நரகாசுரன், சூரியன் முதலானோர் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது. சூரியன் வழிபட்டதாக கருதப்படும் இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதத்தில் சூரிய கிரகணங்கள் மூலவர் மீது நேராக விழுகிறதாம்.
இக்கோயிலின் இறைவன் பெயர் நாகேசுவரர், இறைவி பெரியநாயகி. தமிழகத்தில் உள்ள நாக கோயில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோயில் ஆகியன மற்ற பிற நாக கோயில்களாகும்.
அமுத குடத்துக்கு அருச்சித்த வில்வம் விழுந்த இடத்தில் சிவக்குறியொன்று தோன்றியது. அத்தலம் வில்வவனேசம் எனப்பெயர் பெற்றது. இத்தலம் நாகேசம் என்றழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இங்கு நாகராசன் பூசித்தால் இறைவன் நாகேசப்பெருமானாகத் திகழ்கின்றார். திருநாவுக்கரசர் இத்தலப் பெருமானைப் பாடும்போது குடந்தைக் கீழ்க்கோட்டம் என்கிறார். கும்பகோணம் பாஸ்கரசேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலமே சான்றாகும்.
இத்தலத்து இறைவன் நாகேஸ்வரர். வில்வத்தில் இருந்து தோன்றியதால் வில்வனேசர் என்றும், ஆதிசேடனுக்கு அருள் செய்ததால் நாகேசுவரர் என்றும், பாதாளத்தில் இருப்பதால் பாதாள லிங்கேசர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி அம்மை
இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே இடப்பக்கம் நந்தவனம், சிங்கமுக தீர்த்தக் கிணறு உள்ளது. வலப்பக்கம் பெரியநாயகி சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே சென்றால் இடது பக்கம் பதினாறு கால் மண்டபமும் வலது பக்கம் நடராஜ சபையும் உள்ளன.
நடராஜ மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இரு புறங்களிலும் உள்ள கல் (தேர்ச்) சக்கரம் உள்ளது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத் தேர்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர் 'ஆனந்தத் தாண்டவ நடராஜ சபை'. இங்கு சிவகாமியம்மை நடனத்திற்குத் தாளம் போடும் பாவத்திலும், மகாவிஷ்ணு குழலூதும் பாவத்திலும் உள்ளனர்.
இந்த கோவிலின் முன்பு சுமார் 35 அடி உயரத்தில் கொடிமரம் உள்ளது. கோவில் திருவிழாக்களின் போது இந்த கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்குவது வழக்கமாகும். இந்நிலையில் கொடிமரத்தின் மேல்பகுதியில் சுமார் 5 அடி உயரத்திற்கு சேதமடைந்தது. கும்பகோணத்தில் இளைய மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் சேதமடைந்துள்ள கொடி மரத்தை சீரமைக்கும் பணி 6.2.2015 அன்று தொடங்கியது. கொடி மரத்தை சுற்றிலும் சவுக்கு கட்டைகளால் சாரம் அமைக்கப்பட்டு சீரமைப்பு பணித் தொடங்கியுள்ளது. பணி நடைபெறுவதை அறிந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். [5] 29 ஜனவரி 2016 அன்று கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது
சிவராத்திரி தொடர்பு
நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.
- இந்தியாவில் அழியும் நிலையில் இருக்கும் 15 அற்புத இடங்கள் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?