய்ந்த சிவன் கோயில்களை சிறப்பாகக் கொண்டிருந்த இந்த தலக்காடு நகரம் முதலில் கங்க வம்சத்தினராலும் பின்னர் சோழர்களாலும் ஆளப்பட்டுள்ளது. பின்னர் ஹொய்சள மன்னர் விஷ்ணுவர்த்தனால் சோழர்கள் வெல்லப்பட்டனர். இறுதியில் இந்த நகரம் விஜயநகர அரசர்களால் ஆளப்பட்டு கடைசியாக மைசூர் உடையார் வம்ச ஆட்சியாளர்கள் வசம் வந்தது.
Dineshkannambadi
சாபம்
மைசூர் ராஜா தலக்காடு பகுதியை நோக்கி படையெடுத்தபோது ராணி அலமேலு தன் நகைகளை காவிரியில் வீசிவிட்டு தானும் அந்த நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்படி அவர் இறப்பதற்குமுன் ஒரு சாபத்தையும் விதித்துவிட்டு இறந்ததாக நம்பப்படுகிறது.
Dineshkannambadi
மண் மூடிப்போகும்
அதாவது எதிரி வசம் சென்ற தலக்காடு நகரம் மண் மூடிப்போகும் என்றும், ‘மலங்கி' சுழலாக மாறும் என்றும் மைசூர் மன்னர் வம்சம் தலைமுடி இழந்து போவார்கள் என்றும் அவர் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் பழைய தலக்காடு நகரம் மண் மூடிப்போனதாக அறியப்படுகிறது.
Arun Joseph
உள்ளூர் பாரம்பரியமும் பண்பாடும்
இந்த தலக்காடு நகரம் இங்குள்ள ஐந்து முக்கியமான கோயில்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. வைத்யநாதேஸ்வரர் கோயில், பாதாளேஷ்வரர் கோயில், மருளேஷ்வரர் கோயில், அர்கேஷ்வரர் கோயில் மற்றும் மல்லிகார்ஜுனா கோயில் என்பவையே அவை. இந்த எல்லா கோயில்களும் மண் மூடியே காணப்படுகின்றன என்ற போதிலும் தற்சமயம் இவற்றை முழுதும் வெளிக்கொணர திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இவை தவிர கீர்த்திநாராயணா கோயில் எனப்படும் ஒரு விஷ்ணு கோயிலும் ஐந்து சிவன் கோயில்கள் மத்தியில் காணப்படுகிறது. இது இப்போது மறு கட்டுமானம் செய்விக்கப்படும் நிலையில் உள்ளது.
Dineshkannambadi
காவிரிக்கரையிலிருந்து
காவேரி ஆறு இந்த நகரத்தின் வழியாக ஒடுவதுடன் இங்கு ஒரு திடீர் வளைவையும் தன் பாதையில் கொண்டுள்ளது. எனவே இந்த காவிரிக்கரையிலிருந்து தெரியும் இயற்கைக்காட்சிகள் அற்புதமாய் காணப்படுகின்றன.
இந்த நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒரு நடத்தப்படும் பஞ்சலிங்க தரிசனம் எனும் திருவிழா மிக பிரசித்தமாக அறியப்படுகிறது. கடைசி பஞ்சலிங்க தரிசனம் 2009ம் ஆண்டு நடந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி நாளில் குஹயோக நட்சத்திரமும் விசாக நட்சத்திரமும் சேரும் நாளில் இந்த தரிசனம் நடைபெறுகிறது.
రవిచంద్ర
இதர சுற்றுலா தலங்கள்
தலக்காடு நகரத்துக்கு வருகை தரும் பயணிகள் அருகில் சோம்நாத்பூர், சிவானசமுத்ரம், மைசூர், ரங்கப்பட்டணா, ரங்கணாத்திட்டு மற்றும் பண்டிபூர் போன்ற இதர சுற்றுலா தலங்களுக்கும் செல்லலாம்.
Ashwin Kumar
எப்படி செல்லலாம்
தலக்காடு ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய உகந்த காலம் நவம்பர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும். இக்காலத்தில் சீதோஷ்ணநிலையும் சூழலும் இனிமையாக காணப்படுகிறது.
மைசூர் மாவட்டத்தில் உள்ள தலக்காடு நகரம் மைசூரிலிருந்து 43 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 120 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு முக்கியமான பெருநகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால் தலக்காடு ஸ்தலத்துக்கு விஜயம் செய்வது மிக எளிமையாக உள்ளது.
