ஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். இது பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இதன் வரலாறு காலனி ஆட்சிக் காலந்தொட்டு நீள்கிறது. அந்தக் காலங்களில் ஏலகிரி முழுவதும் ஏலகிரி ஜமீன்தார்களின் தனிப்பட்ட சொத்தாக இருந்தது. அவர்களின் வீடு இன்றும் ரெட்டியூரில் உள்ளது.
பல்வேறு பழங்குடியின மக்கள் வாழும் ஏலகிரி, தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களான ஊட்டி, கோடைக்கானல் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. இருப்பினும், சமீபகாலமாக ஏலகிரி மாவட்ட நிர்வாகம் பாராக்ளைடிங், மலையேறுதல் முதலிய விளையாட்டு வகைகளை பிரபலப்படுத்துவதன் மூலம் ஏலகிரியை ஒரு சாகச சுற்றுலா மையமாக பிரபலப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
ஏலகிரிக்கு வந்து சேர்ந்தவுடன் முதலில் ஒருவர் கவனத்தைக் கவருவது இதன் அமைதியான சூழலும் கிராமீய மணம் கமழும் அழகும் தான். பூந்தோட்டங்கள் , புல்வெளிகள் மற்றும் பழத்தோட்டங்களால் சூழப் பட்டிருப்பதால் இவ்விடம் பழங்கள் மற்றும் இலைதழைகளின் வாசம் சூழ்ந்து காணப்படுகிறது. அழகிய இயற்கை வளம் சூழ்ந்த பாதைகளின் வழியே பயணம் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இங்கு சுற்றிப் பார்ப்பதற்கான இடங்களுள் வேலவன் கோயில் முதலான கோயில்களும், சுவாமிமலை குன்று முதலான மலை வாசஸ்தலங்களும், மலையேறும் பாதைகளும் அடங்கும்.
இயற்கைப் பிரியர்களுக்கு இங்கே இயற்கையான பூங்காக்களும், அரசின் மூலிகை மற்றும் பழத்தோட்டங்களும் உள்ளன. நட்சத்திரங்களைக் கண்டு ரசிப்பதில் விருப்பமுள்ளவராக இருந்தால் வேணு பாப்பு சூரிய ஆய்வு மையத்திற்கும் தொலைநோக்கி இல்லத்திற்கும் செல்ல மறக்க வேண்டாம்.
ஏலகிரிக்கு செல்ல சிறந்த சமயம் குளிர்கால மாதங்களான நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் தான். இருப்பினும் ஆண்டு முழுமைக்கும் இங்குள்ள காலநிலை மிதமானதாகவே இருக்கும்.