Muhammad Mahdi Karim
உணவகங்கள்
சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் அதிகமாக உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் உள்ளூர் உணவை ருசி பார்த்து மகிழலாம். தலக்காடு நகரத்தில் பல தரமான தங்கும் விடுதிகள் நிறைந்துள்ளன. வரலாறு மற்றும் புராணிக நம்பிக்கைகளில் ஆர்வம் உள்ள பயணியாக இருப்பின் உங்களை நிச்சயம் தலக்காடு நகரம் வசீகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
அர்கேஷ்வரா கோயில், மருளேஸ்வரா கோயில், மல்லிகார்ஜுனா கோயில், கீர்த்தி நாராயணா கோயில், திருமாகூடல் நர்சிபூர், பாதாளேஸ்வரர் கோயில், சென்னக்கேசவா கோயில், வைத்யாநாகேஸ்வரா கோயில், பி ஆர் மலைகள், மைசூர், காவிரி ஆறு, ஸ்ரீரங்கப்பட்டிணம், தலக்காவிரி என நிறைய இடங்கள் அருகாமையில் உள்ளன.
அள்ளிக்கொடுக்கும் அர்கேஷ்வரா கோயில்
இந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்காக 12 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பஞ்சலிங்க தரிசனம் எனும் சிறப்பு பூஜைத்திருவிழா நாடெங்கிலுமிருந்தும் பக்தர்களை வரவழைக்கின்றது. இக்கோயிலில் உள்ள பைரவர், துர்கை, அபயங்கரலிங்கம் போன்ற சிலைகள் பக்தர்களை பெரிதும் கவர்கின்றன. இந்த கோயில் வாசலிலில் ஒரு பாறையின் அருகில் பொதிக்கப்பட்டுள்ள வாஸ்து யந்திரத்தையும் பயணிகள் காணலாம். மேலும் இந்த பாறையில் பசுக்களை கட்டிவைத்தால் அவற்றுக்குள்ள பிணிகள் தீரும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
முன்ஜென்ம பாவம் போக்கும் மருளேஷ்வரா கோயில்
ஒரு பெரிய சிவலிங்கம் அமைந்துள்ள இந்த மருளேஷ்வர் கோயிலும் தலக்காடு ஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் தவறாது பார்க்க வேண்டிய அம்சமாகும். கங்க மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலில் உள்ள பெரிய சிவலிங்கம் பிரம்மாவால் அனுக்கிரகிக்கப்பட்டதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. பஞ்சலிங்க தரிசனத்தின் போது பக்தர்கள் விஜயம் செய்யும் ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த மருளேஷ்வரர் கோயிலில் திருமால், வீரபத்ரர், மகேஷ்வரர், சண்முகர், அம்பிகை, நவகிரகங்கள், கணபதி மற்றும் சூரியா போன்றோரின் சிலைகளை பக்தர்கள் பார்க்கலாம். விஷ்ணுவுக்கான கோயிலான கீர்த்தி நாராயணா கோயிலுக்கு அருகிலேயே இந்த கோயில் அமைந்துள்ளது.
Dineshkannambadi
மங்கள அருள் மல்லிகார்ஜுனா கோயில்
தலக்காடு நகரத்துக்கு வருகை தரும் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு கோயில் இந்த மல்லிகார்ஜுனா கோயிலாகும். இது பிரம்மராம்பிகை தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மல்லிகார்ஜுன ஸ்வாமியின் சிறிய லிங்கமும் காணப்படுகிறது. நெருங்கிப்பார்த்தால் இந்த லிங்கத்தின் மீது சில சுவடுகளைப்பார்க்கலாம். இந்த தடங்கள் காமதேனுப்பசுவினுடையவை என்று ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன. சந்தியா கணபதி, வீரபத்ரர் மற்றும் சாமுண்டீஸ்வரி சன்னதிகளும் இந்த கோயில் வளாகத்தில் உள்ளன.
Ashwin Kuma
கல்வி யோகம் அளிக்கும் கீர்த்தி நாராயணா கோயில்
ஆதியில் சுந்தரவல்லி தாயார் சன்னதியும் இந்த கோயிலில் இருந்துள்ளது. அது பின்னர் நவரங்க மண்டபமாக மாற்றப்பட்டு கீர்த்தி நாராயணாவின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் வளாகத்தில் நம்மாழ்வார், ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகரின் சிலைகளும் காணப்படுகின்றன. விஸ்வநேசர் மற்றும் யோக நரசிம்மர் சிலைகளைக்கொண்டுள்ள அர்த்த மண்டபமும் இந்த கோயிலினுள் அமைந்துள்ளது.9 அடி உயரம் கொண்ட விஷ்ணுவுன் சிலை இந்த கீர்த்தி நாராயணா கோயிலின் விசேஷமான அம்சமாகும்.இந்த சிலை ஒரு கருட பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களிலும் சக்கரம், கதை, தாமரை மலர், சங்கு போன்றவற்றுடன் இந்த சிலை காட்சியளிப்பதை பக்தர்கள் காணலாம்.
செல்வம் அருளும் திருமாகூடல் நர்சிபூர்
நேரம் இருப்பின் பயணிகள் தலக்காடு அருகிலுள்ள மற்றொரு முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமான திருமாகூடல் நர்சிபூருக்கும் விஜயம் செய்யலாம். இது தலக்காட்டிலிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த ஸ்தலமானது தென்னிந்தியாவில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்ப மேளா திருவிழா நடைபெறும் இடமாகும். வட நாட்டிலுள்ள பிரயாக் ஸ்தலத்தைப்போன்றே மகிமை உடையதாக ஹிந்துக்களால் கருதப்படும் இந்த ஸ்தலம் தக்ஷிண காசி என்றும் அறியப்படுகிறது.இந்த ஸ்தலத்தில் உள்ள கோயில்களிலேயே குறிப்பிடத்தக்கது குஞ்ச நரசிம்ம ஸ்வாமி கோயிலாகும். இது திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இது அதிக அளவில் பக்தர்களால் விஜயம் செய்யப்படுகிறது.
Prof tpms
பாவம் போக்கும் பாதாளேஷ்வரர் கோயில்
தலக்காடு சுற்றுலாஸ்தலத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க கோயில் இந்த பாதாளேஷவரர் கோயில் ஆகும். கங்க மன்னர்களால் கட்டப்பட்ட ஆரம்பகால கோயிலாக இது கருதப்படுகிறது. இந்த கோயிலில் ஒரு விசேஷமான சிவலிங்கம் ஒன்று உள்ளது. இது ஒரு நாளின் வெவ்வேறு பொழுதுகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிப்பது ஒரு அதிசயமாக அறியப்படுகிறது. காலையில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் மதிய நேரத்தில் கருப்பு நிறத்திலும் இரவு நேரத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சலிங்க தரிசனத்திருநாளின்போது இங்கும் பக்தர்கள் இந்த விசேஷ லிங்கத்தை பார்க்க வருகை தருகின்றனர்.
திருகோண வடிவ சென்னக்கேசவ கோயில்
தலக்காடு நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சோமநாதபுரம் கிராமத்துக்கும் விஜயம் செய்யலாம். இந்த கிராமம் இங்குள்ள அருள்மிகு வேணுகோபால சாமி கோயில் மற்றும் சென்னக்கேசவா கோயிலுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. வேணுகோபால ஸ்வாமி கோயில் 1296 ம் ஆண்டு ஹொய்சள அரசரான நரசிம்மாவால் கட்டப்பட்டுள்ளது. கேசவா கோயில் என்றும் அறியப்படும் சென்னக்கேசவா கோயில் 1268 ம் ஆண்டு ஹொய்சள தளபதி சோமநாதரால் இரண்டாம் நரசிம்மர் காலத்தில் கட்டுவிக்கப்பட்டுள்ளது.சென்னக்கேசவா கோயில் ஒரு திரிகோண நட்சத்திர வடிவில் அமைந்த மேடையின் மீது எழுப்பப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் பயணிகள் முதலில் தூண்களால் ஆன ஒரு கூடத்தினைக் காணலாம். இந்தக்கூடமானது அந்த திரிகோண கட்டமைப்புகளுக்கான வழியாய் நீள்கிறது.
రవిచంద్ర
தமிழர்கள் கட்டிய வைத்யநாதேஸ்வரா கோயில்
தலக்காடு தலத்துக்குவ் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பக்தர்கள் நேரம் இருப்பின் இங்குள்ள வைத்யநாதேஸ்வரா கோயிலுக்கும் வருகை தருவது அவசியம். இங்கு மனோன்மணி தெய்வம், முருகன் மற்றும் கணபதி சிலைகள் உள்ளன. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மண்டபத்தில் துர்க்கை, சிரத்தாம்பிகை, நடராஜர், பத்ரகாளி மற்றும் காளிகாம்பாள் போன்றோரின் சிலைகளையும் பார்க்கலாம். மண்ணில் புதைந்த நிலையில் காணப்படும் இந்த கோயில் சோழர்களின் ஆட்சியின்போது 14ம் நூற்றாண்டில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.நவரங்கா எனப்படும் பிரதான வாயிலில் இருபுறமும் பெரிய அளவிலான துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன. கோயிலின் கிழக்கு வாயிலானது நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இங்கு கருவறையில் ஒரு பிரம்மாண்டமான சிவலிங்கம் அமைந்துள்ளது.
Dineshkannambadi
பண்பாட்டு நகரம் மைசூர்
அரண்மனை நகரம் என்று மிக பொருத்தமாக அழைக்கப்படும் மைசூர் மாநகரத்தில் பல அரண்மனைகள் அமைந்துள்ளன. மைசூர் அரண்மனை அல்லது அம்பா அரண்மனை என்று அழைக்கப்படும் பெரிய அரண்மனையானது இந்தியாவிலேயே அதிகம் சுற்றுலாப் பயணிகளால் தரிசிக்கபடும் நினைவு சின்னமாகும். அது தவிர மைசூர் வனவிலங்கு காட்சியகம், சாமுண்டீஸ்வரி கோயில், மஹாபலேஸ்வரா கோயில், செயிண்ட் ஃபிலோமினா சர்ச், பிருந்தாவன் கார்டன், ஜகன்மோஹன் அரண்மனை ஓவியக்கூடம், லலித் மஹால் அரண்மனை, ஜயலட்சுமி விலாஸ் மாளிகை, ரயில்வே மியூசியம், கரன்ஜி ஏரி மற்றும் குக்கார ஹள்ளி போன்றவை மைசூரின் பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்.
Jim Ankan Deka
வேண்டியதை அருளும் திருவரங்கப்பட்டிணம்
ஷீரங்கப்பட்டணா பெங்களூரிலிருந்து 127 கி.மீ தூரத்திலும் மைசூரிலிருந்து 13 கி.மீ தூரத்திலும் உள்ளது. இங்கு ரயில் நிலையம் இருப்பதோடு அருகில் மைசூரில் விமான நிலையமும் உள்ளது. பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருப்பதால நல்ல சாலை வசதியையும் போக்குவரத்து வசதிகளையும் ஷீரங்கப்பட்டணா கொண்டுள்ளது.
ஸ்ரீரங்கப்பட்டிணம் அமைந்திருக்கும் இடம் ஒன்றே போதும், வரலாற்று பின்னணி கொண்ட இந்த சுற்றுலா ஸ்தலத்தின் அருமையை விளக்குவதற்கு. காவிரி ஆற்றின் இரு கிளை ஆறுகளால் சூழப்பட்டு உருவாகியுள்ள ஒரு தீவுதான் ஸ்ரீரங்கப்பட்டிணம். மைசூருக்கு வெகு அருகில் உள்ள இந்த தீவு நகரம் சுமார் 19 ச.கி.மீ பரப்பளவைக்கொண்டுள்ளது.
Prof. Mohamed Shareef
துன்பங்களை விரட்டும் தலக்காவிரி
தலைக்காவிரி இந்துக்களின் முக்கியமான புனித பயண தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த தலம் காவிரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது.
தலைக்காவிரி தீர்த்தவாரியில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது பக்தர்கள் மத்தியில் பரவலான நம்பிக்கையாக உள்ளது. தலைக்காவிரி பகுதியில் பாகமண்டலா என்ற மற்றொரு இடமும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். காவேரி, கனகே, சுஜ்யோதி என்ற மூன்று ஆறுகளும் ஒன்று சேரும் இடம் இந்த பாகமண்டலமாகும். தலைக்காவிரியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இது அமைந்துள்ளது.இந்த ஸ்தலத்துக்கு அருகில் கணபதிக்கடவுள், சுப்ரமணியசுவாமி மற்றும் விஷ்ணுவுக்கான கோயில்கள் உள்ளன.